Monday, February 17, 2020

ஓர் ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும்?

*ஓர் ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும்? - 10 அம்சங்களில் எதிர்பார்ப்புகளை அடுக்கும் லயோலா கல்லூரி மாணவர் குரல் -நன்றி :  "இந்து" நாளிதழ் பதிப்பு!!*

*உலகில் இரண்டு புனிதமான இடங்கள் உள்ளன. ஒன்று தாயின் கருவறை.*
 இன்னொன்று ஆசிரியரின் வகுப்பறை. தாயின் கருவறையில் ஒருவன் உயிரைப்பெறுகிறான். ஆசிரியரின் வகுப்பறையில் அவன் அறிவினைப் பெறுகிறான்.

*1. கதிரவனைப் போல்...*

காலைக் கதிரவனைப் போல் காலம் தவறாமல் பள்ளிக்குச் செல்லுங்கள். காலைப் பனித்துளியைப் போல் புத்துணர்வுடன் செல்லுங்கள். மழையைச் சுமந்து வரும் மேகத்தைப் போல் பாடத்தை நன்கு தயார் செய்துகொண்டு வகுப்புக்குள் நுழையுங்கள். அழகிய சோலையில் நுழைவது போல் வகுப்பினுள் நுழையும்போது மகிழ்ச்சியுடன் நுழையுங்கள்.

*2. புன்னகை அவசியம், முகத்தைக் கடுகடுப்பாக வைத்துக்கொள்ள வேண்டாம்...!*

உங்கள் கோபத்தினால் அழகிய மலர் வாடிவிடுவது போன்று மாணவர்களின் முகமும் வாடிவிடும். வகுப்பில் பாடத்தைத் தொடங்கும் முன் மாணவர்களைப் பார்த்து சிறு புன்னகை செய்யுங்கள். உங்கள் முகத்தில் தவழும் புன்னகையால், மாணவர்களிடம் புன்முறுவல் பூக்கச் செய்யுங்கள்.

*3. நடிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்...*

பாடத்தில் உள்ள கவிதையை கவிஞனைப் போல் வாசியுங்கள். கட்டபொம்மனைப் பற்றிப் பாடம் நடத்தப் போகின்றீர்கள் என்றால் கட்டபொம்மனைப் போல் மாணவர்களிடத்தில் பேசிக் காட்டுங்கள். நாடக வடிவில் உள்ள பாடங்களை நடத்தினால் நாடகக் கலைஞனாகி விடுங்கள். இதுபோன்ற செயல்கள், மாணவர்கள் பாடத்தை எளிதாகப் புரிந்துகொள்வதற்கு உதவும்.

*4. பாடம் வேண்டாம்...*

 ஆசிரியர் என்பவர் வெறும் பாடத்தை மட்டும் நடத்திக்கொண்டே இருந்தால் போதாது. ஆகவே வாரத்தில் ஒரு பாடவேளையில் பாடத்தை நடத்தாமல் மாணவர்களிடத்தில் உள்ள தனித்திறமைகளை வெளிக்கொண்டு வர முயலலாம். உதாரணத்துக்குப் படம் வரைவது, கட்டுரை எழுதுவது, நாடகம் நடிப்பது, மேடைப் பேச்ச, விளையாடுதல், நடனம் ஆடுவது, இசைக்கருவிகளை இசைப்பது, பாடுவது போன்றவை மூலம் பல திறமையான மாணவர்களை இந்த உலகிற்கு நீங்கள் வழங்கலாம்.

*5. கேள்வி கேளுங்கள்...!*

 பாடம் நடத்தும்போது மாணவர்களிடம் அதிகமாகக் கேள்வி கேளுங்கள். மாணவர்கள் கேள்வி கேட்கவும் வாய்ப்புத் தாருங்கள். மாணவர்களின் சிந்திக்கும் ஆற்றலை வளர்க்கும் நோக்கத்துடன் கேள்விகளைக் கேளுங்கள். வகுப்பில் கூட்டமாகச் சேர்ந்து ஒரே குரலில் பதில் சொல்லும் பழக்கத்தைத் தவிர்க்கப் பாருங்கள்.

