Monday, May 21, 2018

மகிழ்ச்சிகரமாக வாழ 40 வழிகள்!!!

மகிழ்ச்சிகரமாக வாழ 40 வழிகள்!!!

1. தினமும் 10லிருந்து 30 நிமிடங்கள் நடந்து செல்லுங்கள். அவ்வாறு செல்லும் போது சிரித்த முகமாகச் செல்லுங்கள்.

2. தினமும் ஒரு 10 நிமிடங்களாவது, எந்த சிந்தனைகளும் இல்லாமல் அமைதியாக கண்ணை மூடி அமருங்கள்.

3. தினமும் ஏழு மணி நேரம் உறங்குங்கள்.

4. எப்போதும் இரக்கம், உற்சாகம், ஊக்கம், கருணை ஆகிய குணங்கள் மனத்தில் நிறைந்திருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

5. அதிக நேரம் ஏதாவது விளையாடுங்கள்.

6.  அதிகமான ஆன்மீக மற்றும் விஞ்ஞான  புத்தகங்களை படியுங்கள்.

7. உங்கள் தினசரி அலுவலில் தியானம், யோகம், வழிபாடு போன்றவற்றிற்கு இடம் கொடுங்கள். இவை உங்கள்  வாழ்க்கைக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.

8. உங்கள் ஓய்வு நேரத்தை 70 வயது கடந்த முதியவர்களுடனும், ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளுடனும் செலவழியுங்கள்.

9. அடிக்கடி நிறைய கனவு காணுங்கள், விழித்திருக்கும் போது!

10. மரங்களிலும்,செடி கொடிகளிலும் விளையும் உணவுப்பொருட்களை பச்சையாக அப்படியே  நிறைய உண்ணுங்கள்.

11. தினசரி மூன்று நபர்களையாவது மகிழ்ச்சிப்படுத்துங்கள்.

12. தினமும் நிறைய தண்ணீர் அருந்துங்கள்.

13. உங்களுக்குள் உன்னதமான ஆற்றல் மறைமுகமாக இருப்பதை உணருங்கள்,

14. நீங்கள் எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் வானில் சுதந்திரமாக பறக்கும் பறவையாக உணருங்கள்.

15. பாசிட்டிவான  எண்ணங்களை உங்களின் மனதில் தினமும்  ஐந்துமுறை உருவாக்கும் வழக்கத்தை ஏற்படுத்தி வாழுங்கள்.

16. நீங்கள் வாழ்கின்ற வாழ்க்கையே உலகில் சிறப்பானது என்று உணருங்கள்.

17. உங்களின் காலை உணவை ஓர் அரசன் போல அருந்துங்கள்; மதிய உணவை ஓர் இளவரசன் போல உண்ணுங்கள்; இரவு உணவை ஒரு பிச்சைக்காரன் போல உண்ணுங்கள்.

18. நன்றாக வாய்விட்டு சிரியுங்கள்.

19. எல்லோரிடமும் அன்பு கொண்டு வாழ்ந்தால் இறைவனும் உங்களிடம் அன்பு செலுத்துவான் என்பதை புரிந்து கொள்ளுங்கள்,

20. வாழ்க்கையை டேக் இட் ஈஸி'யாக எடுத்துக் கொள்ளுங்கள்.

21. அனாவசியமான விவாதங்களில் கலந்து கொள்ளாதீர்கள்.

22. உங்களின் கடந்தகால வாழ்க்கையை மிகவும் சிறப்பான முறையில் இறைவன் நடத்தி வந்துள்ளார் என்பதை உணர்ந்து இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.

23. மற்றவர்களுடைய வாழ்க்கையுடன் உங்களுடைய வாழ்க்கையை ஒப்பிட்டு உங்களை உருவாக்கிய இறைவனை தயவுசெய்து கேவலப்படுத்தாதீர்கள்.

24. உங்களுடைய மகிழ்ச்சிக்கும், மன அமைதிக்கும் காரணம்,   கடவுள் உங்களிடம் காட்டும் கருணைதான் என்பதை என்றுமே மறவாதீர்கள். 

