Friday, April 17, 2020

ஒரு துளி கண்ணீர்

எஸ்ராவின் வலைப்பக்கத்திலிருந்து
குறுங்கதை 50 
ஒரு துளி கண்ணீர்

“சிரமம் வேண்டாம் வெளியிலே சாப்பிட்டுக் கொள்கிறேன்“ என்றான் நாதன். ஆனால் பழனி கேட்கவேயில்லை. “எப்போதும் வெளியே தானே சாப்பிடுகிறீர்கள். இன்றைக்கு என் வீட்டிற்கு மதியம் சாப்பிட வாருங்கள்“ என்றார். எவ்வளவோ மறுத்தும் பழனி கேட்கவில்லை.

மதியம் ஒரு மணிக்குச் சாப்பிட வருவதாக ஒத்துக் கொண்டான். இருவரும் ஒரே அலுவலகத்தில் வேலை செய்தார்கள். முப்பத்தியெட்டு வயதாகியும் நாதன் திருமணம் செய்து கொள்ளவில்லை. தனியறை எடுத்துத் தங்கியிருந்தான். பழனி புறநகரில் குடியிருந்தார்.

தெரிந்தவர் வீட்டில் போய்ச் சாப்பிடுவது கூச்சமானது. எதைச் சாப்பிடுகிறோம் எவ்வளவு சாப்பிடுகிறோம் என்று கவனமாக இருக்க வேண்டும். எதையாவது பிடிக்கவில்லை என்று ஒதுக்கினால் மனக்கஷ்டம் உண்டாகிவிடும். ஹோட்டலில் அந்த நெருக்கடி கிடையாது.

நாதன் வழக்கமாக ஒரு மெஸ்ஸில் தான் சாப்பிட்டான். ஞாயிற்றுக்கிழமை காலையில் எப்போதும் சாப்பிடுவது கிடையாது. ஆகவே பனிரெண்டு மணிக்கெல்லாம் மதியச்சாப்பாட்டினை முடித்துவிடுவான். ஆனால் அடுத்த வீட்டில் பனிரெண்டு மணிக்குச் சாப்பாடு எதிர்பார்க்க முடியாது தானே.

ஒரு மணிக்குச் சாப்பிட வருவதாகச் சொன்ன போதும் நாதன் போன போது மணி ஒன்றரை ஆகியிருந்தது. வீட்டின் காலிங்பெல்லை அடிக்கும் போது உள்ளே ஏதோ உரத்த சப்தம் கேட்டது.

“யாருனு பாருங்க“ என்று ஒரு பெண் குரல் கேட்டது. “ஏன் கத்துறே“ எனச் சொல்லியபடியே பழனி கதவைத் திறந்தார்.

நாதனைக் கண்டதும் பொய் சிரிப்புடன் உள்ளே அழைத்துப் பிரம்பு நாற்காலியில் உட்கார வைத்தார். சமையல் அறையினுள் எழுந்த புகை ஹால் வரை பரவியிருந்தது.

“அப்பளம் பொறிச்சிட்டா சாப்பிடலாம்“ என்றார் பழனி. டீப்பாயில் கிடந்த வார இதழைப் புரட்டிக் கொண்டிருந்தான். பழனி உள்ளே போய் ஏதோ கேட்பது தெரிந்தது. மணி இரண்டைக் கடந்த பிறகும் சாப்பாடு தயாராகி முடியவில்லை. நாதன் பொறுமையாகக் காத்திருந்தான்.

இலை போட்டு உப்பு வைத்து அந்தப் பெண் சோறு பரிமாறினாள். அப்போது தான் அவளை முதன்முறையாகப் பார்த்தான். நெற்றியில் நீளமான தழும்பு, களைத்துப் போன முகம். அந்தப் பெண் சோற்றுக் கரண்டியினை உயர்த்தும் போது  தன்னை அறியாமல் அவள் கண்ணிலிருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் உதிர்ந்து சோற்றில் விழுந்தது. பழனி அதைக் கவனித்தானா எனத் தெரியவில்லை.

அந்தப் பெண் சோற்றில் விழுந்த கண்ணீரைப் பார்த்தபடியே சேலையால் முகத்தைத் துடைத்துக் கொண்டாள். கண்ணீர் துளி விழுந்த சோற்றை எப்படிச் சாப்பிடுவது என நாதன் கவலை கொண்டான்.

