Monday, January 30, 2023

குழந்தைகள் வளர்ந்து விட்டனர்

👆#படித்ததில்_மிகவும்_பிடித்தது

என் குழந்தைகள் வளர்ந்து விட்டனர்
நான் தனிமையில் நின்றுவிட்டேன்!!

விரித்த படுக்கை விரிப்பில் 
கசங்கல் இல்லை இப்போது.

அங்கும் இங்கும் சிதறிக்கிடக்கும்
துணிகளும் இல்லை இப்போது.

ரிமோட்டுக்கான சண்டை
ஏதும் இல்லை இப்போது.

புதிய புதிய உணவு கேட்டு
ஆர்ப்பாட்டமும் இல்லை இப்போது.

என் குழந்தைகள் வளர்ந்து விட்டனர் நான் தனிமையில் நின்றுவிட்டேன் !!

காலையில்
எழுந்ததும்
உள்ள  பரபரப்பு 
நேரம்
இல்லை இப்போது!

வீடே பெரிதாய் விசாலமாய்
தோன்றுது இப்போது!!

ஆனாலும் எந்த அறையிலும்
உயிரோட்டம் இல்லை இப்போது!

நகர்த்தினாலும் நகர மறுக்குது
நேரம் இப்போது!

குழந்தைப் பருவ நினைவு
படமாய் சுவரில் தொங்குது இப்போது!

என் குழந்தைகள் வளர்ந்து விட்டனர் நான் தனிமையில் நின்று விட்டேன் !!

முதுகில் சாய்ந்து யாரும் கழுத்தை
கட்டுவதில்லை இப்போது!

குதிரை ஏறி சவாரி செய்ய
முதுகை வளைக்கும் வேலை
இல்லை இப்போது!

உணவு ஊட்ட நிலாவும்
வேண்டியதில்லை இப்போது!

உணவு ஊட்டிய பின் மனதில்
தோன்றும் ஆனந்தமும்
இல்லை இப்போது!

தினமும் வரும் விவாத
விளக்கத்திற்கு
வாய்ப்பில்லை இப்போது!

போடும் சண்டையை
விலக்கிடும் ஆனந்தமும்
இல்லை இப்போது!

மகிழ்ச்சியில் கிடைக்கும்
அன்பு முத்தமும்
இங்கே இல்லை இப்போது!

என் குழந்தைகள் வளர்ந்து விட்டனர் நான் தனிமையில் நின்றுவிட்டேன்!!

கண் இமைப்பதற்குள் வாழ்வின் பொற்காலம் ஓடித்தான் போனது

அழகான அந்த வசந்தம்
எப்போது கரைந்ததோ? 

மழலை மொழியில் 
வழிந்த ஆனந்தமும்,
நொடிச் சிரிப்பும், அழுகையும்,
முதுகில் தட்டித் தந்து,
மடியில் கிடத்தி, தோளில் 
சாய்த்து தாலாட்டு பாடி,
தூங்கச் செய்து அடிக்கடி
விழித்து, கலைந்த போர்வை
சீராய் போர்த்திய காலமும்,
நிலைமையும் இல்லை இப்போது!!

படுக்கும் கட்டிலும் விசாலமாய்
தோன்றுது  இப்போது!

அன்புக் குழந்தைகளின்
இனிய குழந்தைப் பருவம்
எங்கோ தொலைந்து விட்டது!!

பள்ளிக்கு 
அழைத்துச் சென்ற வருடங்களை
நினைக்காத
நாளில்லை!

என் குழந்தைகள் வளர்ந்து விட்டனர் நான் தனிமையில் நின்றுவிட்டேன்!!

தன் காலுறையை எவரும்
அங்கும் இங்குமாய்
எறிவதில்லை இப்போது!

நாற்காலிக்கு போட்டி அப்போது!  
ஆனால் அவை அசைவின்றி, ஆளில்லா
வீடுபோல் நிற்கிறது.

குளியலறையும் ஈரமில்லாமல்
உலர்ந்து கிடக்கிறது இப்போது!

சமையலறையோ அமைதி
மண்டிக் கிடக்கிறது இப்போது!!

காலை மாலை தவறாமல்
உடல்நலம் பற்றி 
அலைபேசியில் விசாரிப்பு.

நான் ஓய்வுடன் நலம் பேண, ஆயிரம் அறிவுரை தருகிறார்கள் இப்போது.

அன்று நான் அவர்களின்
சண்டை விலக்கி வைத்தேன்.

இன்று அவர்கள் எனக்கு
அறிவுரை சொல்கிறார்கள்.

நான் குழந்தையாகி விட்டதை உணர்கிறேன் இப்போது!!

என் குழந்தைகள் வளர்ந்து விட்டனர்
நான் தனிமையில் நின்று விட்டேன்!!