25. எவரையும், எதற்காகவும், எந்த சந்தர்ப்பத்திலும் மன்னிக்கத் தயாராக இருங்கள்.

26. ‘உங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள்’ என்று யோசிப்பதை தவிருங்கள். உங்களைப்  பற்றி என்றுமே உயர்வாக எண்ணும் பழக்கத்தை கைவிடாதீர்கள்.

27. இதுவரை உங்களை காப்பாற்றி வந்த கடவுள் இனியும்  உங்களை என்றென்றும் காப்பாற்றுவார்  என்பதை மனதார உணருங்கள்.

28. நல்லதே நடக்கும் என்று நம்புங்கள்.

29. உங்களுடைய இன்பத்தில் பங்கெடுத்துக் கொள்பவர் அனைவரையும் மிக அதிக அளவில் பாராட்டுங்கள்.  அவர்களிடம் நிரந்தரமாக தொடர்பு வைத்திருங்கள். 

30. உங்களுக்கு  மகிழ்ச்சியளிக்காதவை எதுவாக  இருந்தாலும் அவைகளிடம் இருந்து விலகி ஓடி  விடுங்கள்.

31. உங்கள் தேவைக்கு  அதிகமாகவே அனைத்தையும் உங்களுக்கு தந்து வருகிற இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.

32. வாழ்வின் 'உன்னதம்' என்பது ஏற்கெனவே உங்களுக்கு  முழுவதுமாக நிச்சயம் வந்து விட்டது என்று நம்புங்கள்.

33. நீங்கள் எந்த மனநிலையில் இருந்தாலும் நன்றாகக் குளித்து, சுத்தமான ஆடையை அணிந்து கொள்ளுங்கள்.

34. உங்களுக்கு நன்மை என்று தோன்றும் செயல்களை உடனே செய்யுங்கள்.

35. எத்தனை 'பிஸி'யாக இருந்தாலும் குடும்பத்தினருடன் பேசி மகிழுங்கள்.

36. உங்களுக்கு உள்ளே இருக்கும் 'ஆன்மா' எப்போதும் ஆனந்தமாக இருப்பதை உணர்ந்து, நீங்களும் ஆனந்தமாக இருங்கள்.

37. தினசரி மற்றவருக்குப் பயனளிக்கும் வகையில் ஒரு சிறிய செயலையாவது செய்யுங்கள்.

38. நீங்கள் வரம்பே இல்லாத வலிமை பெற்றவர் என்பதை அறிந்து எந்தச் செயலிலும் துணிந்து  இறங்குங்கள்.

39. நீங்கள் காலையில் கண் விழித்தவுடன் கடவுளுக்கு நன்றி தெரிவியுங்கள்!

40. நீங்கள் தூங்கும் முன்பு மகிழ்ச்சிகரமான தினத்தை தந்த இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.

வாழ்க வலிமையுடன்!!!
படித்ததில் பிடித்தது.

Sunday, May 20, 2018

கதை

சீன அதிபர் சொன்ன தத்துவ கதை...!

``சிறு வயதில் நான் மிகுந்த சுயநலக்காரனாக இருந்தேன். நல்ல பொருள் எதுவாக இருந்தாலும், எது கிடைத்தாலும், அதை நானே கைப்பற்றிக்கொள்வேன். இந்தக் குணத்தின் காரணமாகவே, மெதுவாக எல்லோரும் என்னைவிட்டு விலக ஆரம்பித்தார்கள். ஒருகட்டத்தில் எனக்கு நண்பர்களே இல்லாமல் போய்விட்டார்கள். நானோ என் மீது தவறு இருக்கிறது என்றே நினைக்கவில்லை; மற்றவர்களைக் குறை சொல்லிக்கொண்டிருந்தேன். அந்தச் சமயத்தில் என் அப்பா எனக்குக் கற்றுக் கொடுத்த மூன்று வாக்கியங்கள்தாம்  வாழ்க்கையில் எனக்கு உதவியாக இருந்தன.

