Tuesday, March 24, 2020

கொரானா தனிமைப்படுத்தல்

அம்மா செய்து தரும் சுவைமிகு நொறுக்கு தீனிகள், 
அப்பா சொல்லும் வாழ்க்கை அனுபவ கதைகள்,
சகோதர/சகோதரிகளிடம் சிறு சிறு சண்டை விளையாட்டுகள்,
அறை சுவர்கள் மட்டும் பார்க்கும் என் சிறு சிறு நடனம்,
குளியலறை சுவர் மட்டுமே கேட்கும் என் பாட்டு,
அடிக்கடி கண்ணாடி மட்டுமே தரிசிக்கும் என் புன்னகை,
அவ்வப்போது சன்னல் வழியே என் முகம் எட்டி பார்க்கும் உலகு,
எப்பொழுதாவது சிறு குறு படிப்பு,
மதிய வகுப்பறையில் வருவது போல் பெருந்தூக்கம்,
இவையெல்லாம் எனக்கு  கொரானா தனிமைப்படுத்தலிலும், என் கைப்பேசியை தள்ளிவைத்ததாலும் கிடைத்தது.
வீடு உண்மையிலேயே உலகத்தின் சொர்க்கம்.
சாமியின் சிந்தனை.

Sunday, March 22, 2020

அடங்கி கிடக்கின்றது உலகம்

*அடங்கி கிடக்கின்றது உலகம் என்கின்றார்கள்*

சூரியன் அதன்போக்கில் உதிக்கின்றது, மழை அதன் போக்கில் பெய்கின்றது, வழக்கமான உற்சாகத்துடன் அடிக்கின்றது அலை....

மான்கள் துள்ளுகின்றன, அருவிகள் வீழ்கின்றன, யானைகள் உலாவுகின்றன,முயல்கள் விளையாடுகின்றது,மீன்கள் வழக்கம் போல் நீந்துகின்றன‌...

தவளை கூட துள்ளி ஆடுகின்றது, பல்லிக்கும் பயமில்லை, எலிகளும் அணில்களும் அதன் போக்கில் ஓடுகின்றன, காக்கைகளும் புறாக்களும் மைனாக்களும் சிட்டு குருவிகளும் ஏன் குளவிகளும் கூட அஞ்சவில்லை...

மானிட இனம் அஞ்சிகிடக்கின்றது , சக மனிதனையும் அதனால் நேசிக்க தயங்குகின்றது, கூட்டை மூடி பூட்டு போட்டு அடங்கி கிடக்கின்றது...

முடங்கியது உலகமல்ல, மானிடன் கண்டு வைத்த கற்பனை உலகம். அதில் அவன் மட்டும் வாழ்ந்தான் அவன் மட்டும் ஆடினான், அவனுக்கொரு உலகம் சமைத்து அதுதான் உலகமென்றான்...

மாபெரும் பிரபஞ்சத்தில் தானொரு தூசி என்பது அவனுக்கு தெரியவில்லை, உழைப்பென்றான் சம்பாத்தியமென்றான் விஞ்ஞானமென்றான் என்னன்னெவோ உலக நியதி என்றான்...

உலகம் பிறந்ததும், உயிர்கள் பிறந்ததும் எனக்காக , நதியும் கடலும் எல்லாமும் எனக்காக என்றான்...

ஆடினான், ஆடினான் அவனால் முடிந்தமட்டும் ஆடினான்...

ஓடினான், பறந்தான் உயர்ந்தான் முடிந்த மட்டும் சுற்றினான், கடவுளுக்கும் எனக்கும் ஒரே ஒரு வித்தியாசம் அவனால் உயிரை படைக்க முடியும் என்னால் முடியாது அதனால் என்ன விரைவில் கடவுளை வெல்வேன் என மார்தட்டினான்...

ஒரு கிருமி கண்ணுக்கு தெரியா ஒரே ஒரு கிருமி சொல்லி கொடுத்தது பாடம்...

முடங்கி கிடக்கின்றான் மனிதன் , கண்ணில் தெரிகின்றது பயம், நெஞ்சில் தெரிகின்றது கலக்கம்...