*6 . கடைசி அய்ந்து நிமிடங்கள்...!* 

புதிதாக நடத்தும் பாடத்துக்கும் மற்றும் முந்தைய பாடத்துக்கும் உள்ள தொடர்பை விளக்கிக் கூற, பாடவேளையின் கடைசி அய்ந்து நிமிடங்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் பாடம் நடத்தினால், அன்று வகுப்புக்கு வந்த மாணவர்கள் உங்கள் பாடத்தைக் கேட்டு இன்புற வேண்டும். அன்று வகுப்புக்கு வருகை தராத மாணவர்கள் அடுத்த நாள் உங்கள் பேச்சைக் கேட்க ஓடி வர வேண்டும் என்பதை நிலைநாட்டுங்கள்.

*7. நூலகத்தைப் பயன்படுத்துங்கள்...*

 மாணவர்கள் நூலகத்திலிருந்து சில நூல்களை எடுத்துப் படித்து, பயன்பெறக் கூடிய வகையில் நல்ல நூல்களின் பெயர்கள், நூலாசிரியர்களின் பெயர்கள், நூல்களின் சிறப்பு ஆகியன பற்றிச் சொல்லுங்கள். உண்ணுதல், உறங்குதல் போலவே நல்ல நூல்களை வாசிப்பதும் ஒருவரின் எதிர்கால வாழ்வை மகிழ்ச்சியாகக் கழிக்க அவசியம் என்பதை மாணவர்களுக்குக் கற்பியுங்கள்.

*8. பாடப்புத்தகத்தை தாண்டி...!*

வாழ்க்கை மிகப் பெரியது. இந்தப் பெரிய உலகத்தை சிறிய புத்தகங்களுக்குள் அடக்கிவிடாமல் மாணவர்களுக்கு விசாலமான பார்வையைப் பார்க்கக் கற்றுக் கொடுங்கள். பாடநூல்கள் தகவல்களைக் கற்க உதவுகின்றன. இவை ஞானத்தை வளர்த்திட உதவுவதில்லை. எனவே பாடநூலுக்குள் மட்டும் மாணவர்களை கட்டிப் போட்டுவிடாதீர்கள். பாடநூலுக்கும் அப்பாலும் கடல் போல் அறிவு விரிந்து பரந்து கிடக்கிறது என்ற உண்மையை மாணவர்களுக்கு உணர்த்திடுங்கள்.

*9. உங்கள் பிள்ளை அவர்கள்...!*

 மாணவர்களிடம் ஒரு தாயைப் போல, ஒரு தந்தையைப் போல் நடந்துகொள்ளுங்கள். மாணவர்களின் நலனில் அக்கறை காட்டுங்கள். மாணவர்களிடம் அன்னையின் அன்பையும், தந்தையின் கண்டிப்பையும், நண்பனின் நட்பையும் கொடுங்கள். மாணவர்களின் முழுப் பெயரைச் சொல்லி அழையுங்கள். உங்கள் வகுப்பில் பயிலும் ஒவ்வொரு மாணவரின் முகத்தையும் பெயரையும் நன்றாக நினைவில் வைத்திருங்கள்.

*10. நம்பிக்கையைக் கொடுங்கள்...!*

 உன்னால் முடியும், நிச்சயம் வெற்றி பெறுவாய், நம்பிக்கையுடன் இரு, வாழ்க்கையில் மிகப்பெரிய சாதனையாளராக வருவாய், நல்ல நிலையை அடைவாய் போன்ற நேர்மறையான வார்த்தைகளுக்கு மாணவர் மத்தியில் மிகப்பெரிய சக்தி உண்டு. இந்த வார்த்தைகளை அடிக்கடி மாணவர்களிடத்தில் கூறிக்கொண்டே இருங்கள். மறந்து போய்க்கூட முடியாது, நடக்காது போன்ற எதிர்மறையான சொற்களை மாணவர்களிடத்தில் பயன்படுத்தாதீர்கள். இந்த வார்த்தைகள் மாணவர்களின் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தும்.

