விலகிச் செல்ல நினைப்பவர்களை
விடாமல் பின்தொடராதே
வேண்டாமென மறுதலிப்பவர்களை
வலியச்சென்று அழைத்து வராதே
பாதி வழியில் தொலைபவர்களை
கண்ணீருடன் தேடியலையாதே
அவர்கள்
செல்லட்டும்
சிலர்
உன் வாழ்விற்குள்
வருவதுதான்
வரமென நினைத்துக்கொண்டிருக்கிறாய்
சமயங்களில்
சிலர்
உன் வாழ்விலிருந்து
விலகிச்செல்வது கூட
ஓர் ஆசிர்வாதமே
ஆதலால்
விலகிச் செல்ல நினைப்பவர்களை
வேண்டாமென மறுதலிப்பவர்களை
பாதி வழியில் தொலைபவர்களை
அப்படியே
விட்டுவிடு
அவர்கள்
செல்லட்டும்
இனி ஒருபோதும் மனம் மாறி
திரும்பவியலா பாதைகள்
வழியே
-ரிஸ்கா முக்தார்-