Thursday, March 4, 2021

நம்பிக்கைதான் வாழ்க்கை

வாழ்க்கை சில நேரங்களில்
பட்டாம்பூச்சியின்மீது பாறாங்கல்லை
வைத்தது போல் உள்ளது,
ஆனாலும் மென் சிறகுகளால் வன் பாறையை தூக்கி எறிந்து
மீண்டும் சிறகடிக்க முடியும்
என்ற நம்பிக்கையும் தருகிறது வாழ்க்கை.


-சாமி.

Tuesday, March 2, 2021

அன்பு

உயிரின் வரமிது
மனிதனின் தரமிது
மனதின் மருந்திது
வாழ்வின் பிடியிது
உள்ளத்தின் அழகிது
ஊடுருவி செல்வது
உலகை பிணைப்பது
எங்கெங்கு இருப்பினும் மதிப்பு மிகுந்தது
உண்மையில் உலகை ஆள்வது.

-சாமி.

Friday, February 26, 2021

நன்றி

'நன்றி ' என்ற சொல்லும் 
நன்றி உணர்வை பல்வேறு விதங்களில் வெளிப்படுத்துதலும், 
உதவி பெறுபவரின் மதிப்பையும்
உதவி செய்பவரின் உதவும் குணத்தையும் மேம்படுத்திக் கொண்டே செல்கிறது.  எனவே எப்பொழுதெல்லாம்
தோன்றுகிறதோ அப்பொழுதெல்லாம்
உரியவரிடம் நன்றி உணர்வை வெளிப்படுத்திக் கொண்டே இருங்கள்.

-சாமி.

Tuesday, February 23, 2021

ஆசிரியர்

மாண்டப்பின்னும்,
அறிவாய் அனுபவமாய்
சொல்லாய் உணர்வாய்
உயிர்வாழ நினைக்கிறேன்
ஒவ்வொரு மாணவரிலும்


-சாமி.

Monday, February 22, 2021

படித்ததில் பிடித்தது--பேச்சு ஒரு அடையாளம்..!!!

பேச்சு ஒரு அடையாளம்..!!!

நண்பன் என்பவன் நம் கதைகளைக் கேட்பவன். உயிர் நண்பன் என்பவன் அந்தக் கதைகளில் இருப்பவன். நம்மை சந்தோஷப்படுத்த பேசுகின்ற நண்பனை விட நம்முடைய சந்தோஷத்தில் ஒருவனாக நம்முடைய சங்கடத்தில், கஷ்டத்தில் துணையாக வருபவனே சரியான நண்பன். வார்த்தைகளை வீணடிக்காதீர்கள். அது வாழ்க்கையை வீணடிக்க வல்லமையுள்ளது என்கிறார் கவிஞர் தாமரை.  

ஆமாம். இன்றைக்கு வார்த்தையின் மதிப்பு தெரியாமல் அவற்றை உதாசீனப்படுத்தி விட்டு விட்டுப் போகும் போக்கு அதிகமாகி வருகின்றது. அதே போல அன்றைக்கு வாக்கு தவறாத மனிதர்கள் இருந்தார்கள். கொடுத்த வாக்கை எப்படியாவது காப்பாற்றினார்கள். வார்த்தைகளால் வசீகரித்தவர்கள் இருந்தார்கள். ஆனால் இன்று மனிதன் பேசுவது ரொம்ப அரிதாகி வருகிறது. 

முன்பெல்லாம் ரயில் பயணத்தில் சந்தித்து பேசிக் கொண்டவர்கள், பேருந்து பயணத்தில் அறிமுக மானவர்கள், நட்பை புதுப்பித்துக் கொண்டவர்கள், பயணங்களில் பல கதைகளைப் பேசிய மனிதர்கள் இப்போது ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப், டுவிட்டர் என்று கையளவு கருவிக்குள் முடங்கிப் போனார்கள். இதனால் தன்னையும் தொலைத்து, தன்னைச் சுற்றி இருப்பவர்களில் புதிய நட்பைப் பெறாமல், ஆளுக்கொரு தீவாகி கொண்டு இருக்கிறார்கள். வார்த்தைகளை தேடி பிடித்தும் சரியான வார்த்தைகளை கண்டெடுத்தும் பேசும் வழக்கம் அரிதாகி விட்டது. 

“என்னுடைய வீட்டைச் சுற்றிலும் சுவர்களை எழுப்பி ஜன்னல்களை மூட நான் விரும்பவில்லை. உலகின் கலாச்சாரக் காற்று என் வீட்டின் உள் பக்கமாய் சுதந்திரத்துடன் வீசட்டும்”  என்கிறார் தேசப்பிதா காந்தியடிகள். 

