Monday, February 22, 2021

படித்ததில் பிடித்தது--பேச்சு ஒரு அடையாளம்..!!!

பேச்சு ஒரு அடையாளம்..!!!

நண்பன் என்பவன் நம் கதைகளைக் கேட்பவன். உயிர் நண்பன் என்பவன் அந்தக் கதைகளில் இருப்பவன். நம்மை சந்தோஷப்படுத்த பேசுகின்ற நண்பனை விட நம்முடைய சந்தோஷத்தில் ஒருவனாக நம்முடைய சங்கடத்தில், கஷ்டத்தில் துணையாக வருபவனே சரியான நண்பன். வார்த்தைகளை வீணடிக்காதீர்கள். அது வாழ்க்கையை வீணடிக்க வல்லமையுள்ளது என்கிறார் கவிஞர் தாமரை.  

ஆமாம். இன்றைக்கு வார்த்தையின் மதிப்பு தெரியாமல் அவற்றை உதாசீனப்படுத்தி விட்டு விட்டுப் போகும் போக்கு அதிகமாகி வருகின்றது. அதே போல அன்றைக்கு வாக்கு தவறாத மனிதர்கள் இருந்தார்கள். கொடுத்த வாக்கை எப்படியாவது காப்பாற்றினார்கள். வார்த்தைகளால் வசீகரித்தவர்கள் இருந்தார்கள். ஆனால் இன்று மனிதன் பேசுவது ரொம்ப அரிதாகி வருகிறது. 

முன்பெல்லாம் ரயில் பயணத்தில் சந்தித்து பேசிக் கொண்டவர்கள், பேருந்து பயணத்தில் அறிமுக மானவர்கள், நட்பை புதுப்பித்துக் கொண்டவர்கள், பயணங்களில் பல கதைகளைப் பேசிய மனிதர்கள் இப்போது ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப், டுவிட்டர் என்று கையளவு கருவிக்குள் முடங்கிப் போனார்கள். இதனால் தன்னையும் தொலைத்து, தன்னைச் சுற்றி இருப்பவர்களில் புதிய நட்பைப் பெறாமல், ஆளுக்கொரு தீவாகி கொண்டு இருக்கிறார்கள். வார்த்தைகளை தேடி பிடித்தும் சரியான வார்த்தைகளை கண்டெடுத்தும் பேசும் வழக்கம் அரிதாகி விட்டது. 

“என்னுடைய வீட்டைச் சுற்றிலும் சுவர்களை எழுப்பி ஜன்னல்களை மூட நான் விரும்பவில்லை. உலகின் கலாச்சாரக் காற்று என் வீட்டின் உள் பக்கமாய் சுதந்திரத்துடன் வீசட்டும்”  என்கிறார் தேசப்பிதா காந்தியடிகள். 

“ஒரு மனிதனை எடை போடுவது அவன் தன் வாழ்வின் முடிவை எப்படியெல்லாம் செலவழித்தான் என்பதைப் பொறுத்துத் தான் வெளியுலகில் ஒருவன் எவ்வளவு அதியற்புத மனிதனாக விளங்கினாலும், அவனுடைய மனைவியும் உடன் பிறப்புகளும், உறவினர்களும் அப்படி அதிசயிக்கும்படியான எதையும் அவனிடம் காண்பதில்லை. காரணம் இவன் இங்கு வேறு மாதிரி இருக்கிறான். 

அறிஞர் அண்ணா முதல்வராக இருந்த போது, திருக்குறள் வாசகங்களை தமிழக அரசின் பஸ்களில் எழுதி வைக்கும் முறையைக் கொண்டு வந்தார். இதைக் கண்டு பாராட்டியவர்கள் பலர். எரிச்சல் கொண்டு கேலி செய்தவர்களும் உண்டு. 

‘யாகா வாராயினும் நா காக்க..” என்ற திருக்குறள் பஸ்களில் எழுதப்பட்டிருக்கிறதே.. அது யாருக்காக.. யார் நாகாக்க வேண்டும் என்பதற்காக டிரைவருக்கா, கண்டக்டருக்கா, பயணிக்கா, யாருக்காக அந்த குறள்” என்று காங்கிரஸ் கொறடா  கேட்டார். “நாக்கு உள்ள எல்லோருக்கும் தான்” என்று அண்ணா அமைதியாகச் சொல்ல, சட்டசபை கலகலத்தது. 
இது தான் வார்த்தைகளால் வசமாக்குவது. 

‘யாழ்ப்பாணத்தில் ஓர் அன்பரின் வீட்டில் நான் தங்கியிருந்த போது அவர் என்னிடம் வந்து, “நாங்கள் சாப்பிடலாமா?” என்று கேட்டார். எனக்கு உள்ளூர வருத்தம். என்னடா விருந்தாளி நான் வந்திருக்க என்னை விட்டு விட்டுச் சாப்பிடுவது மட்டுமல்லாது என்னிடமே வந்து சொல்லி அனுமதி கேட்கிறாரே என்று எண்ணிக் கொண்டு, “ஆஹா. தாராளமாக!” என்றேன். உள்ளே சென்று திரும்பிய அன்பர். “சாப்பிட அழைத்தோமே?” என்றார். அப்போது தான் எனக்குப் புரிந்தது. ‘நாங்கள்’ என்னும் போது என்னையும் உள்ளிட்டுக் கூறியிருக்கிறார் என்று விளங்கியது.” இப்படி வார்த்தைகளில் இருக்கும் கனத்தை எடை போட்டுச் சொல்லியிருக்கிறார் ம.பொ.சி. 

“மனிதர்கள் தங்கள் அறிவு விருத்தி அடைய பயணம் மேற்கொள்ள வேண்டும். உலகிலுள்ள எல்லா விஷயங்களையும் கூர்ந்து கவனிக்க வேண்டும். கண்களைத் திறந்து வைத்திருக்க வேண்டும்” என்பது சிந்தனையாளர் ரூஸோ வாக்கு. 

எனவே கடல் தாண்டி, மலை தாண்டி செல்ல வேண்டியது இல்லை. உங்கள் அருகில் இருக்கும் மனிதர்களோடு புன்னகை பூத்த முகத்துடன் திகழுங்கள்.

சிரித்துப் பேசுங்கள்.
ரசித்துப் பேசுங்கள். 
எதையும் புரிந்து கொண்டு பேசுங்கள்.

பேச்சு மிக அற்புதமான கலை. உங்கள் உயரத்தை, உள்ளத்தை நட்பை, காதலை பேச்சுத் தான் அடையாளப்படுத்தும்.

உங்கள் பேச்சுத் தான் உங்களை அடையாளம் காட்டும். கருவிகளோடு காலம் கழித்து தனித்து விடாதீர்கள்.

சக மனிதர்களோடு பேசுங்கள்.
நாலு விஷயம் தெரியும்.
நாலு நல்லது கெட்டது புரியும். 
நாலு பேர் நண்பர்களாக சூழ்வார்கள்.

பேசிப் பேசியே பெரிய மனிதர்கள் ஆனவருண்டு. 
பேசாமல் காணாமல் போனவரும் உண்டு. 

நல்ல பேச்சு உங்களை நல்ல அறிமுகம் செய்யும். அதனால் மற்றவர்களுக்கும் சந்தோஷம். உங்களுக்கும் சந்தோஷம் மீண்டு வரும்.

சிரித்துப் பேசுவோம். 
சிந்தித்துப் பேசுவோம்.👍

No comments:

Post a Comment