யாரோ ஒருவர் எழுதியது! இன்று இவை எனக்கு!!  நாளை இவை உங்களுக்கு நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

வாழ்க்கையை ரசித்து அனுபவிங்கள்

Thursday, January 26, 2023

பயணத்தில் நடுவில் நிற்கிறேன்
நினைக்கையில் கடந்தகாலம்,
 சில நேரம்  கற்க்கண்டாய்,
சில நேரம் கசப்பாய் இருக்க,

எதிர்காலம், சில நேரங்களில் நம்பிக்கையுடன்,
சில நேரங்களில் நல்இருளாய் தெரிகிறது,

உலகத்தில் கடினமான ஒரு வேலை
உண்டென்றால் அது நிகழ்காலத்தில் நிற்பதுதான் என சவால் விடுகிறது
நிகழ்காலம்

கடந்ததை நினைப்பதா
நிற்பதை ரசிப்பதா
வருவதை வரவேற்பதா
என்று குழம்பி நிற்கையில்
எதையும் ரசிக்கவும் நினைக்கவும் விடாமல் 
என்னை தள்ளிக்கொண்டு போகிறது
வாழ்க்கை.

-சாமி.

Sunday, January 22, 2023

80 களில் அணிந்த இலவச காக்கி கால் சட்டை

காக்கி கால் சட்டை
 இடுப்பிலும் நிற்காது 
பட்டணும் இருக்காது 
அருணா கயிறுக்கும் சிக்காது

 மதிய சத்துணவில் கொடுத்தது
 உலக மண்ணே ஒட்டினாலும் ஒன்னும் ஆகாது
 ஒரு கையை எப்பொழுதும் ஒதுக்கி விட வேண்டும்
 அதை விழாமல் பிடிப்பதற்கு

 இரு மஞ்சப்பை சாமான்கள் ஒரு பையில் கொள்ளும் 
விளையாட்டு சாமான்கள்,
பலுங்கி, பம்பரம், எல்லாம் அதன் உள்ளே ஐக்கியம் 

நெல்லிக்காய், இலந்தை, நாவல் பழம், விளாம்பழம், கடலை,  தீபாவளி முறுக்கு,  சீசனுக்கு ஏற்றார் போல் பையை நிரப்பிக் கொள்ளும் பாங்கான காக்கி கால் சட்டை

 அம்மா கடைக்கு அனுப்பும்போது வெங்காயம், தக்காளி, மளிகை, என நிரப்பி இருபிள்ளைதாட்சி  போல் 
காட்சி தரும் கால் சட்டை 

எத்தனையோ அழுக்கு, எண்ணெய் பசை எதனாலும் அதன் கலரை மாற்ற முடியாது
 அதற்கு ஆகாத ஒரு பொருள் உண்டென்றால் அது தண்ணீர் தான்

 அடுத்த முறை சத்துணவில் புதிய கால் சட்டை கொடுக்கும் வரை அதுதான் முழு நேர சட்டை எனக்கு

 முழுக்கால் சட்டை வித வித வண்ணத்தில் போட்ட பின்பும் இன்னும் மனதை விட்டு அகலாமல் இருக்கிறது அந்த காக்கி கால் சட்டை

-சாமி.

Saturday, January 21, 2023

*🙏மனமே அமைதிகொள்🙏*

*_✍️ படைப்பு:_*
*════════*

*⚜️ ஒரு அரசன் தனது மந்திரியை அழைத்து:...*

*⚜️ இதோ பார் மந்திரியாரே, நான் இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தின் அரசனாக இருக்கிறேன்.*

எனக்கு இல்லை என்று சொல்ல எதுவும் இல்லை. 

இருந்தும், நான் மன நிம்மதியாக இல்லை. மனக்குழப்பம் என்னை வாட்டி வதைக்கிறது.

 சலிப்பும், வெறுப்பும் என்னை பின்தொடர்கிறது. 

ஆனால், எதுவும் இல்லாத என் சேவகன் இருக்கிறானே, 

அவன் என்னை விட 
வாழ்வில்  மனமகிழ்ச்சியுடன் இருக்கக் காணுகிறேன்.

 ஆனந்தத்தில் அவன் 
மிதக்கிறான். பார்க்க பொறாமையாக 
இருக்கிறது' என்று ஆதங்கப்பட்டான். 

உடனே அந்த மந்திரி, அரசே! அந்த 
சேவகனிடம் 99 ஆட்டத்தை  பரீட்சித்துப் 
பாருங்கள்' என்றான். 

அதற்கு அரசன்: அது என்ன 99 ஆட்டம்? 
புதுமையாக இருக்கிறதே!" என்றான். 

அதற்கு மந்திரி சொன்னான், 99 ஆட்டம் 
என்பது 99 பொற்காசுகளை எடுத்து 
ஒரு பையில் போட்டு சேவகனின் வீட்டு 
வாசலில் வைத்துவிடுங்கள். 