ஒருநாள் அப்பா, இரண்டு அகலமான பாத்திரங்களில் நூடுல்ஸ் சமைத்து எடுத்து வந்தார். அந்த இரண்டையும் சாப்பாட்டு மேஜை மேல் வைத்தார். ஒரு பாத்திரத்திலிருந்த நூடுல்ஸின் மேல் மட்டும் ஒரு முட்டை வைக்கப்பட்டிருந்தது; இன்னொன்றின் மேல் முட்டையில்லை. அப்பா என்னிடம் கேட்டார்... `கண்ணு... உனக்கு இந்த இரண்டில் எது வேண்டுமோ, நீயே எடுத்துக்கொள்!’ என்றார். அந்த நாள்களில் முட்டை கிடைப்பது அரிதாக இருந்தது. புத்தாண்டின்போதோ, பண்டிகைகளின்போதோதான் எங்களுக்குச் சாப்பிட முட்டை கிடைக்கும். எனவே, நான் முட்டை வைத்திருந்த நூடுல்ஸ் கிண்ணத்தை எடுத்துக்கொண்டேன். நாங்கள் சாப்பிட ஆரம்பித்தோம். என்னுடைய புத்திசாலித்தனமான முடிவுக்காக எனக்கு நானே என்னைப் பாராட்டிக்கொண்டேன். முட்டையை ஒரு வெட்டு வெட்டினேன். என் தந்தை அவருடைய கிண்ணத்தை எடுத்து சாப்பிட ஆரம்பித்தபோது எனக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. அவருடைய கிண்ணத்தில் நூடுல்ஸுக்கு அடியே இரண்டு முட்டைகள் இருந்தன. அதைப் பார்த்துவிட்டு நான் மிகவும் வருத்தப்பட்டேன். அவசரப்பட்டு நான் எடுத்த முடிவுக்காக என்னை நானே திட்டிக்கொண்டேன். அப்பா மென்மையாகச் சிரித்தபடி என்னிடம் சொன்னார்... `மகனே நினைவில்வைத்துக்கொள்... உன் கண்கள் பார்ப்பது உண்மையில்லாமல் போகலாம். மற்றவர்களுக்குக் கிடைப்பதை நீ அடைய வேண்டும் என நினைத்தால் இழப்பு உனக்குத்தான்.’’

அடுத்த நாளும் என் அப்பா இரண்டு பெரிய கிண்ணங்கள் நிறைய நூடுல்ஸ் சமைத்துக் கொண்டு வந்து சாப்பாட்டு மேஜையில் வைத்தார். முதல் நாளைப் போலவே ஒரு கிண்ணத்திலிருந்த நூடுல்ஸின் மேல் ஒரு முட்டை வைக்கப்பட்டிருந்தது; இன்னொன்றில் இல்லை. அப்பா என்னிடம் கேட்டார்... ``மகனே... உனக்கு இந்த இரண்டில் எது வேண்டுமோ, நீயே தேர்ந்தெடுத்துக்கொள்!’ இந்த முறை நான் கொஞ்சம் புத்திசாலித்தனமாக யோசித்தேன். முட்டை வைக்கப்படாத கிண்ணத்தை எடுத்துக்கொண்டேன். அன்றைக்கும் எனக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. நூடுல்ஸை அள்ளும் குச்சியால், கிண்ணத்துக்குள் அடிவரை எவ்வளவு துழாவிப் பார்த்தும் ஒரு முட்டைகூடக் கிடைக்கவில்லை. அன்றைக்கும் அப்பா சிரித்தபடி சொன்னார்... `மகனே... எப்போதும் அனுபவங்களின் அடிப்படையிலேயே ஒன்றை நம்பக் கூடாது. ஏனென்றால், சில நேரங்களில் வாழ்க்கை உன்னை ஏமாற்றக்கூடும், தந்திரத்தில் விழவைக்கும். இதை ஒரு பாடமாக எடுத்துக்கொள். இதை எந்தப் பாடப்புத்தகங்களிலிருந்தும் கற்றுக்கொள்ள முடியாது.’

