Sunday, May 3, 2020

மகிழ்ச்சிகரமாக_வாழ40_வழிகள்

#மகிழ்ச்சிகரமாக_வாழ40_வழிகள்!!!

1. தினமும் 10லிருந்து 30 நிமிடங்கள் நடந்து செல்லுங்கள். அவ்வாறு செல்லும் போது சிரித்த முகமாகச் செல்லுங்கள்.

2. தினமும் ஒரு 10 நிமிடங்களாவது, எந்த சிந்தனைகளும் இல்லாமல் அமைதியாக கண்ணை மூடி அமருங்கள்.

3. தினமும் ஏழு மணி நேரம் உறங்குங்கள்.

4. எப்போதும் இரக்கம், உற்சாகம், ஊக்கம், கருணை ஆகிய குணங்கள் மனத்தில் நிறைந்திருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

5. அதிக நேரம் ஏதாவது விளையாடுங்கள்.

6.  அதிகமான ஆன்மீக மற்றும் விஞ்ஞான  புத்தகங்களை படியுங்கள்.

7. உங்கள் தினசரி அலுவலில் தியானம், யோகம், வழிபாடு போன்றவற்றிற்கு இடம் கொடுங்கள். இவை உங்கள்  வாழ்க்கைக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.

8. உங்கள் ஓய்வு நேரத்தை 70 வயது கடந்த முதியவர்களுடனும், ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளுடனும் செலவழியுங்கள்.

9. அடிக்கடி நிறைய கனவு காணுங்கள், விழித்திருக்கும் போது!

10. மரங்களிலும்,செடி கொடிகளிலும் விளையும் உணவுப்பொருட்களை பச்சையாக அப்படியே  நிறைய உண்ணுங்கள்.

11. தினசரி மூன்று நபர்களையாவது மகிழ்ச்சிப்படுத்துங்கள்.

12. தினமும் நிறைய தண்ணீர் அருந்துங்கள்.

13. உங்களுக்குள் உன்னதமான ஆற்றல் மறைமுகமாக இருப்பதை உணருங்கள்,

14. நீங்கள் எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் வானில் சுதந்திரமாக பறக்கும் பறவையாக உணருங்கள்.

15. பாசிட்டிவான  எண்ணங்களை உங்களின் மனதில் தினமும்  ஐந்துமுறை உருவாக்கும் வழக்கத்தை ஏற்படுத்தி வாழுங்கள்.

16. நீங்கள் வாழ்கின்ற வாழ்க்கையே உலகில் சிறப்பானது என்று உணருங்கள்.

17. உங்களின் காலை உணவை ஓர் அரசன் போல அருந்துங்கள்; மதிய உணவை ஓர் இளவரசன் போல உண்ணுங்கள்; இரவு உணவை ஒரு பிச்சைக்காரன் போல உண்ணுங்கள்.

18. நன்றாக வாய்விட்டு சிரியுங்கள்.

19. எல்லோரிடமும் அன்பு கொண்டு வாழ்ந்தால் இறைவனும் உங்களிடம் அன்பு செலுத்துவான் என்பதை புரிந்து கொள்ளுங்கள்,

20. வாழ்க்கையை டேக் இட் ஈஸி'யாக எடுத்துக் கொள்ளுங்கள்.

21. அனாவசியமான விவாதங்களில் கலந்து கொள்ளாதீர்கள். 

22. உங்களின் கடந்தகால வாழ்க்கையை மிகவும் சிறப்பான முறையில் இறைவன் நடத்தி வந்துள்ளார் என்பதை உணர்ந்து இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள். 

23. மற்றவர்களுடைய வாழ்க்கையுடன் உங்களுடைய வாழ்க்கையை ஒப்பிட்டு உங்களை உருவாக்கிய இறைவனை தயவுசெய்து கேவலப்படுத்தாதீர்கள்.

24. உங்களுடைய மகிழ்ச்சிக்கும், மன அமைதிக்கும் காரணம்,   கடவுள் உங்களிடம் காட்டும் கருணைதான் என்பதை என்றுமே மறவாதீர்கள்.  

25. எவரையும், எதற்காகவும், எந்த சந்தர்ப்பத்திலும் மன்னிக்கத் தயாராக இருங்கள்.

26. ‘உங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள்’ என்று யோசிப்பதை தவிருங்கள். உங்களைப்  பற்றி என்றுமே உயர்வாக எண்ணும் பழக்கத்தை கைவிடாதீர்கள்.

