Sunday, February 26, 2023

இங்கு கலங்குவதாலோ கவலைப்படுவதாலோ எதுவும்
 நடக்கப் போவதில்லை 

ஒருநாள் ஒருபடியேனும் உருப்படியாய் ஏறு 
ஒவ்வொரு நாளும் தவறாமல் ஏறு
சறுக்கிடும் வழுக்கிடும் கலங்காதே கவலைப்படாதே கற்றுக்கொள்
கரை சேர்வாய் 

இங்கு தோல்வி என்ற ஒன்று இல்லை எல்லாம் வெற்றிக்கான பட்டறிவு படிகள் தான் 

வெற்றியின் வாயில் காவலன் தோல்விதான் 
அவனை சந்திக்க நேர்ந்தால்
நீ வெற்றியின் வாயிலில் இருக்கிறாய் என்று உணர்ந்து கொள்

எல்லாம் உன்னுள் இருக்கிறது 
உன்னை நம்பு உழைத்திடு
உலகை உன்னதாய் ஆக்கிடு.

-சாமி.

Saturday, February 25, 2023

ஆசிரியர் -மாணவன்

நான் கற்பிக்கவும் இல்லை
 நீ கற்றுக் கொள்ளவும் இல்லை 
நம்மில் நடப்பது உரையாடல் தான்

 நான் வழி காட்டவும் இல்லை 
நீ வழி நடக்கவும் இல்லை 
சேர்ந்தே தான் நடக்கிறோம்

 நான் எதையும் கொடுக்கவும் இல்லை 
நீ எடுத்துக் கொள்ளவும் இல்லை சேர்ந்தே தான் தேடுகிறோம் 

நான் எதையும் சொல்லவுமில்லை
நீ கேட்கவுமில்லை
 சேர்ந்தே தான் சிந்திக்கிறோம் 

நான் ஒன்றும் வெளிச்சமும் இல்லை 
நீ இருளும் இல்லை
 நாம் இருவருமே சூரியன் தான் 

நான் பெரியவனும் இல்லை
 நீ சிறியவனும் இல்லை 
சகப் பயணியாய் தான் பயணிக்கிறோம்

 நான் ஆசிரியனும் இல்லை 
நீ மாணவனும் இல்லை 
இருவருமே தான் கற்கிறோம்.

-சாமி.

Friday, February 24, 2023

வாழ்க்கை என்றால் என்ன?

வாழ்க்கை என்றால் என்ன?

 ஒவ்வொருத்தவரிடமும் ஒவ்வொரு பதில்

 இத்தருணத்தில் வாழ்வதே வாழ்க்கை என்பார் ஒருவர்

அடுத்தவருக்கு உதவிடுவதே வாழ்க்கை என்பார் இன்னொருவர்

அன்பு செய்வதே வாழ்க்கை என்பார் ஒருவர்

 குடும்பத்திற்கு உழைப்பதே வாழ்க்கை என்பார் மற்றொருவர்

 பயமில்லாமல் வாழ்வதே வாழ்க்கை என்பார் ஒருவர் 

நாட்டுக்காக வாழ்வது வாழ்க்கை என்பார் இன்னொருவர் 

நம் இயல்பாய் வாழ்வதே வாழ்க்கை என்பார் ஒருவர் 

அடுத்தவரை மன்னிப்பதே வாழ்க்கை என்பார் இன்னொருவர்

 உயிரோடு இருப்பதே வாழ்க்கை என்பார் ஒருவர்

நோயற்று வாழ்வதே வாழ்க்கை என்பார் இன்னொருவர் 

நோக்கமுடன் வாழ்வதே வாழ்க்கை என்பார் ஒருவர் 

விட்டுக் கொடுத்து வாழ்வதே வாழ்க்கை என்பார் ஒருவர்

 பதில் இல்லா கேள்விதான் 'வாழ்க்கை'  என்கிறார் ஓஷோ 

அப்பதிலை தேடுவது தான் வாழ்க்கை என்கிறேன் நான்.

-சாமி.

அர்த்தமுள்ள மௌனம்

என் பெரும்பாலான கேள்விக்கு உன் பதில் மௌனம் தான்,
உன்னை புரிந்ததனால்
உன் மௌனத்தின் அர்த்தமும்
நன்றாகவே புரிகிறது எனக்கு.

-சாமி.

Sunday, February 19, 2023

அக்கறை

இன்பமோ துன்பமோ என் விரல்கள் தொடுதிரையை தொட்டு உன்னைத்தான் அழைக்கிறது பகிர்ந்துக்கொள்ள

 நம்பிக்கை இழக்கும் போதெல்லாம் கற்பனையில் உன் விரல் பற்றியே நடக்கிறேன் 

ஆறுதல் தேவைப்படும்போதெல்லாம் உன் தோள்களை தான் தேடி அலைகிறேன் 

கனிவு தேவைப்படும் போதெல்லாம் உன் கண்களைத் தான் தேடுகிறேன்

 உன்னிடமிருந்து எனக்கு ஒன்றுமே வேண்டாம் உன் அக்கறையை மட்டும் தந்து விட்டுப் போ அது என்னை கரை சேர்க்கும்.

-சாமி.
நான் அடை மழையாய்
கொட்டும் வார்த்தைகளுக்கு
மௌன தூரலாய் வருகிறது உன் பதில்

தூரல்தான் அழகு என்பதை சொல்லிதான்
தெரிய வேண்டுமா என்ன.

சாமி.

Friday, February 17, 2023

படித்ததில் பிடித்த வரிகள்

நீ சொல்லவும் 
இல்லை...
நான் கேட்கவும்
இல்லை...
இத்தனை ஆண்டுகளாகியும்...
இன்னும்...
நீயும் ...
கேட்கவில்லை...
நானும்... 
சொல்லவில்லை...
நாம் பிரியவும் இல்லை... 
நாம் சேரவும் இல்லை....
இருந்தாலும்... 
நம் இதயத்தில்...
ஏதோ...
ஓர் ஓரமாய்...
ஓசையின்றியே... 
துடித்துக் கொண்டு தான் 
இருக்கிறது... 
'அக்கறை' என்ற பெயரில் 
என் மீது நீயும்...
உன் மீது நானும்...
பரிமாறிக் கொள்ளும்... 
நம் காதல்...💜

 ✨ கண்ணம்மா