மூன்றாவது நாள், அப்பா மறுபடியும் இரு பெரிய கிண்ணங்களில் நூடுல்ஸ் சமைத்து எடுத்து வந்தார். இரு கிண்ணங்களையும் மேஜையின் மேல் வைத்தார். வழக்கம்போல ஒரு கிண்ணத்திலிருந்த நூடுல்ஸில் முட்டை; மற்றொன்றில் இல்லை. அப்பா கேட்டார்... `மகனே நீயே தேர்ந்தெடுத்துக்கொள். உனக்கு இவற்றில் எது வேண்டும்?’ இந்த முறை அவசரப்பட்டு கிண்ணத்தை எடுத்துவிடாமல் நான் பொறுமையாக அப்பாவிடம் சொன்னேன்... `அப்பா நீங்கள்தான் இந்தக் குடும்பத்தின் தலைவர். நீங்கள்தான் நம் குடும்பத்துக்காக உழைக்கிறீர்கள். எனவே, முதலில் நீங்கள் உங்களுக்கான கிண்ணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். மற்றதை நான் எடுத்துக்கொள்கிறேன்’ என்றேன். அப்பா என் கோரிக்கையை நிராகரிக்கவில்லை. முட்டை இருந்த நூடுல்ஸ் கிண்ணத்தை எடுத்துக்கொண்டார். நான் எனக்கான நூடுல்ஸைச் சாப்பிட ஆரம்பித்தேன். நிச்சயமாக இந்தப் பாத்திரத்தில் முட்டை இருக்காது என்றுதான் நினைத்தேன். அன்றைக்கும் எனக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. கிண்ணத்தின் அடியில் இரண்டு முட்டைகளிருந்தன.
அப்பா கண்களில் அன்பு கனிய என்னைப் பார்த்தார். பிறகு புன்முறுவலோடு சொன்னார்... மகனே, நினைவில் வைத்துக்கொள். மற்றவர்களுக்கு நீ நல்லது நினைக்கும்போதெல்லாம், உனக்கும் நல்லதே நடக்கும்!’

அப்பா சொன்ன இந்த மூன்று வாசகங்களை, வாழ்க்கை பாடங்களை எப்போதும் நான் நினைவில் வைத்திருக்கிறேன்.

-படித்ததில் பிடித்தது.

Kannanthangudi ayyanar koil

Friday, May 11, 2018

இசை

இசையின் ஆகப்பெரும் மகத்துவமே, அது உங்களைத் தாக்கும்போது நீங்கள் உங்கள் வலியை மறப்பீர்கள்' - பாப் மார்லி

அங்கீகாரம்

*நகைச்சுவை நடிகர் நாகேஷ்*

அவர்களின்,

தன்னம்பிக்கை மிக்க அருமையான வார்த்தைகள்...

வானொலிப் பேட்டியொன்றில் நாகேஷ்..

நியாயமாக உங்களுக்கு வரவேண்டிய நல்ல பெயர் மற்றவர்களுக்குச் செல்லும் போது உங்களுக்கு எப்படி இருக்கும்?

நாகேஷ்:

நான் கவலையே படமாட்டேன் சார்.

ஒரு கட்டடம் கட்டும் போது,

சவுக்கு மரத்தை முக்கியமா வச்சு சாரம் கட்டி,

குறுக்குப் பலகைகள் போட்டு,

அதன் மேல பல சித்தாள்கள் நின்னு,

கைக்குக் கை கல் மாறி கட்டடம் உயர்ந்து கொண்டே போய் அது முடிந்த பிறகு,

அந்தக் கட்டிடத்துக்கு வர்ண ஜால வித்தைகள் எல்லாம் அடிச்சு,

கீழ இறங்கும் போது ஒவ்வொரு சவுக்கு மரமாக அவிழ்த்துக் கொண்டே வருவார்கள்.

கட்டடம் முடிந்து,

*கிரஹப் பிரவேசத்தன்று*

கட்டடம் கட்டுவதற்கு எது முக்கிய காரணமாக இருந்ததோ,

அந்தச் சவுக்கு மரத்தை யார் கண்ணிலும் படாமல் பின்னால்,

எங்கயோ மறைத்து வைத்துவிட்டு,

வேறெங்கேயோ வளர்ந்த வாழை மரத்தை முன்னால் நட்டு கிரஹகப் பிரவேசம் நடத்தி அனைவரையும் வரவேற்பார்கள்.