27. இதுவரை உங்களை காப்பாற்றி வந்த கடவுள் இனியும்  உங்களை என்றென்றும் காப்பாற்றுவார்  என்பதை மனதார உணருங்கள்.

28. நல்லதே நடக்கும் என்று நம்புங்கள்.

29. உங்களுடைய இன்பத்தில் பங்கெடுத்துக் கொள்பவர் அனைவரையும் மிக அதிக அளவில் பாராட்டுங்கள்.  அவர்களிடம் நிரந்தரமாக தொடர்பு வைத்திருங்கள்.  

30. உங்களுக்கு  மகிழ்ச்சியளிக்காதவை எதுவாக  இருந்தாலும் அவைகளிடம் இருந்து விலகி ஓடி  விடுங்கள்.

31. உங்கள் தேவைக்கு  அதிகமாகவே அனைத்தையும் உங்களுக்கு தந்து வருகிற இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.

32. வாழ்வின் 'உன்னதம்' என்பது ஏற்கெனவே உங்களுக்கு  முழுவதுமாக நிச்சயம் வந்து விட்டது என்று நம்புங்கள்.

33. நீங்கள் எந்த மனநிலையில் இருந்தாலும் நன்றாகக் குளித்து, சுத்தமான ஆடையை அணிந்து கொள்ளுங்கள்.

34. உங்களுக்கு நன்மை என்று தோன்றும் செயல்களை உடனே செய்யுங்கள். 

35. எத்தனை 'பிஸி'யாக இருந்தாலும் குடும்பத்தினருடன் பேசி மகிழுங்கள்.

36. உங்களுக்கு உள்ளே இருக்கும் 'ஆன்மா' எப்போதும் ஆனந்தமாக இருப்பதை உணர்ந்து, நீங்களும் ஆனந்தமாக இருங்கள்.

37. தினசரி மற்றவருக்குப் பயனளிக்கும் வகையில் ஒரு சிறிய செயலையாவது செய்யுங்கள்.

38. நீங்கள் வரம்பே இல்லாத வலிமை பெற்றவர் என்பதை அறிந்து எந்தச் செயலிலும் துணிந்து  இறங்குங்கள். 

39. நீங்கள் காலையில் கண் விழித்தவுடன் கடவுளுக்கு நன்றி தெரிவியுங்கள்!

40. நீங்கள் தூங்கும் முன்பு மகிழ்ச்சிகரமான தினத்தை தந்த இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.

வாழ்க வலிமையுடன்!!!

Astro Bakthavachalam...

கொரானா காலம்

எனக்கு நானே முடித்திருத்த முயற்சி செய்தேன்,
என் அகந்தை அழிந்தது.
சாமியின் சிந்தனை.

Thursday, April 30, 2020

இன்று மறைந்த யதார்த்த நடிகர் இர்பானின் இறுதி கடிதம் !!!!!!

இன்று மறைந்த யதார்த்த நடிகர் இர்பானின் இறுதி கடிதம் !!!!!!