பல்லிக்கும் பாம்புக்கும் நத்தைக்கும் ஆந்தைக்கும் கூட உள்ள பாதுகாப்பு தனக்கில்லை, இவ்வளவுதான் நான் என விம்முகின்றான்....

மண்புழுவுக்கும் கூட நான் சமமானவன் பலமானவன் இல்லையா என்பதில் அழுகின்றான்....

முளைத்து வரும் விதை கூட அஞ்சவில்லை, நிலைத்துவிட்ட மரமும் அஞ்சவில்லை எனில் மரத்தை விட கீழானவனா நான் என அவனின் கண்ணீர் கூடுகின்றது...

மாமரத்து கிளி அவனை கேலி பேசுகின்றது, கண்ணீரை துடைக்கின்றான்...

காட்டுக்குள் விலங்குகளும் பறவைகளும் மரங்களும் நீர் வீழ்ச்சிகள் கூட அவர்கள் பாஷையில் பேசுகின்றன‌.

ஆட்டுமந்தை கூட்டங்களும் , கோழிகளும் கூட பரிகாசம் செய்வதாகவே அவனுக்கு தோன்றுகின்றது.

கொரோனாவுக்காக மனிதன் கைகழுவி கொண்டிருப்பதை பார்த்து கொண்டு இடுப்பினை சொறிகின்றது குரங்கு, மருத்துவமனையில் அவன் அடைபட்டு கிடப்பதை பார்த்துகொண்டே இருக்கின்றது பண்ணையின் கோழி...

நிறுத்திவைக்கபட்ட விமானங்களை பார்த்தபடி எக்காள சிரிப்பு சிரித்து பறக்கின்றது பருந்து, நிறுத்தி வைக்கப்பட்ட கப்பலை கண்டு சிரிக்கின்றது மீன் இனம்..‌.

தெய்வங்கள் கூட தனக்காக கதவடைத்துவிட்ட நிலையில் காகங்களும் புறாக்களும் ஆலய கோபுரத்தில் அமர்ந்திருப்பதை சிரிப்புடன் பார்க்கின்றான் மனிதன்..‌.

கோவில் யானை உள்ளிருக்க, பசுமாடு உள்ளிருக்க மனிதனை வெளிதள்ளி பூட்டுகின்றது ஆலய கதவு...

அவன் வீட்டில் முடங்கி கிடக்க, வாசலில் வந்து நலம் விசாரிக்கின்றது காகம்., கொஞ்சி கேட்கின்றது சிட்டு, கடல் கரை வந்து சிரிக்கின்றது மீன்...

மரத்தில் கனியினை கடித்தபடி இதை பார்த்து சிரிக்கின்றது அணில், வானில் உயர பறந்து கொரோனா நோயாளியினை உண்டாலும் எனக்கு பயமில்லை என்கின்றது கழுகு...

தெருவோர நாய் பயமின்றி நடக்க, வீட்டில் ஏழு பூட்டோடு முடங்கி கிடக்கின்றான் மனிதன். தெரு நாயினை விட அவன் ஒன்றும் இப்பொழுது உயர்ந்தவன் அல்ல..

அவமானத்திலும் வேதனையிலும் கர்வம் உடைத்து கவிழ்ந்து கிடந்து கண்ணீர்விட்டு ஞானம் பெறுகின்றது மானிட இனம்.

Forwarded...edited.

PREVENT CORONA, SAVE WORLD

Our Hearts getting closer if we maintain 'SOCIAL DISTANCE'. Samy's Spark

Friday, March 13, 2020

அக்கறை

'அக்கறை' யில் 'கறை'  கெட்டது. சாமியின் சிந்தனை.

Tuesday, March 10, 2020

முற்பகுதி வாழ்க்கையை வைத்துக் கொண்டு பிற்பகுதி வாழ்க்கையை முடிவு செய்து விட முடியாது

From s.raa's website
குறுங்கதை 28 மொசார்ட்டின் வயலின்

பனிப்பிரதேசமொன்றில் அந்த மேபிள் மரம் ஒற்றையாக நின்று கொண்டிருந்தது.

