Friday, March 31, 2023

படித்ததில் பிடித்தது

*#சாகாவரம்_வேண்டுமா?*

மகா அலெக்சாண்டர் தனது வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் இறவா வரம் வேண்டி அலைந்தார். 

எல்லாரும் இப்படியான ஒன்றுக்காகக் காலம் காலமாகத் தேடி அலைபவர்கள்தான். 

அலெக்சாண்டரும் அலைந்தார். 

அதைத் தேடித் தேடிக் கண்டும் பிடித்தார். 

அத்தனை சக்திவாய்ந்தவர் அல்லவா.

ஒரு காட்டில் பயணம் செய்தபோது அங்கு தவம் செய்த ஞானிகளில் ஒருவர், 

ஒரு குகை வழியைக் காட்டி, அதற்குள் உள்ள சுனையில் நீர் அருந்தினால், அருந்துபவர்களுக்கு மரணமே இல்லை என்று கூறினார்

அலெக்சாண்டர் புத்திசாலியாக இருந்திருந்தால், இறவாமைக்கு வழிசொன்ன ஞானி அந்த நீரை அருந்தினாரா என்று நிச்சயமாக கேட்டிருந்திருப்பார். 

ஆனால் கேட்கவில்லை. 
அத்தனை அவசரம். 

அந்தக் குகையைச் சென்றடைவதற்குள் அவர் இறந்துபோய்விட்டால் என்ன செய்வது? 

அதனால் அவசரமாகக் குதிரையை ஓட்டிக்கொண்டு போனார்.

குகையை அடைந்தார். 

அதற்குள் ஓடிக்கொண்டிருந்த நீர்ச் சுனையைப் பார்த்தார். 

குகையின் இருட்டுக்குள் ஸ்படிகம் போல தெள்ளத்தெளிவாக இருந்த நீரைப் பார்க்கும்போதே அது ஜீவ நீர் என்று உணர்ந்து மகிழ்ச்சியடைந்தார். 

சுனையின் முனையில் அமர்ந்து கைகளைச் சேர்த்து நீரை அள்ளிப் பருகப் போனார் அலெக்சாண்டர்.

அந்தக் குகையின் இருட்டு மூலையில் உட்கார்ந்திருந்த காகம் ஒன்று, 

“நிறுத்து… தயவுசெய்து அந்த நீரைப் பருக வேண்டாம்” என்றது.

அலெக்சாண்டர் காகத்தைத் திரும்பிப் பார்த்து, “என்ன சொல்கிறாய்? 

இந்த நீரை நீ பருகியிருக்கிறாயா? 

இதில் என்ன பிரச்சினை?” 
என்று கேட்டார்.

காகம் தன் கதையைக் கூறியது. 

“நான் அந்த நீரைக் குடித்தேன். 

தற்போது எனக்கு மரணமே இல்லை. 

ஆனால் நான் தற்போது இறக்க விரும்புகிறேன். 
ஆனால் என்னால் முடியவில்லை. 

எனது வாழ்க்கையில் எல்லாம் முடிந்துவிட்டது. 

இந்த வாழ்க்கையின் மூலமாக அன்பு என்றால் என்னவென்று தெரிந்துகொண்டேன்.

வெற்றியை அறிந்துகொண்டேன். 

நான் காகங்களின் அரசனாக ஆனேன். 

தற்போது எனக்குத் தெரிய வேண்டியது எதுவுமே இல்லை. 

நான் அறிந்த எனது சகாக்கள் அனைவரும் இறந்து போய்விட்டனர். 

அவர்கள் ஓய்வில் உள்ளனர். 
எனக்கு ஓய்வு இல்லை. 

தற்கொலை செய்துகொள்ளவும் முயற்சி செய்தேன்.

ஆனாலும் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்துவிட்டன. 

நீங்கள் இந்தத் தண்ணீரைப் பருகும் முன் எனது நிலை பற்றி கொஞ்சம் சிந்தியுங்கள். 

அதற்குப் பிறகு நீங்கள் இந்தக் குகையின் நீரைக் குடிக்கலாம்” என்று மாமன்னர் அலெக்சாண்டரிடம் காகம் விண்ணப்பம் வைத்தது.

மரணம் என்ற முடிவு இல்லையெனில் வாழ்க்கை என்பது தாக்குப்பிடிக்க முடியாத ஒன்றாக மாறிவிடும். 

அன்பிற்கு எதிர்மறையான ஒன்று இல்லாவிடில், அன்பு என்பதே தாங்க முடியாத ஒன்றாக மாறிவிடும்.

இது புனைவுக்கதையாக இருந்தாலும், இந்தக்கதை உணர்த்தும் உண்மை சிந்திக்க வைக்கிறது.

அன்பானவர்களிடமிருந்து பிரியும்போதுதான் அந்த உறவு அர்த்தமுள்ளதாக 
மாறும். 

இல்லையெனில் எல்லா விஷயங்களும் சலிப்பாகிவிடும். 

வாழ்க்கை, எதிரெதிரான அம்சங்களில்தான் இருக்கிறது. 

அதனால்தான் அது மிக சுவாரசியமாகவும் இருக்கிறது.

Tuesday, March 28, 2023

உன் மீது நான் வைத்திருப்பது உலகப் பெரு பிம்பம்,
அது உடைந்து போகையில் நானும் உடைந்து போகிறேன்.

உனது அக்கறை கரையில்லாத கடல், அதில் கறை காண்கையில் கலங்கித் தான் போகிறேன்.

என் தவறை பலமுறை மன்னித்த உன்னை,
ஒருமுறை மன்னிக்க மனமில்லாமல் கலங்கி நிற்கிறேன்.

உன்மேல் மலைபோல் வைத்திருந்த நம்பிக்கை மண்ணாகி போனதனால்
உன்னை மன்னிக்ககூட முடியவில்லை இந்த முறை,
என்னை மன்னித்து விடு மறுபடியும்.

-பூமி.சாமி

Sunday, March 26, 2023

பணம் இருக்கிறது
பரிகாரம் செய்ய
என்று பாவம் மேல் பாவம் 
செய்பவர்களை
என்ன செய்ய

-பூமி.சாமி.


Friday, March 24, 2023

உண்மை!

சண்டாளி! உன் வசந்தத்தால் 
எனக்கு இலையுதிர் காலம்.

-கவிக்கோ அப்துல் ரகுமான்.

Thursday, March 23, 2023

அடிமேல் அடி
வலிமேல் வலி
மனம் கலங்கத்தான் செய்கிறது

துயரங்களை சொல்ல வார்த்தை இல்லாமல் மௌனம் ஆவதும்

துயரங்களை பகிரும் செவிகளை இழப்பதும்

துயர நேரங்களில் சாயும் தோள்களை
தொலைப்பதும்

ஆறுதல் கூறும் 
மனங்கள், மறுப்பதும்

துயரத்தின் மேல் துயரம்.


-பூமி.சாமி.
ஆயிரம் வார்த்தைகள்
தராத ஆறுதலை அளிப்பது
அதிகாலை அழுகை.

-பூமி.சாமி

Tuesday, March 21, 2023

மனிதர்கள் என்னை ஒதுக்கி
தள்ளினாலும்
 என்னோடு கூட்டு சேர்வதற்கு இங்கு சில குருவிகளும் மரங்களும் இருக்கின்றன
அவைகள் என்னை ஒருபொழுதும் புறந்தள்ளுவது இல்லை.

-பூமி.சாமி‌