வாழ்க்கைக்கும் மரணத்துக்கும் இடையே ஒரே ஒரு சாலைதான். எனக்கு 'நியூரோ எண்டோக்ரைன்' புற்றுநோய் ஏற்பட்டிருப்பதை நான் அறிந்து வெகு சில நாட்களே ஆகின்றன.
எனது சொல்வளத்தில் 'நியூரோ எண்டோக்ரைன்' புதிய வார்த்தை. இது அரிய வகை புற்றுநோய் என்றார்கள். அப்படித்தான் போல. ஏனெனில், நான் அது குறித்து தேடியபோது மிக சொற்பமான தகவல்களே கிடைத்தன. அந்த வகை புற்றுநோய் பற்றிய ஆய்வுகளும் குறைவு என்பதால் தரவுகளும் குறைவாகவே இருந்தன. அதனாலேயே அதற்கு என்ன மாதிரியான சிகிச்சை அளிக்கப்படும் என்பதை கணிக்க இயலா நிலை என்னை சூழ்ந்திருந்தது. கிட்டத்தட்ட நான் முயல்வும் பிழைத்தலுமான சோதனை விளையாட்டில் இருந்தேன் என்றே சொல்ல வேண்டும்.
அந்த நோய் என்னுள் வரும் வரை நான் முற்றிலுமாக மாறுபட்ட விளையாட்டு ஒன்றில் இருந்திருக்கிறேன். ஒரு விரைவு ரயில் பயணத்தில் நானிருந்தேன். எனக்கு கனவுகள் இருந்தன. எதிர்கால திட்டங்களும், இலக்குகளும், ஆசைகளும் இருந்தன. நான் அவற்றால் ஆக்கிரமிக்கப்பட
்டிருந்தேன். அப்போது திடீரென என் தோளை யாரோ தட்டினார்கள். திரும்பிப் பார்த்தால் டிக்கெட் பரிசோதகர். அவர் என்னிடம் "நீ இறங்க வேண்டிய இலக்கு வந்துவிட்டது. கீழே இறங்கு" என்றார். நான் குழம்பிப் போனேன். இது நான் இறங்குமிடம் இல்லை என மறுதலித்தேன். ஆனால், அவர் ஊர்ஜிதமாகச் சொன்னார் "இது தான் இலக்கென்று". வாழ்க்கையில் இப்படித்தான் சில நிகழ்வுகள் நடக்கின்றன.
நான் சற்றும் எதிர்பார்த்திராத அந்த திருப்பம் எனக்கொரு விஷயத்தை உணர்த்தியது. சமுத்திரத்தின் நீரோட்டத்தை நம்மால் கணிக்க முடியாது. அத்தகைய நீரோட்டத்தில் மிதக்கும் ஒரு தக்கை தான் நாம். ஆனால், நாம் வெறும் தக்கை என்பதை உணராமலேயே சமுத்திர நீரோட்டத்தை மீறியும் தக்கையை (நம்மை) கரை சேர்க்க முற்படுகிறோம் என்பதை உணர்த்தியது.
எதிர்பாராத திருப்பமாக நோய் எனக்குக் கொடுத்த அதிர்ச்சியில், அச்சத்தில், பதற்றத்தில் மருத்துவமனைக்கு சென்றிருந்தேன். அப்போது அருகிலிருந்த என் மகனிடம் ஏதோ உளறியதாக நினைவு. "நான் என்னிடம் இப்போதைக்கு எதிர்பார்ப்பது இந்த நோயை இதே மனநிலையில் எதிர்கொள்ளக் கூடாது. நான் என் நம்பிக்கையை இழந்துவிடக் கூடாது. அச்சமும், பதற்றமும் என்னை வென்றுவிடக் கூடாது. அது என்னை துயரத்தில் ஆழ்த்திவிடும்" என்று அவனிடம் கூறியிருக்கிறேன்.
ஆம், நோய் தரும் நம்பிக்கையின்மையை வெல்வதே எனது இலக்காக இருந்தது. ஆனால், அந்த வேளையில் தான் என்னை வலி கவ்வியது. அதுவரை நான் அனுபவித்த வலிகள் எல்லாம் அந்த பெரும் வலிக்கு அதன் தன்மைக்கு வீரியத்திற்கான முன்னோட்டம் என்பது போல் இருந்தன என்பதை உணர்ந்தேன். என்னை எதுவுமே சமாதானப்படுத்தவில்லை. எதுவும் ஆறுதலாக இல்லை. எதுவும் ஊக்கமளிப்பதாகவும் இல்லை. என் மனதில், நிலையற்றை தன்மை மட்டுமே நிலையானதாக இருந்தது.
நான் லண்டன் மருத்துவமனையில் பிரவேசிக்கும் போது முற்றிலுமாக சோர்ந்து போயிருந்தேன். சலிப்பு மிகுந்திருந்தது. என் சிறுவயதில் எனக்கு மெக்காவாகத் தோன்றிய லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்துக்கு எதிர்புறத்தில் தான் அந்த மருத்துவமனை இருந்தது. ஆனால், அதையெல்லாம் கருத்தில் கொள்ளும் நிலையில் நானிருக்கவில்லை. என் வலிகளுக்கு மத்தியில் விவியன் ரிச்சர்ட்ஸின் சுவரொட்டி ஒன்றைப் பார்த்தேன். உண்மையில் எனக்கு ஏதாவது நடந்திருக்க வேண்டும். ஆனால், என்னுள் எதுவுமே நடக்கவில்லை. இந்த உலகத்திற்கும் எனக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்ற உணர்வு மட்டுமே இருந்தது.