அத்தனை பெருமையும் வாழை மரத்துக்குப் போய் விடும்.

இதில் உள்ள உண்மை என்ன தெரியுமா?

அந்த வாழை மரம் மூன்று நாள் வாழ்க்கை தான் வாழும்.

ஆடுமாடுகள் மேயும்.

குழந்தைகள் பிய்த்தெடுப்பார்கள்.

பிறகு குப்பை வண்டியிலே போய்ச் சேரும்.

எங்கோ மூலையில் மறைந்து கிடக்கிறதே அந்தச் சவுக்கு மரம் கண்ணீர் விடுவதில்லை.

அடுத்த கட்டடம் கட்டுவதற்கு ஏணியாக தயார் நிலையில் என்றைக்கும் சிரித்துக் கொண்டேயிருக்கும்.!!!

நான் வாழை அல்ல...! சவுக்குமரம்....

Always think positive....

Thursday, May 10, 2018

Summer Evening

மரணம்

அசாதாரணமானவரையும் சாதரணமாக  கொண்டுச் செல்கிறது மரணம்.

Sunday, May 6, 2018

GOOD THOUGHT

வாழ்க்கை

மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை.
நாம் செய்யும் செயல்களில்  உள்ளது. .
_________________________________________
அந்த சிறு குருவிக்கு அன்று ஒரு அழகிய கனவு வந்தது.  கனவில் மிக அழகான ஒரு உலகம் தெரிந்தது.

இதுவரை குருவி அப்படியொரு அற்புத உலகத்தைப் பார்த்ததில்லை. 
வண்ண வண்ண விளக்குகள், அழகான நதிகள், மரங்கள், எங்கு பார்த்தாலும் மகிழ்ச்சி என்று அந்த அற்புத உலகம் மயக்கியது.

எப்படியாவது அந்த உலகத்துக்குப் போயே ஆக வேண்டும்.  அந்த சந்தோஷங்களை அனுபவித்தே ஆக வேண்டும் என்று அந்த குருவி விரும்பியது.

ஆனால் போகும் வழிதான் அதற்குத் தெரியவில்லை.

அது பறந்து போகும் போது ஒரு பிரபல ஜோதிடரைப் பார்த்தது..

காலத்தையெல்லாம் கணிக்கும் ஜோதிடருக்கு அந்த அற்புத உலகத்துக் கான வழி தெரியாதா என்ன.  அவரிடம் குருவி வழி கேட்டது.

“எனக்கு முழு விபரம் தெரியாது.  தெரிந்த வரை சொல்கிறேன்.  அதற்கு விலையாக நீ உன் சிறகுகளில் ஒன்றைத் தர வேண்டும்” என்றார் ஜோதிடர். 

ஒரேயோரு சிறகுதானே என்று குருவியும் சரி என்றது.  குருவி அவர் சொன்ன வழியில் பறந்து சென்றது. 

குறிப்பிட்ட இடத்துக்கு மேல் அது வழி தெரியாமல் திகைத்து நிற்க,
அந்த வழியே ஒரு பாம்பு வந்தது.  பாம்பிடம் குருவி தன் கனவு பற்றி சொல்லி, “அந்த உலகத்தின் சந்தோஷங்களை அனுபவிக்க நான் அங்கே போகிறேன்.  எனக்கு வழி காட்டேன்” என்றது. 

பாம்பு  “இங்கிருந்து அந்தப் பகுதிக்குச் செல்லும் வழி ஓரளவுக்குத் தான் எனக்குத் தெரியும்.  சொல்கிறேன்.

பதிலுக்கு நீ எனக்கு என்ன தருவாய்.  உன் அழகான சிறகில் ஒன்றைத் தந்து விடு” என்றது. 

இன்னொரு சிறகுதானே, தந்தால் போச்சு என்று குருவியும் சம்மதித்தது.