அவர்களுக்குள் என்ன சண்டை. எதற்காக அழுகிறாள். தன் பொருட்டுத் தான் சண்டையா, எதுவும் விளங்கவில்லை. அவன் சோற்றில் கைவைக்காமல் அமர்ந்திருந்தான். அந்தப் பெண் எதுவும் நடக்காதவள் போலச் சோற்றில் சாம்பார் ஊற்றினாள். கண்ணீர் அதில் கரைந்து போனது. மெல்லிய குரலில் சாப்பிடுங்கள் என்று சொன்னாள்

கண்ணீர் துளி கலந்த சோற்றைச் சாப்பிடுவது மனதைக் கனக்கச் செய்தது. பழனி அவளை நோக்கி “சாருக்கு நெய் போடு“ என்றார். நாதன் வேண்டாம் என்றபோதும் அவள் நெய் போட்டாள். அவள் முகத்தில் விவரிக்க முடியாத வேதனை படிந்திருந்ததைக் காண முடிந்தது.

சோற்றைப் பிசைந்து சாப்பிட்டான். ஒரு துளி கண்ணீர் சாப்பாட்டின் ருசியை மாற்றிவிடுகிறது. அவனால் அச் சோற்றைச் சாப்பிட முடியவில்லை. ஆனால் சாப்பிடாமல் போனால் நிச்சயம் அந்தப் பெண்ணைப் பழனி திட்டுவார். சண்டை போடுவார். அது அப்பெண்ணிற்கு மேலும் துயரம் என்பதால் விருப்பமேயில்லாமல் சாப்பிட்டான்.

இனி ஒரு போதும் யார் வீட்டிற்கும் சாப்பிடப் போகக்கூடாது என்று மனதில் ஒரு குரல் எழுந்து கொண்டேயிருந்தது.

சாப்பிட்டு முடித்து இலையை மடக்கிய போது பழனி கேட்டார்

“சாப்பாடு பிடிக்கலையா . சரியாவே சாப்பிடலை“

“அப்படியெல்லாம் இல்லை நல்லா சாப்பிட்டேன்“ என்றான்

கைகழுவுவதற்காக அவர்கள் பின்கட்டிற்குப் போனார்கள்

அந்தப் பெண் எச்சில் இலையைப் பார்த்து ஏதோ சொல்லிக் கொண்டிருப்பது கேட்டது. கையைத் துடைத்தபடியே வந்த பழனி என்ன என்று கோபமாக அவளிடம் கேட்டார். அவள் பதில் சொல்லவில்லை. சில நிமிடங்களில் கிச்சனில் இருந்த ரேடியோ பாட ஆரம்பித்தது. பழனியிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு நாதன் தன் அறைக்கு வந்தான். பெருங்குற்றவுணர்ச்சி அவனை ஆக்கிரமித்துக் கொண்டது.

அதன் சில நாட்களில் நாதன் மாற்றல் வாங்கிக் கொண்டு வேறு ஊருக்குப் போய்விட்டான். ஆனால் தன் வாழ்நாள் முழுவதும் சோற்றைக் காணும் போதெல்லாம் ஒரு துளி கண்ணீரின் நினைவு வருவதை மட்டும் அவனால் தவிர்க்க முடியவேயில்லை

Wednesday, April 15, 2020

அவ (ள்)நம்பிக்கை

அவளின் சொல்லில் 
நம்பிக்கை இருந்தது.
சாமியின் சிந்தனை.

Tuesday, April 14, 2020

காலமாற்றம்

இப்பொழுதெல்லாம் கேட்டவுடன் யோசிக்காமல் வருவது பொய்யாகவும்,  யோசித்தப்பின் வருவது மெய்யாகவும் உள்ளது. சாமியின் சிந்தனை.

Sunday, April 12, 2020

கொரானா காலம்

காக்கை குடும்பத்துடன் வந்து என்னை சன்னல் வழியே பார்க்கும்போதெல்லாம், நான் குடும்பத்துடன் மிருகக்காட்சி சென்றது நினைவுகளில் வந்து செல்கிறது. சாமியின் சிந்தனை.