நான் சிகிச்சை பெற்ற அந்த மருத்துவமனையில் நானிருந்த தளத்திற்கு நேர் மேல் தளத்தில் சுயநினைவை இழந்தோருக்கான (கோமா) வார்டு இருந்தது. ஒரு நாள் எனது அறையின் பால்கனியில் நான் நின்றிருந்தபோது, ஒரு திடீர் சிந்தனை என்னை உலுக்கியது.
வாழ்க்கை எனும் விளையாட்டுக்கும் மரணமென்ற விளையாட்டுக்கும் இடையே ஒரே ஒரு சாலைதான் உள்ளது என்பதை உணர்ந்த தருணம் அது.
எப்படி நான் சாலையின் ஒருபுறமிருக்கும் மருத்துவமனையில் நோயாளியாக நிற்க மறுபுறம் விளையாட்டு மைதானம் இருந்ததோ, எப்படி அந்த இரண்டையுமே யாரும் தனக்கு நிலையானதாக உரிமை கொண்டாட முடியாதோ அப்படித்தான் மனிதன் வாழ்க்கைக்கும் மரணத்திற்கும் இடையே நின்றுகொண்டிருக்கிறான் என்பதைப் புரிந்து கொண்டேன்.
பேரண்டவெளியின் மதிநுட்பத்தை, மிகப் பிரம்மாண்டமான சக்தியை அதன் தாக்கத்தை உணர்ந்தேன். நான் சிகிச்சை பெற்ற மருத்துவமனை அமைந்திருந்த இடம் எனக்கு அதை இடித்துரைத்தது. ஆம், நிலையின்மை மட்டும்தான் நிலையானது.
அந்த மெய் உணர் தருணம் என்னை யதார்த்த்தின் முன் சரணையடச் செய்தது. நான் பெற்றுக் கொண்டிருக்கும் சிகிச்சை 4 மாதங்களுக்குப் பின் அல்லது 8 மாதங்களுக்குப் பின் இல்லை இரண்டு வருடங்களுக்குப் பின்னர் என்னை எங்கு கொண்டு சேர்க்கும், விளைவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புகளை எல்லாம் கடந்து நடப்பவற்றிற்கு என்னை உட்படுத்திக் கொள்ளத் தூண்டியது. அப்போது கவலைகள் பின்னடைவைக் கண்டன. அப்படியே சில நாட்களில் மங்கிப் போயின. அடுத்த சில நாட்களில் என் எண்ண வெளியிலிருந்தே கவலைகள் விலகியிருந்தன.
முதன் முறையாக நான் சுதந்திரத்தை உணர்ந்தேன். முதன்முறையாக சாதனை படைத்ததாக நினைத்தேன். அப்படி ஒரு வெற்றியை முதன்முறையாக சுவைத்தது போல் இருந்தது. அது வெற்றியின் மாயாஜாலம் என்பேன். அண்டவெளியின் மதிநுட்பத்தின் மீதான எனது நம்பிக்கை தீர்க்கமானது. அது என் உடலின் ஒவ்வொரு செல்லிலும் புகுந்தது போல் உணர்ந்தேன்.
ஆனால், அது அங்கேயே நிலைத்திருக்கும
ா என்பதை காலம் தான் சொல்லும். இப்போதைக்கு இந்த உணர்வு நன்றாக உள்ளது.
நோயுடனான எனது போராட்டப் பயணத்தில் மக்கள் என்னை வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். உலகம் முழுவதும் பலர் எனக்காகப் பிரார்த்தனை செய்கிறார்கள். நான் அறிந்த நபர்கள் மட்டுமல்லாது, எனக்குப் பரிச்சியமே இல்லாதவர்களும் கூட என் நலன் விரும்புகின்றனர். அவர்கள் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு நேர மண்டலங்களில் இருந்து எனக்காகப் பிரார்த்தனை செய்கின்றனர். அவர்கள் அனைவரின் பிரார்த்தனைகள் ஒன்றிணைகிறது. அது ஒரே சக்தியாக, ஒரே உயிரோட்டமாக உருமாறி எனக்குள் புகுந்தது. எனது முதுகெலும்பின் முடிவில் அதை நான் உணர்கிறேன். எனது புத்தியில் வளர்கிறது.
சில நேரம் மொட்டாக, சில நேரம் இலையாக, அப்புறம் தளிராக கிளையாக துளிர்க்கிறது. நான் அதை ரசிக்கிறேன். ஒவ்வொரு பூவும், ஒவ்வொரு கிளையும் கூட்டுப் பிரார்த்தனையால் விளைந்தவை. அவை என்னை ஆச்சர்யப்பட வைக்கிறது. எனக்குள் மகிழ்ச்சியையும், ஆர்வத்தையும் ஏற்படுத்துகிறது. அதேவேளையில், ஒரு தக்கை சமுத்திரப் பேரலையின் நீரோட்டத்தை தனக்கானதாக தகவமைக்க வேண்டிய அவசியமில்லை என்ற மெய்யை உணரச் செய்கிறது. தக்கை அசைந்தாடுவது இயற்கை. இயற்கை தனது தொட்டிலில் உங்களை மென்மையாகத் தாலாட்டிக் கொண்டிருக்கிறது என்று வாழ்க்கையை ஏற்கவும்.
# இர்ஃபானின் கடைசிக் கடிதம்