“எனக்கென யாருமில்லை. நான் யாருக்கும் பிரயோசனமாகவும் இல்லை. வாழ்வதே வீண்“ என்று அந்த மரம் சொல்லிக் கொண்டிருந்தது

காற்று அம் மரத்தைக் கடக்கும்போது சொன்னது

“அப்படி நினைக்காதே. உனக்கொரு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது“

இரவில் வான் நிறைந்த நட்சத்திரங்களைக் காணும் போது மேபிள் மரம் சொன்னது.

“இத்தனை அழகை நான் கண்ட போதும் அதைப் பகிர்ந்து கொள்ள ஒருவருமில்லை.“

அப்போதும் காற்றுச் சொன்னது.

“அப்படி நினைக்காதே. உன் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தமிருக்கிறது.“

பின்னொரு நாள் ஒரு மரம்வெட்டி பனிப்பிரதேசத்திற்கு வந்தான். அந்த மேபிள் மரத்தை வெட்டிச் சென்றான்.

“அவ்வளவு தான் நம்முடைய வாழ்க்கை , கணப்பு அடுப்பின் விறகாகப்போகிறோம்“ என வருந்தியது அம்மரம்

ஆனால் அந்த மரம் ஒரு இசைக்கருவி செய்பவன் வீட்டிற்குச் சென்றது. அவன் அதை வயலின் செய்வதற்குப் பயன்படுத்திக் கொண்டான்

“நான் ஒரு இசைக்கருவியானது மகிழ்ச்சியே. எவருக்கோ பயன்படப்போகிறேன்“ என்றது அம்மரம்

அவன் வயலினை லியோபோல்ட் என்ற இசை ஆசிரியருக்கு விற்பனை செய்தான். லியோபோல்ட் அந்த வயலினை தன் வீட்டிற்குக் கொண்டு சென்றார். அவரது ஐந்து வயது மகன் அந்த வயலினைக் கையில் எடுத்து வாசிக்க ஆரம்பித்தான்.  இன்னிசை பெருகியது

அந்தப் பையனின் பெயர் வுல்ப்காங் அமேடியஸ் மொசார்ட்.

இப்போது அது  இசைமேதை  மொசார்ட்டின் வயலின்

மொசார்ட் அந்த வயலினைக் கொண்டு எண்ணிக்கையற்ற இசைக்கோர்வைகளை உருவாக்கினான். அற்புதமான சங்கீதத்தை உலகிற்கு வழங்கினான்.

இதுநாள் வரை அனுபவித்து வந்த மரத்தின் தனிமையை, பனிக்காற்றின் ஈரத்தை, வானெங்கும் பூத்திருந்த நட்சத்திரங்களை, தூரத்து நதியின் சலசலப்பை, கடந்து சென்ற பறவைகளின் சிறகசைப்பை என மரத்தின் எல்லா நினைவுகளையும் அவன் இசையாக்கினான்.

மொசார்ட்டோடு அந்த வயலின் மாமன்னரின் அரண்மனைக்கும் இசை அரங்கிற்குமாகப் பயணித்துக் கொண்டேயிருந்தது.

மேபிள் மரம் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

அது பெருமிதமாகச் சொன்னது

“முற்பகுதி வாழ்க்கையை வைத்துக் கொண்டு பிற்பகுதி வாழ்க்கையை முடிவு செய்து விட முடியாது. காற்றுச் சொன்னது சரியே. என் வாழ்க்கையின் அர்த்தம் இதுவே“

Sunday, March 8, 2020

மகளிர் தின வாழ்த்து

சுதந்திரம், சுயமரியாதை, அன்பு, அங்கீகாரம், அரவணைப்பு மற்றும்  உணர்வுகளை மதிப்பது இவைகளை மகளிருக்கு அளிப்பது தான் உண்மையான  மகளிர் தின வாழ்த்தாக அமையும். சாமியின் சிந்தனை

நம்பிக்கை

காலம் தன் ஜாலத்தால் வெற்றி பெறும் என்பது தெரிந்ததும், நம் உறவுகளிடம், நண்பர்களிடம், தெரிந்தவர்களிடம், ஏன் வாழ்க்கையிடம், 'நீண்ட  நாள் தொடர்பில் இருப்போம் ' என்று கூறுவது தான் மனிதனின் நம்பிக்கை. சாமியின் சிந்தனை.