Saturday, May 31, 2025

ஒரு கரம்.

தோல்வியடைந்தவர்களை தட்டிக்கொடுத்து ஊக்கப்படுத்தியது

வீழ்ந்தவர்களை கைக் கொடுத்து தூக்கியது

துயரத்தில் கண்ணீர் துடைத்தது

பயத்தில் கை கோர்த்து தைரியம் தந்தது 

ஒருநாள் அந்த கரம்
துயரத்தில் மூழ்கி கிடந்தது 
எதாவது ஒரு கரம் வரும் நம்பிக்கை 
கொண்டது 
ஆனால் 
உலகின் உண்மையை உணர்ந்தது
தன்னை கை ஊன்றி கொஞ்ச கொஞ்சமாய் 
மீண்டு வந்தது.

பூமி.சாமி.

Friday, May 30, 2025

அரிதாரம் பூசிய வலம் வரும்
ஆயிரம் வெற்று வார்த்தைகளை விட 
ஒரு சிறு அன்பு செய்தல் மேலானது.

பூமி.சாமி.
சில வார்த்தைகள் உதட்டோடு நின்றுவிடுகிறது 

சில வார்த்தைகள் மனதோடு புதைந்து போகிறது 

சில வார்த்தைகளை பேசியபின்
வாபஸ் வாங்குகிறேன் 

சில வார்த்தைகளை பேசியதற்கு
மன்னிப்பு கோருகிறேன் 

இவைகளை தாண்டி சிற்சில வார்த்தைகளை மட்டுமே பேசுகிறேன்
 
அவைகளும் தேவையா என தற்போது யோசிக்க தொடங்கி விட்டேன் நான்.

பூமி.சாமி.

Sunday, May 25, 2025

முட்களையும்
சக்கையையும் மட்டுமே 
பார்ப்பவனால்
கடைசிவரை 
பலாச்சுளையை சுவைக்க இயலாது.

பூமி.சாமி.
உங்களது சின்ன சின்ன விசயங்கள் தான் 
பெரிதாய் பார்க்கப்படுகிறது 
சிறியதில் பெரிதாய் கவனமாய் இருங்கள்.

பூமி.சாமி.

Saturday, May 24, 2025

எளிதாக கிடைக்கும் எதுவும்
மலிவாக பார்க்கப்படும் 
அன்பு உட்பட.

பூமி.சாமி.

Wednesday, May 21, 2025

வெத்து சொற்களால் 
நிரம்பி கிடக்கிறது 
உலகம்‌.

பூமி.சாமி.

Thursday, May 8, 2025

என் நிம்மதிக்கு நல்லது

சில நேரங்களில் உங்களை பற்றி 
நினைக்கும்போது 

உங்களுக்காக அவ்வளவு உழைத்து 
இருக்க வேண்டாம் என்று தோன்றுகிறது
 
உங்கள் மேல் அவ்வளவு அக்கறையை
காட்டி இருக்க வேண்டாம் என்று தோன்றுகிறது 

உங்களுக்காக என்னை வருத்தி இவ்வளவு மெனக்கெட்டு இருக்க வேண்டாம் என்று தோன்றுகிறது 

என் செய்வது நான் அப்படித்தான் 

ஆனால் உங்களுக்காக என்னை மாற்றி கொண்டால்
ஒவ்வொருத்தருக்காகவும் என்னை மாற்றி கொள்ள வேண்டும் 

உங்களை ஏற்றுக்கொள்ளவும் இல்லை 
எதிர்க்கவும் இல்லை 
அப்படியே கடந்து செல்கிறேன் 
அதுதான் என் நிம்மதிக்கு நல்லது.

-பூமி.சாமி.

Sunday, May 4, 2025

இப்போது 
உன் உதவிகள் ஏதும் தேவைப்படுவதில்லை

என்னை ஊக்கப்படுத்தும் 
உன் வார்த்தைகளுக்கு கூட வேலையில்லை

துன்பங்களில் கண்ணீர் துடைக்கும் 
உன் கரங்கள் கூட தேவைப்படுவதில்லை

காலமும் தூரமும் கொஞ்சம் நஞ்சம் 
இருந்த உன் நினைவுகளைக்கூட  பிடுங்கிக் கொண்டன

ஏதும் தேவையில்லாத போது 
நீ எதற்கு என்று
ஞாபகமாய் மறந்து விட்டேன் உன்னை.

-பூமி.சாமி.

Thursday, May 1, 2025

எதிர்பார்ப்பு

கதிரவனிடமிருந்து குளிர்ச்சியையோ
நிலவிடுமிருந்து வெம்மையையோ
எதிர்பார்க்க வில்லை  நான் 

நான் எதிர்பார்ப்பது எல்லாம் 
மேகத்திடம் இருந்து மழையையும்
மரத்திடமிருந்து நிழலையும் தான்.

பூமி.சாமி.