Thursday, February 16, 2023

படித்ததில் பிடித்தது

அவர்கள் எப்போதும் என்னோடே இருந்து விட மாட்டார்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும் 

அவர்கள்  இடையில் எப்போதாவது என் கைகளை உதறிச் செல்வார்கள் என்பதும் எனக்குத் தெரியும்

அதற்காய் இப்போது என் கைகளை இறுகப் பற்றிக் கொண்டிருக்கும் அவர்கள் கைகளை என்னால் உதறித் தள்ளிட முடியாது 
என் இதயங்கள் அந்தளவு இரும்பாலானவை அல்ல 

அவர்களின் இதயங்கள் எப்போது அப்படி இரும்பாலான இதயங்கள் ஆகின்றனவோ அப்போது அவர்கள் என்  கைகளை உதறிச் செல்லட்டும் 

பரவாயில்லை அதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை  

கடைசி வரை நான்  இப்படியே மழைக்கு ஒதுங்கி நிற்க இடம் கொடுக்கும் ஒரு மரமாய் அவர்களின் வாழ்க்கையில் இருந்து விட்டுப் போகிறேன் 

அதற்காய் நான் ஒரு போதும் அவர்களோடு கோபித்துக் கொள்ளப் போவதில்லை 
சண்டையிட்டுக் கொள்ளப் போவதுமில்லை இன்னும் அவர்களை எண்ணி கண்ணீர் வடிக்கப் போவதும் இல்லை துக்கம் கொண்டாடப் போவதுமில்லை

மழைக்காக தன்னிடம் ஒதுங்கிய மனிதர்கள் தன்னை விட்டுப் போவதை எண்ணி எந்த மரமும் கண்ணீர் வடிப்பதுமில்லை துக்கம் கொண்டாடுவதுமில்லை 

தன்னைத் தேடி வருபவர்களை மீண்டும் மீண்டும் அனைத்துக் கொள்கிறது அவ்வளவுதான். 

-அரூஸா ஜெவாஹிர்-✍️

Monday, February 13, 2023

அன்றும் இன்றும்

அன்று கிராமத்தில்

 தாய் மண்ணை கீரித்தான் கிட்டிப்பில்லு  விளையாடினோம்

 கட்டம் கட்டித் தான் சில்லுக்கோடு விளையாடினோம் 

குழி நோண்டித்தான் கோழி குண்டு விளையாடினோம்

 வட்டம் வரைந்து தான் பம்பரம் விளையாடினோம்

 கோட்டுக்குள் கபடி விளையாடி உடம்பெல்லாம் மண் ஆனோம் 

இன்று தாய் மண்ணில் 
சிறு கீரலுமில்லை கட்டமும் இல்லை  உடம்பில் மண்ணும் படுவதில்லை 

விளையாட வேண்டிய தளிர் கரங்கள் எல்லாம் தொடுதிரைகளை மட்டும் தொட்டுக் கொண்டிருக்கின்றன.


-சாமி.

Thursday, February 9, 2023

வித்தியாசம்

ஒரு ரோஜா விலையில்லா அழகாய்
தெரிகிறது எனக்கு 

ஆனால் உனக்கு ஐந்து
ரூபாயாய் தெரிகிறது.

-சாமி.

Monday, February 6, 2023

என்னை விட்டு விடுங்கள்.....

உஙகளை போல் நாடகம் போடவும் நலலா நடிக்கவும் எனக்கு தெரியாது

என்னை விட்டு விடுங்கள் பிழைக்க தெரியாதவனகவே  இருந்துவிட்டு போகிறேன்

உங்களைப் போல் செய்நன்றி மறக்கவும் நாணயமின்றி நடக்கவும் என்னால் முடியாது

என்னை விட்டு விடுங்கள் பிழைக்க தெரியாதவனகவே  இருந்துவிட்டு போகிறேன்

பொய்யான அன்பையும் போலியான பாசத்தையும் என்னால் காட்ட முடியாது
உள்ளொன்று வைத்து புறமோன்று பேசவும் தெரியாது 

என்னை விட்டு விடுங்கள் பிழைக்க தெரியாதவனகவே  இருந்துவிட்டு போகிறேன்

தேவைப்பட்டால் பேசவும் தேவையில்லை எனில் மனிதரை மறக்கவும் என்னால் முடியாது

என்னை விட்டு விடுங்கள் பிழைக்க தெரியாதவனகவே  இருந்துவிட்டு போகிறேன்

ஊழல் செய்தலும் உழைப்பின்றி ஊதியம் பெறுதலும் என்னால் முடியாது 

என்னை விட்டு விடுங்கள் பிழைக்க தெரியாதவனகவே  இருந்துவிட்டு போகிறேன்

உங்களைப் போல் புறமுதுகில் குத்தவும் 
பொய்யாக புன்னகைக்கவும் எனக்கு தெரியாது 

என்னை விட்டு விடுங்கள் பிழைக்க தெரியாதவனகவே  இருந்துவிட்டு போகிறேன்.

-சாமி.

Saturday, February 4, 2023

மிதிவண்டி கற்றப்பொழுது
இருந்த மகிழ்ச்சி
ஏன் மகிழுந்து கற்கும் பொழுது இல்லை
என்பது  இன்றுவரை புரியவில்லை எனக்கு.