Saturday, April 25, 2020

writer S.Ramakrishnan வலைப்பக்கத்திலிருந்து, குறுங்கதை, இது வேறு ஜன்னல்

எஸ்ராவின் வலைப்பக்கத்திலிருந்து
ஏப்ரல் 23 உலகப் புத்தக தினம்

குறுங்கதை 54 
இது வேறு ஜன்னல்

பூங்காவில் அந்த மனிதர் பேசிக் கொண்டிருப்பதை ஒரு இளைஞன் கேட்டுக் கொண்டிருந்தான்.

“ என் வீட்டின் ஜன்னல்களை எண்ணமுடியாது.. ஒவ்வொரு ஜன்னலைத் திறக்கும் போது நான் காணும் காட்சிகள் வேறு வேறானவை. மனிதர்கள் நிறைய ஜன்னல்கள் உள்ள வீடுகளில் வசிக்க வேண்டும். எந்த ஜன்னல் வழியாக உலகை நீங்கள் அறிந்து கொள்வீர்கள் என்று தெரியாது. வெட்டவெளி கற்றுத்தராததை ஜன்னல்கள் கற்றுத் தந்துவிடக் கூடியது என்றார் அந்த மனிதர்

“உங்கள் வீடு எங்கேயிருக்கிறது “எனக்கேட்டான் அந்த இளைஞன்

“மாதா கோவில் பின்புறமுள்ள தெரு. கடைசி வீடு. பெரிய மாமரமிருக்கும்“ என்றார்.

“நான் உங்கள் வீட்டிற்கு வரலாமா“ எனக்கேட்டான் இளைஞன்

“கண்டிப்பாக வரலாம்“ எனப் புன்னகைத்தார் அந்த மனிதர்

மறுநாள் மாலை அவரது வீடு தேடிச்சென்றான். வெளியே. மாமரம் தென்பட்டது. அவன் நினைத்தது போலப் பெரிய வீடில்லை. சராசரியான சிறியதொரு வீடு. அதில் ஒரு மாடி. வெளியே இருந்து பார்த்தால் இரண்டே ஜன்னல்கள்.

ஏன் இந்த மனிதர் இப்படிப் பொய் சொன்னார் எனக்குழம்பியபடியே காலிங்பெல்லை அடித்தான். அவரே கதவைத் திறந்தார்

“ஏன் இப்படிப் பொய் சொல்லுகிறீர்கள் “எனச் சற்றே கோபமாகக் கேட்டான் இளைஞன்

“என்ன பொய். எதற்கு இவ்வளவு கோபம். உள்ளே வா தம்பி “என்றார் அந்த மனிதர்

“எண்ண முடியாத ஜன்னல்கள் இருப்பதாகச் சொன்னீர்களே“ எனக்கேட்டான் இளைஞன்

“அதுவா.. ஜன்னல் என்றதும் மரஜன்னல் நினைவிற்கு வந்தால் அதற்கு நானா பொறுப்பு“ எனக்கேட்டுச் சிரித்தார்

“மரமோ கண்ணாடியோ இரும்போ எதுவாயினும் ஜன்னல்கள் வெளியே தெரியும் தானே“ என்றான் இளைஞன்

“வா மாடிக்குப் போகலாம்“ என அழைத்துக் கொண்டு போனார். அங்கே சுவர் முழுவதும் மரரேக்குகள் பொருத்தப்பட்டிருந்தன. அதில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள். எழுதும் மேஜையில், கட்டிலில், தரையில் என வரிசை வரிசையாகப் புத்தகங்கள் அடுக்கப்பட்டிருந்தன.

“இது தான் நான் சொன்ன எண்ணிக்கையற்ற ஜன்னல்கள். புத்தகம் தான் எனக்கான ஜன்னல். அதைத் திறந்தவுடன் என் வீட்டின் எதிரில் உள்ள காட்சிகள் தெரியாது. ஆனால் தொலைதூர உலகம் தெரியும். அதன் மனிதர்கள் தெரிவார்கள். மாமன்னர்களைக் கூட இருந்த இடத்திலே காண முடியும். ஓராயிரம் குதிரைகள் ஒரு புத்தகத்திற்குள் ஓட முடியும்.