Thursday, April 9, 2020

கடன்வாங்கப்பட்ட #கருத்துக்கள், #தத்துவங்கள் உங்களது தலையில் இருக்கும்.

"ஒரு கதை!!!

ஒரு தத்துவாதி கிழிந்த காலணியை  சரிசெய்வதற்கு செருப்பு தைப்பவரிடம் சென்றார் . 

அவர்  இந்தவொரு ஜோடி காலணி மட்டுமே வைத்திருந்ததால் நான் காத்திருக்கின்றேன் .தைத்துக் கொடுங்கள் என்றார்.  

உடனே கடையை சாத்திவிட்டு நடையை கட்டுகிற நேரம். நாளை வாருங்கள் தைத்து வைத்திருக்கின்றேன் என்றார்.  

இல்லையில்லை என்னிடம் இந்த காலணிகள்தான் உள்ளது. ஆகவே தைத்துக்கொடுங்கள் என்று வற்புறுத்தினார்.  

 முடியாது.  நேரமாகிவிட்டது.  உங்களுக்காக என்னிடம் உள்ள காலணியைத் தருகின்றேன். இப்போது போட்டுக்கொண்டு செல்லுங்கள். நாளை வரும்போது நான் கொடுத்த செருப்பைக் கொடுத்துவிட்டு சரிசெய்த செருப்பைப் போட்டுக் கொள்ளலாம் என்றார்.  

அடுத்தவர்கள் போட்டுத் தேய்த்த செருப்பை நான் போடுவதா? நான் யாரென்று நினைத்தீர்கள்.  என்றார் கோபத்துடன் தத்துவவாதி.  

மற்றவர்களுடையக் கருத்துக்களை நீங்கள் கடன் வாங்கி உங்களது மண்டையில் வைத்துக் கொள்கின்றபோது மற்றவர்கள் அணிந்துகொண்ட இந்த செருப்பை அணிந்துகொள்வதில் தவறு ஒன்றுமில்லை என்று சிரித்துக்கொண்டே சொன்னார்.  

ஆகவே, இன்று ஒருநாள்  இந்த செருப்பைப் போட்டுக்கொண்டு செல்லுங்கள் என்றார்.  

அது உங்களது காலில் இருக்கும்.  மற்றவர்களிடமிருந்து கடன்வாங்கப்பட்ட  #கருத்துக்கள், #தத்துவங்கள் உங்களது தலையில் இருக்கும்.  

ஆகவே, மற்றவருடைய செருப்பை அணிந்துகொள்வதில் தவறு ஒன்றுமில்லை என்றார். 

#ஓஷோ

படித்த கதை

சிறுகதை


பாசப் போராட்டம்



என்னங்க மூட்டை

ஒண்ணுமில்ல. ரேசன் கடையில ஆயிரம் ரூபா குடுத்தாங்க அதான் கொஞ்சம் மளிகை சாமான் வாங்கிட்டு வந்தேன்

ஓடிவந்து மூட்டையைக் பிரிக்கும் மனைவியை அதட்டினார்

ஏய் அத எடுக்காத இது நமக்கு இல்ல. இது நம்ம பொண்ணு வீட்டுக்கு

ஏன் நமக்கு வாயும் வயிறும் இல்லையா. உங்க பொண்ணுக்கு மட்டும் தான் வாயும் வயிறும் இருக்குதா. ஆயிரம் ரூபா வாங்கிட்டு வந்துருக்கீங்க. மீதிய குடுங்க

இதுவே 1400 ரூபாய் ஆச்சு, 400 ரூபாய் கடன் சொல்லிட்டு வந்திருக்கேன்

அப்போ எனக்கு ஆஸ்துமா மாத்திரை வாங்கலே. அந்த உறிஞ்சிர மிசினு இன்னும் வாங்கல அதானே

வாங்கிக்கலாம். எப்படியும் காசு வரும்போது உனக்கு வாங்கி தரேன். உனக்கு வாங்கித் தராம வேற யாருக்கு வாங்கி தர போறேன்

அய்யோ வாங்கி கொடுத்தாலும், நான் ஆறு மாசமா கேட்டுட்டு இருக்கேன். மூச்சு விட முடியல. கஷ்டமா இருக்குன்னு சொல்லிட்டு இருக்கேன். அதை வாங்கி கொடுக்க முடியல. 1000 வா வாங்கி அப்படியே மகளுக்கு மளிகை சாமான் வாங்கிட்டு வந்துட்டீங்க


எப்படி போவீங்க பஸ் இல்ல. ட்ரெயின் இல்ல. ஆட்டோவும் கிடையாது.எப்படி போவீங்க.

