Tuesday, January 10, 2023

மலரே உன் மலர்மடியில் மகனாய்
பிறப்பாய் என நாங்கள் மகிழ்ந்திருக்க

தளிரே நீ இத்தரணியில் எங்கள் மகனாய் பிறக்காமல் ஏனடா கடவுளின் மகன் ஆனாய்

மறுபிறப்பாய் மறுவுறுவாய் மீண்டும்
மலர் மடியில் பிறப்பெடுப்பாயா மகனே நீ எங்களை மகிழ்விக்க.


-சாமி.



Friday, January 6, 2023

BUSY..........

இப்பொழுதெல்லாம் வேலையே இல்லையென்றாலும் busy என்றே சொல்லிக்கொள்கிறேன்

ஒவ்வொரு message க்கும் சில மணி நேரம் கழித்தே பதிலிடுகிறேன் 

வரும் அழைப்புகளுக்குக்கூட
அப்பறம் பேசுகிறேன் என்று பதிவிடுகிறேன்

நண்பர்கள் இன்று சந்திக்கலாமா என்று கேட்டால்க்கூட அப்பறம் பார்க்கலாம் என்கிறேன்

"U had breakfast?" என்று வரும் இடுகைக்கு
" I had dinner " என்ற பொழுதில் பதிலிடுகிறேன் 

இவ்வளவை செய்யும் நான்
என் இடுகைக்கு உடனே பதில்
வரவில்லை என காயப்படுகிறேன்

இப்பொழுதெல்லாம் வேலையே இல்லையென்றாலும் busy என்றே சொல்லிக்கொள்கிறேன்.

-சாமி.









பட்(ட)டு மரம்

எங்க ஊரில் பட்ட மரம் ஒன்னு ரோட்டோரத்தில் இருக்கு

பயணிகளுக்கு அது "பட்ட மர பஸ் ஸ்டாப்"

அதில் பச்சை கிளிக்கு
பக்குவமாய் ஒரு பொந்து வீடு

புதியவர்களுக்கு "பட்ட மரத்துக்கு பக்கத்து தெரு" வழிக்காட்ட உதவும்
லேண்ட் மார்க்

மரங்கொத்திக்கு தனது பட்டைக்குள் 
புழுவை ஓளித்து உணவிடும் அட்சய பாத்திரம்

எங்க ஊரு ஆசாரிக்கு அது ஒரு பீரோ 
இரண்டு பெஞ்சு

எங்க ஊரு மனிதர்களுக்கு முதுமையின்
கொடுமையை காட்டி நிற்கும் தத்துவம்

பல புயல் மழையை இலை கிளை துணை இல்லாமல் எதிர்த்து நின்று
வென்ற தனிமரம் 

இப்படி  வாழ்ந்து வழிகாட்டி நிற்கும்
அம்மரத்திற்கு நாங்கள் வைத்திருக்கும் பெயர் " பட்டமரம்".

-சாமி.

Wednesday, January 4, 2023

தலையில் வாங்கிய குட்டு

மைதானத்தில் நடந்த வாத்து நடை

கையில் வாங்கிய பிரம்பு அடி

தரையில் போட்ட முட்டிக்கால் 

வகுப்பறையின் வாசலில் நின்றது

பெஞ்சில ஏறி நின்றது

காதில் கிள்ளு வாங்கியது

பத்துமுறை எழுதியது

தோப்புக்கரணம் போட்டது

இவை ஏற்படுத்திய வலிகள் தான்

இன்னும் என்னை வழிநடத்துகிறது
ஒழுக்கமான வழிகளில்.


-சாமி.





Monday, January 2, 2023

நம்மிடம் எல்லாம் இருந்தும் 
மனதில் ஒரு வெறுமை
திருப்தியின்மை
போலித்தனம்
இவையெல்லாம் நாம் உணர்கிறோம்

இது ஏன்

மனிதர்களிடம் ஆத்மார்த்தமான எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத அன்பும் தொடர்பும் இல்லாததே என நான் நினைக்கிறேன்

இப்பொழுதெல்லாம்
அன்பு பாசம் அக்கறை எல்லாம் 
வெறும் வார்த்தைகளில் மட்டுமே
வெளிப்படுகிறது
உள்ளார்ந்து மனதில் இருந்து வருவதில்லை.

நம் முன்னோர்கள் இப்படியில்லை
அவர்களிடம் எதுவும் இல்லையெனினும்
அன்பான வெள்ளந்தியான
மனதுடன் மற்ற மனிதர்களுடன் நெருக்கமான எதிர்பார்ப்பில்லாத
ஆத்மார்த்தமான தொடர்பில் இருந்தனர்
அவர்களின் வாழ்விலிருந்து
கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது.


-சாமி.




இன்று உலகுக்கு தேவைப்படும்
கல்வி " அன்பு செய்வது எப்படி" 
என்பதுதான்
இதை தவிர எல்லாம் சொல்லி
தரப்படுகிறது.

-சாமி.



Friday, December 30, 2022

நேற்று, நீ இல்லாமல் என்னால் இருக்க முடியாது என்றோம் 
இன்று, அவர் இல்லாமல் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறோம்

நேற்று, வாழ்நாள் முழுவதும் உன்னோடு
இருப்பேன் என்றோம் 
இன்று, அவரை நீங்கி வெகுதூரத்தில் நாம்

நேற்று, உன்னோடு பேசாமல் தூக்கம் வராது என்றோம் 
இன்று, அவரோடு வருடக்கணக்கில் பேசாமல் நன்றாகத்தான் தூங்குகிறோம்

நேற்று, நீங்கள் செய்த உதவியை காலம் 
முழுவதும் மறக்க மாட்டேன் என்றோம் 
இன்று, அவர் யார் என்பதே மறந்து விட்டது

காலம் நேற்றை கலைத்துதான்
இன்றைய உருவாக்குகிறது
இன்றை கலைத்துதான் நாளை உருவாக்கும்

காலமும் கலைத்தலும் தான்
நிரந்தரம்
மற்றவை எல்லாம் மாற்றத்திற்கு உள்ளாகும் என்பதுதான் மந்திரம்.

-சாமி.