“ஒரு மனிதனை எடை போடுவது அவன் தன் வாழ்வின் முடிவை எப்படியெல்லாம் செலவழித்தான் என்பதைப் பொறுத்துத் தான் வெளியுலகில் ஒருவன் எவ்வளவு அதியற்புத மனிதனாக விளங்கினாலும், அவனுடைய மனைவியும் உடன் பிறப்புகளும், உறவினர்களும் அப்படி அதிசயிக்கும்படியான எதையும் அவனிடம் காண்பதில்லை. காரணம் இவன் இங்கு வேறு மாதிரி இருக்கிறான். 

அறிஞர் அண்ணா முதல்வராக இருந்த போது, திருக்குறள் வாசகங்களை தமிழக அரசின் பஸ்களில் எழுதி வைக்கும் முறையைக் கொண்டு வந்தார். இதைக் கண்டு பாராட்டியவர்கள் பலர். எரிச்சல் கொண்டு கேலி செய்தவர்களும் உண்டு. 

‘யாகா வாராயினும் நா காக்க..” என்ற திருக்குறள் பஸ்களில் எழுதப்பட்டிருக்கிறதே.. அது யாருக்காக.. யார் நாகாக்க வேண்டும் என்பதற்காக டிரைவருக்கா, கண்டக்டருக்கா, பயணிக்கா, யாருக்காக அந்த குறள்” என்று காங்கிரஸ் கொறடா  கேட்டார். “நாக்கு உள்ள எல்லோருக்கும் தான்” என்று அண்ணா அமைதியாகச் சொல்ல, சட்டசபை கலகலத்தது. 
இது தான் வார்த்தைகளால் வசமாக்குவது. 

‘யாழ்ப்பாணத்தில் ஓர் அன்பரின் வீட்டில் நான் தங்கியிருந்த போது அவர் என்னிடம் வந்து, “நாங்கள் சாப்பிடலாமா?” என்று கேட்டார். எனக்கு உள்ளூர வருத்தம். என்னடா விருந்தாளி நான் வந்திருக்க என்னை விட்டு விட்டுச் சாப்பிடுவது மட்டுமல்லாது என்னிடமே வந்து சொல்லி அனுமதி கேட்கிறாரே என்று எண்ணிக் கொண்டு, “ஆஹா. தாராளமாக!” என்றேன். உள்ளே சென்று திரும்பிய அன்பர். “சாப்பிட அழைத்தோமே?” என்றார். அப்போது தான் எனக்குப் புரிந்தது. ‘நாங்கள்’ என்னும் போது என்னையும் உள்ளிட்டுக் கூறியிருக்கிறார் என்று விளங்கியது.” இப்படி வார்த்தைகளில் இருக்கும் கனத்தை எடை போட்டுச் சொல்லியிருக்கிறார் ம.பொ.சி. 

“மனிதர்கள் தங்கள் அறிவு விருத்தி அடைய பயணம் மேற்கொள்ள வேண்டும். உலகிலுள்ள எல்லா விஷயங்களையும் கூர்ந்து கவனிக்க வேண்டும். கண்களைத் திறந்து வைத்திருக்க வேண்டும்” என்பது சிந்தனையாளர் ரூஸோ வாக்கு. 

எனவே கடல் தாண்டி, மலை தாண்டி செல்ல வேண்டியது இல்லை. உங்கள் அருகில் இருக்கும் மனிதர்களோடு புன்னகை பூத்த முகத்துடன் திகழுங்கள்.

சிரித்துப் பேசுங்கள்.
ரசித்துப் பேசுங்கள். 
எதையும் புரிந்து கொண்டு பேசுங்கள்.

பேச்சு மிக அற்புதமான கலை. உங்கள் உயரத்தை, உள்ளத்தை நட்பை, காதலை பேச்சுத் தான் அடையாளப்படுத்தும்.

உங்கள் பேச்சுத் தான் உங்களை அடையாளம் காட்டும். கருவிகளோடு காலம் கழித்து தனித்து விடாதீர்கள்.

சக மனிதர்களோடு பேசுங்கள்.
நாலு விஷயம் தெரியும்.
நாலு நல்லது கெட்டது புரியும். 
நாலு பேர் நண்பர்களாக சூழ்வார்கள்.

பேசிப் பேசியே பெரிய மனிதர்கள் ஆனவருண்டு. 
பேசாமல் காணாமல் போனவரும் உண்டு. 

நல்ல பேச்சு உங்களை நல்ல அறிமுகம் செய்யும். அதனால் மற்றவர்களுக்கும் சந்தோஷம். உங்களுக்கும் சந்தோஷம் மீண்டு வரும்.

சிரித்துப் பேசுவோம். 
சிந்தித்துப் பேசுவோம்.👍

Saturday, February 20, 2021

மனதின் திடம்

சில நிராகரிப்புகள் முகச்சுளிப்புகள்
மரணத்தினால் கூட ஜிரணிக்க முடியாது, 
ஆனாலும் அவைகளை காலத்தின் துணைக்கொண்டு மற(றை)க்க நினைக்கிறது மனம்.