சைக்கிள் ல போவேன்

ஏன் பாதிலேயே வெய்யில்ல சுருண்டு விழுந்து சாகுறதுக்கா

நல்ல வார்த்தையே பேச மாட்டியா நீ

இப்ப போக வேணாம் நாளைக்கு காலைல போய் குடுத்துக்கலாம்

இல்லல்ல நான் இப்பவே கிளம்புறேன்

போங்க. போலீஸ்காரன் சாமானையும் சைக்கிளையும் புடுங்கி வச்சுகிட்டு, உங்களை தோப்புக்கரணம் போட சொல்லுவானோ, குட்டிக்கரணம் போட சொல்லுவானோ. நடந்து தான் வரப் போறீங்க

நல்ல வார்த்தையே பேச மாட்டியா

அய்யய்யோ துரை போருக்கு போறாரு. நல்ல வார்த்தை சொல்லி அனுப்பனும்.

சரி கிளம்பனும் பழைய சோறு இருந்தா கொடு

அதான் மக வீட்டுக்கு போறீங்கள்ள. உங்க மக சமைச்சு வச்சிருப்பா. அங்கே போய் சாப்பிட்டு வாங்க

சரி நான் கிளம்புறேன்

சொன்னா கேக்க மாட்டீங்க. பட்டா தான் உங்களுக்கு புத்தி வரும்.போலீஸ்காரன் உங்கள அடிச்சு உதைச்சு அனுப்பும்போது தான் நான் சொன்னது ஞாபகத்துக்கு வரும்

அவர் சைக்கிளில் எல்லா மளிகை சாமான்களையும் மூட்டையாக கட்டி, பின்பக்கம் வைத்துக் கொண்டு கிளம்பினார்

ஒரு ஐந்து கிலோமீட்டர் வந்திருப்பார்.அங்கே சாலையில் தடுப்பு அமைத்து ஜிப்போடு போலீஸ்காரர்கள் நின்று கொண்டிருந்தார்கள்.
மனைவி சொன்னது போல் போலீஸ்காரர்கள் சாமானையும் சைக்கிளையும் பிடிங்கி கொள்வார்களோ. தோப்புக்கரணம் போடச் சொல்லி போட்டோ எடுத்து டிவியில் போடுவார்களோ.தெரியாமல் வந்து விட்டோமோ.
பயம் தொற்றிக் கொண்டது.

அவர் அருகில் சென்றபோது ஒரு போலீஸ்காரர் தடுத்து நிறுத்தினார்

என்னா பெருசு எங்க கிளம்பிட்டே

ஐயா அயனாவரம் வரை போறேங்கய்யா. மக வீட்டுக்கு மளிகை சாமான் வாங்கிட்டு போறேங்கய்யா

சைக்கிளை ஓரமாக நிறுத்து.  அந்த மூட்டைய தூக்கிட்டு வா

அவ்வளவுதான் 1,400 ரூபாய் மளிகை சாமான் போக போவுது

மிதிவண்டியை நிறுத்தி ஸ்டாண்ட் போட்டு, மளிகை சாமான் மூட்டையை இறக்கி கீழே வைத்தார்

யோவ் பெருசு அந்த ஜீப்புக்குள்ள இன்ஸ்பெக்டர் உக்காந்திருக்காரு அவரை போய் பாரு

அவர் போலீஸ் வண்டியை நோக்கி நடந்தார். வண்டியில் வாட்டசாட்டமாய் கூலிங் கிளாஸ் போட்ட பெரிய மீசை வைத்திருந்த அந்த இன்ஸ்பெக்டர் அமர்ந்திருந்தார்

என்ன பெரியவரே எங்க கிளம்பிட்டீங்க

ஐயா அயனாவரம் வரை போறேங்கய்யா. பொண்ணு அங்க இருக்கு.  மாப்பிள்ளை டிரைவரா இருக்காரு. வேலை இல்ல. அதான் கவர்மெண்ட் கொடுத்த ஆயிரம் ரூபாயில கொஞ்சம் மளிகை சாமான் வாங்கிட்டு போறேங்கய்யா