பாம்பு சொன்ன பாதையில் குருவி பயணிக்க, அதுவும் ஓரளவுக்குத்தான் போக முடிந்தது.  அதற்குப் பிறகு வழி தெரியவில்லை.

இப்படியே அந்தக் குருவி, அங்கங்கே இருந்த சிலரிடம் வழி கேட்டு கேட்டு பறந்தது.

அவர்களும் வழி சொல்லிவிட்டு குருவியிடம் இருந்து ஒரு சிறகை விலையாக கேட்டார்கள்.

குருவியும் அந்த அற்புத உலகின் சந்தோஷங்களை அனுபவிக்கப் போகும் ஆசையில் வழி சொன்ன வர்களுக்கெல்லாம் ஒவ்வொரு சிறகாக பிய்த்துக் கொடுத்தபடி சென்றது. 

முடிவாக, அதோ.... கனவில் கண்ட அந்த அழகான உலகம் அதன் கண் முன் தெரிந்தது.

வந்து விட்டோம்..... வந்தே விட்டோம்...... இன்னும் சில நூறடி தூரம் பறந்தால் அந்த அற்புத உலகம்.

குருவிக்கு ஆனந்தம் தாங்கவில்லை. 

ஆனால், இதென்ன.... ஏன் என்னால் பறக்க முடியவில்லை. ஐயோ, என் உடம்பெல்லாம் கனக் கிறதே.  கீழே இருந்து காற்றில் எழும்பவே முடியவில்லையே என்று கதறியது. 

மெல்ல மெல்ல குருவிக்குப் புரிந்தது.  பறப்பதற்கான சிறகுகள் தன்னிடம் இப்போது இல்லை என்ற உண்மை விளங்கியது.

குருவியால் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. 

இதோ கண் முன்னே தான் கனவில் கண்ட அந்த அற்புத உலகம். 

ஆனால் அதை அனுபவிக்க முடியாமல் கீழே கிடக்கிறேன்.  அந்த சோகமும் ஏக்கமும் தாங்க முடியாமல் எட்டாத உயரத்தில் தெரியும் அந்த மாய உலகின் வாசலை பார்த்தபடியே பரிதவித்துக் கொண்டிருந்தது. அந்தக் குருவி.

இன்று நம்மில் பலரது நிலைமையை குறிப்பிடும் அற்புத கதை இது.

“நவீன வசதிகளே சந்தோஷம்” என்று அந்த மாய உலகின் வசதிகளைப் பெருக்கிக் கொள் வதற்காக இன்றைய நம் சந்தோஷங்களை இழந்து கொண்டிருக் கிறோம்.

குடும்பத்துடன் வெளியே செல்வது, பிள்ளைகளோடு மனம் விட்டுப் பேசுவது, பிடித்த புத்தகம் படிப்பது, பிடித்த படம் பார்ப்பது, பிடித்த கோவிலுக்கு போவது, பிடித்த உடை உடுத்துவது, பிடித்த உணவு உண்பது என்று எல்லா சந்தோஷ சிறகுகளையும் ஒவ்வொன்றாக வெட்டி வெட்டி வீசுகிறோம்.

கடைசியில் அந்த வசதிகளை அனுபவிக்கும் ஒரு நிலை வரும்போது நரை கூடி, திரை வந்து உடலும் மனசும் தளர்ந்து போகிறது.  எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. 

“மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை.  நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் இருக்கிறது.  ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து வாழ்வோம்."💐 படித்ததில் பிடித்தது.

Saturday, May 5, 2018

கண்ணீர்

என்னுடைய கண்ணீர் தெரிந்தது இருவருக்குத்தான், ஒன்று என்னுடைய கண்ணுக்கு மற்றும் என்னுடைய கண்ணங்களுக்குக்கூட தெரியாமல் துடைத்துவிடும் என் கைக்கு.

கண்ணீர்

என்னுடைய கண்ணீர் தெரிந்தது இருவருக்குத்தான், ஒன்று என்னுடைய கண் மற்றும் என்னுடைய கண்ணங்களுக்குக்கூட தெரியாமல் மறைக்கும் என் கை.