உலகிற்கு இவை வெறும் அச்சடிக்கப்பட்ட காகிதங்கள். எனக்கோ என் அறிவிற்கான, அனுபவத்திற்கான ஜன்னல்கள்..

மரமும் கல்லும் இரும்பும் கொண்ட வீட்டிற்கே பத்து பன்னிரண்டு ஜன்னல்கள் தேவை என்றால் ,பெருவாழ்க்கை வாழ முற்படும் மனிதனுக்கு எத்தனை ஜன்னல்கள் தேவை.. நீயே யோசித்துப்பார். “

அவன் வியப்போடு ஒரு புத்தகத்தை எடுத்துப் புரட்டினான். ஸ்பினோசாவின் எதிக்ஸ் என்ற புத்தகமது. அதன் முகப்பில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் எனக் கையெழுத்துப் போட்டிருந்தது. அவன் வியப்போடு கேட்டான்

“ஐன்ஸ்டீன் படித்த புத்தகமா. “

“பார்த்தாயா. ஒரு புத்தகம் எழுதப்பட்டவனால் மட்டுமில்லை வாசித்தவனாலும் புகழ் பெறுகிறது. இந்தப் புத்தகம் என் பிறந்த நாளுக்கு எனது அமெரிக்க நண்பர் கொடுத்த பரிசு

புத்தகங்களுக்குள் காடும் கடலும், மலையும் அருவிகளும், பாலையும் பள்ளத்தாக்கும் இருக்கின்றன. உலகில் நீ காணும் சகல உயிரினங்களும், சந்திர சூரியர்களும் கூட புத்தகங்களுக்குள்ளே இருக்கிறார்கள். புத்தகங்களுக்குள்ளும் நல்ல மனிதர்கள், கெட்ட மனிதர்கள் இருக்கிறார்கள். புத்தகங்கள் சூழ வாழுகிறவனின் மகிழ்ச்சியை உன்னால் புரிந்து கொள்ள முடியாது

பாடப்புத்தகங்களுககு வெளியே எதையும் இதுவரை படிக்கவில்லை இன்றே வாசிக்கத் துவங்கு. உன் ஜன்னல் திறக்கும் போது அதன் புதிய வெளிச்சத்தையும்,காற்றையும்,முன்னறியாத காட்சிகளையும் நீ காணுவாய், உணருவாய். உன்னை விரிவடையச் செய்யும் போது உலகமும் சேர்ந்து விரிவடையும்“

அந்தப் பையன் ஆசையோடு கேட்டான்

“இங்கேயே அமர்ந்து இந்தப் புத்தகத்தைப் படிக்கலாமா“

“சந்தோஷமாக “என்றார் அந்த மனிதர்

அந்த இளைஞன் ஐன்ஸ்டீன் படித்த ஸ்பினோசா புத்தகத்தைப் புரட்டினான்.

நூற்றாண்டு காலம் ஒரு நொடியில் மறைந்து புத்தம் புதியது போலப் புத்தகம் அவனை வரவேற்றது.

சொற்களின் வழியே அவன் பறக்கத் துவங்கியிருந்தான்.

வண்ணத்துப்பூச்சி

நான் திடீரென்று அழகானேன்
என் மீது ஒரு வண்ணத்துப்பூச்சி.
சாமியின் சிந்தனை.

Friday, April 24, 2020

மனித மனதின் ஏக்கம்

உன்னை சார்ந்தோரை ஒருவரையேனும்,
 ஒவ்வொரு நாளும், 
ஏதேனும் அவர்கள் செய்யும் சிறு/குறு  நற்செயல்களுக்காக உற்சாகப்படுத்து, 
அங்கீகாரம் செய், அளவோடு புகழ்ந்து பேசு, ஒவ்வொரு மனித மனமும் இதற்காக ஏங்குகிறது. அது முற்றும் துறந்த முனிவராக இருந்தால்க்கூட.
சாமியின் சிந்தனை.

Thursday, April 23, 2020

புத்தகம்

என்னை உயிர்ப்போடு
வைத்திருக்கும் உயிர்.
சாமியின் சிந்தனை.

உலகப் புத்தகத் திருநாள் வாழ்த்துக்கள்.