ஊர்ல தடை போட்டுருக்காங்க தெரியாதா பெரியவரே

தெரியுங்கய்யா. ஆனா நாலு உசுரு அங்க சோத்துக்கு இல்லாம கஷ்டப்படுமே. அதனாலதான் இத போயி கொடுத்துட்டு வந்துடலாம்னு கெளம்பினேய்யா

என்ன வயசு ஆகுது பெரியவரே உங்களுக்கு

63 வயசு ஆகுதுங்கய்யா

அருகில், நடு சாலையில் பத்துப் பதினைந்து இளைஞர்கள் தோப்புக்கரணம் போட்டுக் கொண்டிருந்தார்கள். இவருக்கு மனசு பிசைந்தது. நடுக்கம் வந்தது.

கான்ஸ்டபிள் வந்தார்.

சார் இந்த ஆள் கொண்டு வந்த மூட்டைய சீஸ் பண்ணிட்டேன் சார்

உன் வயசென்னை அவரு வயசு என்ன ஆளுன்ற

சாரி சார்

அந்த கான்ஸ்டபிள் தள்ளி போய் நின்று கொண்டார்.

பெரியவரே சாப்பிட்டீங்களா

இல்லீங்க சார்

கான்ஸ்டபிள் அந்த சாப்பாடு பொட்டலத்துல ஒண்ணு  எடுத்து குடு

ஐயா எனக்கு வேண்டாய்யா. நான் மகள் வீட்டுல போய் சாப்பிடுகிறேன்

 சாலையில் தோப்புக்கரணம் போட்டுக் கொண்டிருந்த இளைஞர்களில் ஒருவன் ஏதோ சொல்ல,

சட்டமா பேசறே என்று ஒரு கான்ஸ்டபிள் அவனை முதுகில் அடித்தார்

அங்க போய் கறியும் சோறும் தின்னுங்க.  இது சும்மா பிரிஞ்ஜி தான்.  சாப்பிட்டுக்கங்க. வெயில்ல எப்படி சைக்கிள் மிதிப்பீங்க

சாப்பிட்ட பின் தோப்புக்கரணம் போட சொல்வார்களோ

ஜீப் மைக் கர கரவென்று பேசிக்கொண்டே இருந்தது.

நாளைக்கு காலையில் சீக்கிரமா கிளம்பி போயிருக்கலாம் என்று நினைத்துக்கொண்டார்.
கான்ஸ்டபிள் எடுத்து வந்து கொடுத்த ஒரு பொட்டலத்தையும் ஒரு தண்ணீர் பாட்டிலையும் வாங்கிக்கொண்டார்.

பெரியவரே அதோ ரூம் இருக்குல்ல. அங்க உக்காந்து சாப்பிடுங்க.
இன்ஸ்பெக்டர் சொன்ன இடத்தில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தார்

பெரியவரே நல்லா சாப்பிடுங்க இன்னொரு பொட்டலம் வேணுமா

இன்ஸ்பெக்டர் கேட்க, அவர் வேண்டாம் என்று தலையாட்டினார்.

சாப்பிட்டு தண்ணீர் குடித்து கை கழுவினார். பரவாயில்லை வயிறு ரொம்பிடுச்சி. இப்ப முட்டி போடலாம். தோப்புக்கரணம் போடலாம்.

பெரியவரே சாப்பிட்டீங்களா

சாப்பிடங்கய்யா

ஜீப்ல கொண்டு வந்து உங்க மகள் வீட்டுல விடட்டுமா

ஐயா வேண்டாங்கய்யா நான் போயிடுவேங்கய்யா

சரி இந்த பனியனை போட்டுக்கோங்க. இந்த தொப்பிய போட்டுக்கோங்க. இது வாலண்டியர்ஸ்  போட்டுக்கறது. அரசாங்கம் கொடுக்கிற பணத்தை வாங்கினமா தண்ணி அடிச்சமா தலைகுப்புற விழுந்தமான்னு இல்லாம, நாலு உசுருக்கு சோறு போட சாமான் வாங்கிட்டு போறீங்களே. நீங்க தான் உண்மையான வாலண்டியர்.
 இந்த பனியனை  போட்டுக்கோங்க. பத்திரமா போயிட்டு வாங்க.

