Friday, July 19, 2019

சுயநலமற்ற அன்பு....!

🙏🙏🕉🕉🙏🙏🕉🕉🙏🙏
சுயநல அன்பு
சுயநலமற்ற அன்பு....!

ஒருநாள் ஜென் குருவும் அவரது சீடனும் குளக்கரையில் அமர்திருந்தார்கள்.

சீடன் பல கேள்விகளை குருவிடம் கேட்டுக்கொண்டிருந்தான்;

குருவும் நிதானமாக பதிலளித்துக் கொண்டிருந்தார். “குருவே! சுயநலமிக்க அன்பிற்கும் சுயநலமில்லாத அன்பிற்கும் வித்தியாசம் என்ன? எனக்கு கொஞ்சம் விளக்கமாக கூறுங்களேன்” என்றான்.

ஜென் குரு சீடனுக்கு பதிலை எப்படி விளக்குவது என்று சற்றும் முற்றும் பார்த்தார். ஒரு இளைஞன் குளக்கரையில் தூண்டிலைப் பிடித்துக்கொண்டு அமர்திருந்தான். அவனருகில் கூடையில் அவன் பிடித்துப் போட்ட மீன்கள் துடித்துக் கொண்டிருந்தது.

குரு அந்த இளைஞனிடம் பேச்சு கொடுத்தார். “தம்பி! மீன் என்றால் ரொம்ப பிடிக்குமோ?” என்றார். அவனும் “ஆமாம் ஐயா! மீன் என்றால் எனக்கு உயிர். பிடித்து வைத்த மீன்களையெல்லாம் இன்றிரவு என் மனைவியை சமைக்கச் சொல்லி ஒரு பிடி பிடிக்கப் போகிறேன்; உங்களுக்கு வேண்டுமானால் கொஞ்சம் எடுத்துக் கொள்ளுங்கள்; குளத்தில் நிறைய மீன் கிடக்கிறது” என்றான்.

குருவோ, “எனக்கு வேண்டாம் தம்பி!” என்று புன்சிரிப்புடன் கூறி மறுத்துவிட்டார். நடப்பதையெல்லாம் சீடன் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான்.

அந்த இளைஞனும் சற்று நேரத்தில் மீன் பிடித்து விட்டு கிளம்பிவிட்டான்.

ஒரு வயது முதிர்ந்த பெரியவர் குளக்கரையை நோக்கி வருவதை ஜென் குரு பார்த்துவிட்டார். அவர் கையில் ஒரு வெள்ளை நிறப் பை இருந்தது. குரு அதை உற்றுப் பார்த்தார்; அது பையின் நிறமல்ல, அதிலிருக்கும் பொரியின் நிறம் என்பதை தெரிந்து கொண்டார்.

அந்த பெரியவர் குளக்கரையில் வந்து அமர்ந்தார். பையிலிருந்த பொரியை எடுத்து தண்ணீரில் தூவினார். நூற்றுக்கணக்கான மீன்கள் பொரி இருக்கும் இடத்தை எறும்புகள் போல மொய்த்தன.

குரு அவரிடமும் பேச்சு கொடுத்தார். “என்ன பெரியவரே! மீன் என்றால் ரொம்ப பிடிக்குமோ?” என்று சற்றுமுன் அந்த இளைஞனிடம் கேட்ட அதே கேள்வியை பெரியவரிடம் கேட்டார்.

பெரியவரும், “ஆமாம் ஐயா! மீன் என்றால் எனக்கு உயிர்; நேரம் கிடைக்கும் போதெல்லாம் இங்கு வந்து இங்குள்ள மீன்களுக்கு உணவளிப்பேன்” என்றார்.

அவரிடம் பேசிமுடித்து விட்டு சீடனின் பக்கம் திரும்பினார். “பார்த்தாயா! இருவரும் மீனின் மீது அளவுகடந்த அன்பு வைத்திருக்கிறார்கள் என்பது அவர்கள் ‘மீனென்றால் உயிர்’ என்று கூறும்போதே தெரிந்திருக்கும்.