"100 பொற்காசுள் உங்களுக்கான 
அன்புப் பரிசு " என்று அதிலே எழுதி 
வைத்துவிட்டு வந்துவிடுங்கள். 

பின்பு என்ன நடக்கிறது என்று 
பொறுத்திருந்து பாருங்கள்!" என்றான். 

அப்படியே அரசனும் செய்துவிட்டு 
அவதானித்தான்.

பொற்காசுள் நிறைந்த 
பையைக்கண்ட சேவகன் ஆனந்தத்தில் 
மிதந்தான். 

பணப்பையை எடுத்து எண்ணிப்பார்த்தான். ஒரு காசு குறைவாக இருந்தது.

 கட்டாயம் ஒரு பொற்காசு வெளியில் எங்காவது விழுந்திருக்க வேண்டும்' என மனதில் நினைத்துக்கொண்டான். 

அதன்படி அவனும், அவனது மனைவி, பிள்ளைகுட்டிகள் என அனைவரும் தவறிய அந்த ஒரு பொன்நாணயத்தை தேட ஆரம்பித்தனர்.

 தேடித்தேடி இரவும் முடிந்து பொழுதும் விடிந்தது, 

தேடல் மாத்திரம் முடிந்தபாடில்லை. 

கோபமடைந்த சேவகன் அவர்கள் மீது 
எரிந்துவிழத் தொடங்கினான். அவன் 
மனமகிழ்ச்சி மனவருத்தமாக மாறியது.

மறுநாள் சேவகன் விரக்தியடைந்தவனாக காணப்பட்டான். 

புன்முறுவல் பூத்திருந்த அவனது முகம் சிடுமூஞ்சாக மாறியிருந்தது. தன்னைத்தானே திட்டிக் கொண்டிருந்தான்.

இதையெல்லாம் ஓரமாக நின்று 
பார்த்துக்கொண்டிருந்த அரசனுக்கு 
99 ஆட்டம் என்றால் என்னவென்று புரிந்து போய்விட்டது.  

🙏அதுதான் நண்பர்களே!....
அந்த வல்ல இறைவன் நமக்கு 
வழங்கிய 99 வகையான 
செளபாக்கியங்களோடு இருப்பதை நாம் மறந்துவிடுகிறோம். 

வாழ்வில் நமக்கு கிடைக்காத 
அந்த ஏதோ ஒரே ஒரு பாக்கியத்திற்காக நிம்மதியை இழந்து மனவருத்தத்தோடு 
வாழ்ந்து வருகிறோம். ஏங்கித் தவிக்கிறோம்.  

*கைவசம் இருக்கும் பல சுகங்களை மறந்து இல்லாத ஒன்றுக்காக மனக்கவலையோடு வாழ்துவருகிறோம்.*

*🙏மனமே அமைதிகொள்🙏🌹*

Saturday, January 14, 2023

என் கண்பட்டுவிடும் என எதையும் பகிர மறுக்கிறாய் நீ
உன் கண்ணில் எனதெல்லாம் படவேண்டும் என பகிர்ந்து விடுகிறேன் நான் 

-சாமி.

Tuesday, January 10, 2023

மலரே உன் மலர்மடியில் மகனாய்
பிறப்பாய் என நாங்கள் மகிழ்ந்திருக்க

தளிரே நீ இத்தரணியில் எங்கள் மகனாய் பிறக்காமல் ஏனடா கடவுளின் மகன் ஆனாய்

மறுபிறப்பாய் மறுவுறுவாய் மீண்டும்
மலர் மடியில் பிறப்பெடுப்பாயா மகனே நீ எங்களை மகிழ்விக்க.


-சாமி.



Friday, January 6, 2023

BUSY..........

இப்பொழுதெல்லாம் வேலையே இல்லையென்றாலும் busy என்றே சொல்லிக்கொள்கிறேன்

ஒவ்வொரு message க்கும் சில மணி நேரம் கழித்தே பதிலிடுகிறேன் 

வரும் அழைப்புகளுக்குக்கூட
அப்பறம் பேசுகிறேன் என்று பதிவிடுகிறேன்

நண்பர்கள் இன்று சந்திக்கலாமா என்று கேட்டால்க்கூட அப்பறம் பார்க்கலாம் என்கிறேன்

"U had breakfast?" என்று வரும் இடுகைக்கு
" I had dinner " என்ற பொழுதில் பதிலிடுகிறேன் 

இவ்வளவை செய்யும் நான்
என் இடுகைக்கு உடனே பதில்
வரவில்லை என காயப்படுகிறேன்

இப்பொழுதெல்லாம் வேலையே இல்லையென்றாலும் busy என்றே சொல்லிக்கொள்கிறேன்.

-சாமி.