அது கனவா நனவா என்று நம்ப முடியாமல் பனியனை வாங்கி மாட்டிக்கொண்டார்.

இன்ஸ்பெக்டருக்கு இரண்டு கை குவித்து வணக்கம் வைத்தார்.
 சைக்கிளில் ஏறி, மகள் வீட்டை நோக்கி சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தார்.
*
அப்பா எப்படி வந்தீங்க. எதுக்குப்பா சைக்கிள்ல வந்தீங்க. கை கழுவுங்க. 

பேரன்கள் ஓடி வந்து கட்டிக் கொண்டார்கள்.

பேரன்களை அணைத்து உடனே தள்ளிப் போகச் சொன்னார்.

மகள், அவர் வாங்கி வந்த பொருட்களை எடுத்து உள்ளே வைத்துவிட்டு

என்னப்பா தனியா வந்துருக்கீங்க அம்மாவை கூட்டிட்டு வந்து இருக்கலாம்ல

இல்லம்மா. இன்னொரு நாளைக்கு  கூட்டிட்டு வரேன். நான் கிளம்பட்டுமா. இங்க இருக்கிறது அவ்வளவு நல்லது இல்லம்மா. நான் வீட்டுக்கு போயிடுறேன். உங்க அம்மா தனியா இருக்கும்.

அப்பா சாப்பிட்டு போங்கப்பா. சாப்பாடு ரெடியா இருக்குப்பா

நான் சாப்பிட்டேன்மா

ஏதுப்பா இந்த பனியன் நீங்க வாலண்டியரா இருக்கீங்களா

நடந்த எல்லா விஷயங்களையும் மகளிடம் சொன்னார்

பேரன்களை அழைத்து அவர்களுக்கு காசு கொடுத்து விட்டு கிளம்பினார்

மகள் ஒரு பையோடு வந்தாள்.

அப்பா  பையில கொஞ்சம் பழங்கள் இருக்கு. எடுத்துட்டு போயி அம்மாகிட்ட கொடுங்கப்பா. அம்மாவுக்கு ரோட்ஹெலர் மெஷின் வாங்கினேன். அத கொடுத்துடுங்கப்பா.  அம்மாவுக்கு ஆஸ்துமா மாத்திரை வாங்கி இருக்கேன் அதையும் மறக்காம குடுத்துடுங்கப்பா.

பையை வாங்கிக்கொண்டார்.

மாப்பிள்ளை எங்கம்மா

அப்பா அரசாங்கத்துல  காய்கறி எல்லாம் வண்டியில் போய் விக்க சொல்லியிருக்காங்க. அதான் ஒரு காய்கறி வண்டியில டிரைவரா போயிருக்காருப்பா

இந்த ஆஸ்துமா மெஷினுக்கும்,'ஆஸ்துமா மாத்திரைக்கும் ஏதும்மா காசு

போன மாசம் சம்பளத்திலேயே இது இரண்டும் வாங்கி வச்சுட்டேன் பா

அவர் சைக்கிளை எடுக்க வீட்டை விட்டு வெளியே வந்தபோது மகள் ஓடிவந்து அவர் சட்டைப்பையில்  இரண்டு ஐநாறு ரூபாய் நோட்டுகளை வைத்தார்

அப்பா எங்களுக்கும் நேத்துதான் அரசாங்கத்திலிருந்து ஆயிரம் ரூபாய் கொடுத்தாங்க. நேத்து நைட்டு உங்க மாப்பிள்ளை சொல்லிட்டாரு, உங்க அப்பா அம்மாக்கு கொடுத்துடு. நம்ம ஏதாவது வேலை செஞ்சி சம்பாரிச்சுக்கலாம். வயசானவங்க என்ன பண்ணுவாங்கன்னு சொன்னாருப்பா.

சரிம்மா. மாப்பிள்ளைய கேட்டேன்னு சொல்லு. பத்திரமா இருங்கம்மா.

அவர் உயிரை தன் மகள் வீட்டில் வைத்து விட்டு மிதிவண்டியில் ஏறி தன் வீட்டை நோக்கி மிதிவண்டியை இயக்க ஆரம்பித்தார்.

*- புஷ்பா ராஜ்குமார்*