அந்த இளைஞன், மீன்களை ‘ருசி’ என்னும் சுயநலத்திற்காக பயன்படுத்திக் கொண்டான். அவன் தன்னுடைய சந்தோஷத்தில் மட்டுமே கவனம் செலுத்தினான்.

ஆனால் அந்த பெரியவர் மீன்கள் பசியாறுவதற்கு சுயநலமில்லாமல் உணவளித்தார். இருவருக்கும் மீன்கள் பிடித்திருந்தது, ஆனால் இருவரின்
நோக்கம் வேறு.

மொத்தத்தில், அன்பில் சுயநலம் இருந்தால் அது அன்பே இல்லை; சுயநலமில்லாத அன்பு தான் உண்மையானது, நிரந்தரமானது” என்று குரு சீடனுக்கு புரியவைத்தார்....

அன்பு மட்டுமே நிரந்தரம் ... மருந்து மாத்திரை இல்லாமல் எந்த ஒரு நோயையும் குணப்படுத்தும் சக்தி அன்புக்கு மட்டுமே உண்டு ....

Thursday, July 18, 2019

ஹவ் டு ப்ளான் அண்ட் எக்ஸிக்யூட்

சின்னஞ்சிறு புத்தகம் ஒன்று, உங்களது சிந்தனையையே மாற்றிவிடக்கூடுமா?

நிச்சயம் முடியும். அதுதான் வாலஸ் ஸ்டெட்டினிஸ் எழுதியிருக்கும் ‘ஹவ் டு ப்ளான் அண்ட் எக்ஸிக்யூட்’ புத்தகத்தின் தனிச் சிறப்பு. ஒரு பயணத்தில் தன்னந்தனியே உட்கார்ந்தால் அரை மணி நேரத்தில் வாசித்து முடித்துவிடக்கூடிய எளிய புத்தகம். ஆனால் அதற்குள் எத்தனையோ உண்மைகளும் உத்திகளும் கொட்டிக்கிடக்கின்றன. ஒவ்வொன்றாகப் பயன்படுத்தினால் நமது திட்டமிடுதல் பலமடங்கு முன்னேறிவிடும்!

இந்தப் புத்தகத்தின் அடிப்படை, திட்டமிடுதலுக்கான 24 உத்திகள். இவற்றைச் சரியானபடி பயன்படுத்தினால் எப்பேர்ப்பட்ட திட்டமும் உங்களுடைய விரல் நுனியில் சுருண்டு கிடக்கும் என்கிறார் வாலஸ் ஸ்டெட்டினிஸ். இவை அனைத்தும் எளிமையான, எவரும் பயன்படுத்தக்கூடிய உத்திகள் என்பது இன்னும் விசேஷம்!

அந்த இருபத்து நான்கு உத்திகளில் முக்கியமானவற்றைமட்டும் இங்கே சுருக்கமாகப் பார்க்கலாம்:

1. உங்களுடைய துறை எது, களம் எது என்பதைத் தெளிவாகத் தீர்மானித்துக்கொள்ளுங்கள். அது புரியாமல் இறங்கினால் எந்தத் திட்டமும் ஒழுங்காக அமையாது

2. நீங்கள் செய்யவிருக்கும் வேலையில் என்னென்ன வாய்ப்புகள் உள்ளன, என்னென்ன எதிர்ப்புகள் உள்ளன என்பதை நன்கு அலசிக்கொள்ளுங்கள். ஆழம் பார்க்காமல் காலை விடாதீர்கள்
3. இலக்குகளை நிர்ணயித்துக்கொள்வது மிக அவசியம். அவை நம்பர்களாக (எளிதில் கணக்கிடக்கூடியவையால) அமைந்தால் இன்னும் நல்லது. உதாரணமாக ‘நான் பெரிய கிரிக்கெட் வீரனாவேன்’ என்பதைவிட ‘அடுத்த வருடம் ஐபிஎல்லில் நான் விளையாடுவேன்’ என்பது சுலபத்தில் உறுதி செய்யக்கூடிய இலக்கு