-சாமி.
நீ எப்பொழுதும் ' தாமரை இலை 
தண்ணீர்' போல்
இருந்து விடுகிறாய் 

நான்தான் 'செம்புலப் பெயல் நீர்' 
ஆகி புலம்பித் தவிக்கிறேன்.

-சாமி.


Monday, January 30, 2023

குழந்தைகள் வளர்ந்து விட்டனர்

👆#படித்ததில்_மிகவும்_பிடித்தது

என் குழந்தைகள் வளர்ந்து விட்டனர்
நான் தனிமையில் நின்றுவிட்டேன்!!

விரித்த படுக்கை விரிப்பில் 
கசங்கல் இல்லை இப்போது.

அங்கும் இங்கும் சிதறிக்கிடக்கும்
துணிகளும் இல்லை இப்போது.

ரிமோட்டுக்கான சண்டை
ஏதும் இல்லை இப்போது.

புதிய புதிய உணவு கேட்டு
ஆர்ப்பாட்டமும் இல்லை இப்போது.

என் குழந்தைகள் வளர்ந்து விட்டனர் நான் தனிமையில் நின்றுவிட்டேன் !!

காலையில்
எழுந்ததும்
உள்ள  பரபரப்பு 
நேரம்
இல்லை இப்போது!

வீடே பெரிதாய் விசாலமாய்
தோன்றுது இப்போது!!

ஆனாலும் எந்த அறையிலும்
உயிரோட்டம் இல்லை இப்போது!

நகர்த்தினாலும் நகர மறுக்குது
நேரம் இப்போது!

குழந்தைப் பருவ நினைவு
படமாய் சுவரில் தொங்குது இப்போது!

என் குழந்தைகள் வளர்ந்து விட்டனர் நான் தனிமையில் நின்று விட்டேன் !!

முதுகில் சாய்ந்து யாரும் கழுத்தை
கட்டுவதில்லை இப்போது!

குதிரை ஏறி சவாரி செய்ய
முதுகை வளைக்கும் வேலை
இல்லை இப்போது!

உணவு ஊட்ட நிலாவும்
வேண்டியதில்லை இப்போது!

உணவு ஊட்டிய பின் மனதில்
தோன்றும் ஆனந்தமும்
இல்லை இப்போது!

தினமும் வரும் விவாத
விளக்கத்திற்கு
வாய்ப்பில்லை இப்போது!

போடும் சண்டையை
விலக்கிடும் ஆனந்தமும்
இல்லை இப்போது!

மகிழ்ச்சியில் கிடைக்கும்
அன்பு முத்தமும்
இங்கே இல்லை இப்போது!

என் குழந்தைகள் வளர்ந்து விட்டனர் நான் தனிமையில் நின்றுவிட்டேன்!!

கண் இமைப்பதற்குள் வாழ்வின் பொற்காலம் ஓடித்தான் போனது

அழகான அந்த வசந்தம்
எப்போது கரைந்ததோ? 

மழலை மொழியில் 
வழிந்த ஆனந்தமும்,
நொடிச் சிரிப்பும், அழுகையும்,
முதுகில் தட்டித் தந்து,
மடியில் கிடத்தி, தோளில் 
சாய்த்து தாலாட்டு பாடி,
தூங்கச் செய்து அடிக்கடி
விழித்து, கலைந்த போர்வை
சீராய் போர்த்திய காலமும்,
நிலைமையும் இல்லை இப்போது!!

படுக்கும் கட்டிலும் விசாலமாய்
தோன்றுது  இப்போது!

அன்புக் குழந்தைகளின்
இனிய குழந்தைப் பருவம்
எங்கோ தொலைந்து விட்டது!!

பள்ளிக்கு 
அழைத்துச் சென்ற வருடங்களை
நினைக்காத
நாளில்லை!

என் குழந்தைகள் வளர்ந்து விட்டனர் நான் தனிமையில் நின்றுவிட்டேன்!!

தன் காலுறையை எவரும்
அங்கும் இங்குமாய்
எறிவதில்லை இப்போது!

நாற்காலிக்கு போட்டி அப்போது!  
ஆனால் அவை அசைவின்றி, ஆளில்லா
வீடுபோல் நிற்கிறது.

குளியலறையும் ஈரமில்லாமல்
உலர்ந்து கிடக்கிறது இப்போது!

சமையலறையோ அமைதி
மண்டிக் கிடக்கிறது இப்போது!!

காலை மாலை தவறாமல்
உடல்நலம் பற்றி 
அலைபேசியில் விசாரிப்பு.

நான் ஓய்வுடன் நலம் பேண, ஆயிரம் அறிவுரை தருகிறார்கள் இப்போது.

அன்று நான் அவர்களின்
சண்டை விலக்கி வைத்தேன்.

இன்று அவர்கள் எனக்கு
அறிவுரை சொல்கிறார்கள்.

நான் குழந்தையாகி விட்டதை உணர்கிறேன் இப்போது!!

என் குழந்தைகள் வளர்ந்து விட்டனர்
நான் தனிமையில் நின்று விட்டேன்!!

யாரோ ஒருவர் எழுதியது! இன்று இவை எனக்கு!!  நாளை இவை உங்களுக்கு நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

வாழ்க்கையை ரசித்து அனுபவிங்கள்