-சாமி.

Tuesday, February 16, 2021

வாழ்க்கை

லாவோட்சு சொல்கிறார்:

“நீ நீயாக இருப்பதில் திருப்தியுற்று யாரோடும் உன்னை ஒப்பிட்டு பார்க்காமலும் யாரோடும் போட்டியிடாமலும் இருந்தால் உன்னை எல்லாரும் மதிப்பார்கள்”

சரி என்னை நான் எப்படி அறிவேன்? யாரிடம் கேட்பேன்? எந்தச் சாத்திரத்தில் அல்லது வேத புத்தகத்தில் விடை தேடுவேன்? 

தாவோயிசத்திற்கு எந்தவித கோட்பாடோ, வேத நூலோ, விக்கிரகமோ, கோயிலோ, குளமோ, சடங்கோ சம்பிரதாயமோ, தத்துவமோ, புராணமோ, புண்ணியமோ எதுவுமில்லை.

என்னை எப்படி நான் அறிவது? லாவோட்சு சொல்கிறார்”

“At the entre of your being you have the answer. You know who you are and you know what you want.”

“விடை உன்னிடமே மையம் கொண்டிருக்கிறது. நீ யாரென்று நீ அறிவாய். உனது தேவை எதுவெனவும் நீ அறிவாய்.”

நீரின் இயல்புக்கு எதுவும் நிகரில்லை. அதனால்தான் மனிதனின் மேன்மையான தன்மைக்கு நீரை குறியீடாகக் காட்டுகிறார் லாவோட்சு. தாழ்வான பகுதிக்குப் பாய்ந்து செல்வது நீரின் தன்மை. நீர் எல்லாருக்கும் பொதுவானது. தாகம் தீர்க்கும்: வளம் பெருக்கும்; பேதம் பார்க்காது. 

புண்ணிய தீர்த்தம் தேடி வருவோர் உண்டு. கங்கை எல்லாவற்றையும் சுமக்கிறாள்; எல்லோரையும் ஈர்க்கிறாள். தன் மீது விடப்படுகிற தீபங்களையும் மலர்களையும் எத்தனை மகிழ்ச்சியாக ஏற்கிறாளோ அதே அளவு மகிழ்ச்சியோடு தன் மீது மிதந்து செல்லும் சவங்களையும் கங்கை சுமந்து செல்கிறாள்.

நதி நீர் நிற்பதில்லை. நதிக்கு நினைவுகள் உண்டா? நேற்றைய நதி வேறல்லவா? இன்றைய நதி புதிதல்லவா? ஓடிக் கொண்டிருப்பது மட்டுமே அவளது நியதி. நாளையைப் பற்றி அவளுக்கு என்ன கவலை? கடந்து சென்று கொண்டிருப்பது மட்டுமே அவளது வேலை. 

தோன்றிய இடத்துக்கு மீள்வது பிரபஞ்ச நியதி. இதுதான் தாவோவின் வழி.

தாவோ ஞானிகள் எளிய மனிதர்கள். பகட்டும் புகழும் அவர்களது பரம்பரையில் இல்லை. எல்லாரும் அவர்களுக்குச் சமம். நீரைப் போலவே அவர்களும் தாழ்ந்த மனங்களையும் மனிதர்களையும் விரும்பி ஏற்பார்கள். அவர்களை நிராகரிப்பதில்லை. தாமரை இலை தண்ணீர் எனத் தங்களை நகர்த்திக் கொண்டு வாழ்வார்கள். அவர்களுக்கு இன்னலும் இன்பமும் ஒன்றே. தாவோவின் வழியில் மனம் பதிந்த பின் ‘தீயுக்குள் விரலை விட்டால் கண்ணனைத் தீண்டும் இன்பம்’ பெறலாம்.

எதிர்ப்பது உன் செயல் அல்ல. ஏற்றுக்கொள். இயைவது இயல்வது. நீரின் போக்கில் மிதந்து செல்லும் ஓர் இலைக்கு உண்டா ஏதாவது அவஸ்தை? வாழ்க்கையும் அப்படித்தான். 

லாவோட்சு சொல்கிறார்:

“Life is a series of natural and spontaneous changes. Don’t resist them - that only creates sorrow. Let reality be reality. Let things flow naturally forward in whatever the way they like.”

“வாழ்க்கை ஒரு இயற்கையான எதிர்பாராத தன்னியல்பான மாற்றங்களின் தொடர். மாற்றங்களை எதிர்த்து நிற்காதே. முரணும் எதிர்ப்பும் துயரத்தைத் தோற்றுவிக்கும். யதார்த்தம் யதார்த்தமாகவே இருக்கட்டும். அவையவை அதனதன் போக்கில் இயல்பாக முன்னேறிச் செல்லட்டும்.”
   
- தாவோ தே ஜிங் நூலிலிருந்து