4. அடுத்து, இந்த இலக்குகள் எதார்த்தத்தில் சாத்தியமானவைதானா என்று அலசுங்கள். உணர்ச்சிவயப்படாதீர்கள். நேர்மையாக யோசித்து, நிச்சயம் முடியும் என்று நீங்கள் நினைக்கிற இலக்குகளைமட்டுமே தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்

5. ஒவ்வோர் இலக்கையும் அடைவதற்கான பாதைகளைக் கணக்கிடுங்கள். அவற்றை சீர் தூக்கிப் பார்த்து ஒன்று அல்லது இரண்டைமட்டும் தேர்ந்தெடுங்கள்

6. இந்தப் பாதைகளில் பயணம் செய்வதற்கான திட்டங்களை வடிக்கத் தொடங்குங்கள். கவனம், பாஸிட்டிவ், நெகட்டிவ் இரண்டையும் யோசித்தபிறகே உங்கள் திட்டம் எழுதப்படவேண்டும்

7. ஒருவேளை ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளை ஒரே நேரத்தில் செய்யவேண்டியிருந்தால், அவற்றில் எது முக்கியம் என்று யோசித்துக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால் ஒரே சமயத்தில் இரண்டு விஷயங்களைத் துரத்தி இரண்டிலும் ஏமாந்து நிற்க நேர்ந்துவிடும்

8. உங்கள் திட்டத்தை எழுதிவையுங்கள். அது எப்போதும் கண்ணில் படும்படியான ஓர் இடத்தில் இருக்கட்டும். அவ்வப்போது அதை எடுத்துப் பார்த்துப் பரிசோதித்துக்கொண்டே இருங்கள். நாம் வழி மாறுவதுபோல் தோன்றினால் சரி செய்யுங்கள் - வழியை அல்லது திட்டத்தை

9. இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதில் உங்களுக்கு உதவக்கூடியவர்கள் சிலர் இருக்கலாம். அவர்களுக்கு இதைப்பற்றித் தெளிவாக விளக்கிச் சொல்லுங்கள். அவர்களது முழு ஒப்புதலைப் பெறுங்கள். அப்போதுதான் அவர்கள் மனம் உவந்து ஒத்துழைப்பார்கள், உங்கள் வேலைகள் சுலபத்தில் முடியும். அநாவசியத் தடைகளுக்கு இடம் அளித்துவிடாதீர்கள்

10. திட்டம் நிறைவேறுகிற கட்டத்தில் யார் என்ன செய்கிறார்கள் என்பதைத் தொடர்ந்து கூர்ந்து கவனித்துவாருங்கள். ஏதேனும் பிழைகள் இருந்தால் அன்பாகச் சொல்லித் திருத்துங்கள். நீங்களே பிழை செய்தால் கடுமையாக விமர்சித்துக்கொள்ளுங்கள். பல நேரங்களில் பெரிய திட்டங்கள் சொதப்பி விழுவது சின்னஞ்சிறு தவறுகளால்தான்!

நம்மில் பலர் நினைப்பதுபோல், திட்டமிடுவது ‘மேனேஜர்’களின் வேலை இல்லை. அதற்கென்று ப்ளானிங் நிபுணர்களும் தேவையில்லை. நாம் ஒவ்வொருவரும் திட்டங்களைத் தீட்டமுடியும், சரியாகச் செயல்பட்டு ஜெயிக்கமுடியும், அதற்குத் தேவையான முழு நம்பிக்கையை இந்தப் புத்தகம் ஊட்டுகிறது.

புத்தகத்தின் பெயர்: ஹவ் டு ப்ளான் அண்ட் எக்ஸிக்யூட் (How To Plan And Execute)

ஆசிரியர் பெயர்: வாலஸ் ஸ்டெட்டினிஸ் (Wallace Stettinius)

புத்தகம் வெளியான ஆண்டு: 2005

இதுவரையிலான விற்பனை: பல லட்சம் பிரதிகள்

மொழிபெயர்ப்பு: சுமார் பத்து மொழிகளில்

நன்றி...🙏🏽
✨வாழ்க வளமுடன், நலமுடன்✨