லாவோட்சு சொல்கிறார்:
“நீ நீயாக இருப்பதில் திருப்தியுற்று யாரோடும் உன்னை ஒப்பிட்டு பார்க்காமலும் யாரோடும் போட்டியிடாமலும் இருந்தால் உன்னை எல்லாரும் மதிப்பார்கள்”
சரி என்னை நான் எப்படி அறிவேன்? யாரிடம் கேட்பேன்? எந்தச் சாத்திரத்தில் அல்லது வேத புத்தகத்தில் விடை தேடுவேன்?
தாவோயிசத்திற்கு எந்தவித கோட்பாடோ, வேத நூலோ, விக்கிரகமோ, கோயிலோ, குளமோ, சடங்கோ சம்பிரதாயமோ, தத்துவமோ, புராணமோ, புண்ணியமோ எதுவுமில்லை.
என்னை எப்படி நான் அறிவது? லாவோட்சு சொல்கிறார்”
“At the entre of your being you have the answer. You know who you are and you know what you want.”
“விடை உன்னிடமே மையம் கொண்டிருக்கிறது. நீ யாரென்று நீ அறிவாய். உனது தேவை எதுவெனவும் நீ அறிவாய்.”
நீரின் இயல்புக்கு எதுவும் நிகரில்லை. அதனால்தான் மனிதனின் மேன்மையான தன்மைக்கு நீரை குறியீடாகக் காட்டுகிறார் லாவோட்சு. தாழ்வான பகுதிக்குப் பாய்ந்து செல்வது நீரின் தன்மை. நீர் எல்லாருக்கும் பொதுவானது. தாகம் தீர்க்கும்: வளம் பெருக்கும்; பேதம் பார்க்காது.
புண்ணிய தீர்த்தம் தேடி வருவோர் உண்டு. கங்கை எல்லாவற்றையும் சுமக்கிறாள்; எல்லோரையும் ஈர்க்கிறாள். தன் மீது விடப்படுகிற தீபங்களையும் மலர்களையும் எத்தனை மகிழ்ச்சியாக ஏற்கிறாளோ அதே அளவு மகிழ்ச்சியோடு தன் மீது மிதந்து செல்லும் சவங்களையும் கங்கை சுமந்து செல்கிறாள்.
நதி நீர் நிற்பதில்லை. நதிக்கு நினைவுகள் உண்டா? நேற்றைய நதி வேறல்லவா? இன்றைய நதி புதிதல்லவா? ஓடிக் கொண்டிருப்பது மட்டுமே அவளது நியதி. நாளையைப் பற்றி அவளுக்கு என்ன கவலை? கடந்து சென்று கொண்டிருப்பது மட்டுமே அவளது வேலை.
தோன்றிய இடத்துக்கு மீள்வது பிரபஞ்ச நியதி. இதுதான் தாவோவின் வழி.
தாவோ ஞானிகள் எளிய மனிதர்கள். பகட்டும் புகழும் அவர்களது பரம்பரையில் இல்லை. எல்லாரும் அவர்களுக்குச் சமம். நீரைப் போலவே அவர்களும் தாழ்ந்த மனங்களையும் மனிதர்களையும் விரும்பி ஏற்பார்கள். அவர்களை நிராகரிப்பதில்லை. தாமரை இலை தண்ணீர் எனத் தங்களை நகர்த்திக் கொண்டு வாழ்வார்கள். அவர்களுக்கு இன்னலும் இன்பமும் ஒன்றே. தாவோவின் வழியில் மனம் பதிந்த பின் ‘தீயுக்குள் விரலை விட்டால் கண்ணனைத் தீண்டும் இன்பம்’ பெறலாம்.
எதிர்ப்பது உன் செயல் அல்ல. ஏற்றுக்கொள். இயைவது இயல்வது. நீரின் போக்கில் மிதந்து செல்லும் ஓர் இலைக்கு உண்டா ஏதாவது அவஸ்தை? வாழ்க்கையும் அப்படித்தான்.
லாவோட்சு சொல்கிறார்:
“Life is a series of natural and spontaneous changes. Don’t resist them - that only creates sorrow. Let reality be reality. Let things flow naturally forward in whatever the way they like.”
“வாழ்க்கை ஒரு இயற்கையான எதிர்பாராத தன்னியல்பான மாற்றங்களின் தொடர். மாற்றங்களை எதிர்த்து நிற்காதே. முரணும் எதிர்ப்பும் துயரத்தைத் தோற்றுவிக்கும். யதார்த்தம் யதார்த்தமாகவே இருக்கட்டும். அவையவை அதனதன் போக்கில் இயல்பாக முன்னேறிச் செல்லட்டும்.”
- தாவோ தே ஜிங் நூலிலிருந்து
No comments:
Post a Comment