*நல்லாசிரியராய்.. அன்பாசிரியராய்த் திகழ வாழ்த்துகள்!...*
🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

Saturday, February 15, 2020

KITE STORY

https://youtu.be/V3btMm3pegM

வாழ்க்கை பாடம்

வாழ்வில் எதை  செய்யக்கூடாது என்பதை பிறரது வாழ்விலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும், வாழ்வில் எதை செய்யவேண்டும் என்பதை நம் வாழ்விலிருந்து பிறருக்கு கற்பிக்க வேண்டும். சாமியின் சிந்தனை.

Tuesday, February 11, 2020

வெம்பல்கள்

குப்பை தொட்டியில் வீசிய பின்புதான், தாங்கள் பழங்கள் அல்ல என்று புரிகிறது சில வெம்பல்களுக்கு. சாமியின் சிந்தனை.

அறியாமை

 உயரப்பறக்க கற்றுக் கொடுப்பதற்கு தன்னை  தூக்கி செல்வதாய் நினைத்து மகிழ்ந்ததாம், கழுகின் காலில் அகப்பட்ட கோழிக்குஞ்சு. சாமியின் சிந்தனை.

Monday, February 10, 2020

புத்துணர்சியூட்டும் சிந்தனை.*

*1.பத்து நிமிடங்கள் முன்னதாக:*

காலை *6 மணிக்கு எழுபவரா நீங்கள்?*
*5.50க்கு எழுந்து பழகுங்கள்.*

கூடுதலாகக் கிடைக்கிற பத்து நிமிடத்தில், அமைதியான காலை நேரத்தில் உங்களின் அன்றைய வேலைக்கான ஆற்றலின் கதவுகள் அகலத் திறப்பதை உணர்வீர்கள்.

*2.பத்து நிமிடங்கள் மௌனமாக:*

நீங்கள் தியானப் பயிற்சி மேற்கொள்ளாதவராக இருந்தால், விரைவில் சரியான இடத்தில் *தியானம் பழகுங்கள்.* அதுவரை ஒரு நாளின் மத்தியில், பத்து நிமிடங்களாவது *மௌனத்தில் இருங்கள்*.

*3.முப்பது நிமிடங்கள்:*

ஒரு நாளின் முப்பது நிமிடங்களை உங்கள் ஆரோக்கியத்திற்காகப் பயன்படுத்துங்கள். *உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, யோகா* என்று உங்கள் வழக்கம் எதுவாக இருந்தாலும் சரி. ஆரோக்கியத்துக்காக *முப்பது நிமிடங்கள்* புத்துணர்ச்சிக்கான சிம்மாசனம் என்பதை உணருங்கள்.

*4.உணவில் ஒழுங்கு:*

வேலைச் சுமையைக் காரணம்காட்டி உணவு நேரத்தை அடிக்கடி தள்ளிப் போடுவது, உங்கள் உடலியக்கத்துக்குள் பிரச்சினையை ஏற்படுத்தும். உணவுப் பழக்கத்திலும் இதமான முறைகளைக் கையாளுங்கள், வயதுக்கேற்ப சாப்பிடுங்கள். *முறைப்படி சாப்பிடுவதற்க்கு பழகுங்கள்.*

*5.மறுநாளின் டைரியை முதல் நாளே எழுதுங்கள்:*

```Day Task.``` உங்களின் வாழ்க்கை பரபரப்பின்றி அவசரமின்றி இருக்க இந்த பழக்கம் உதவும். *நினைத்த அனைத்தும் நடப்பதை* விரைவில் உணர்வீர்கள்.

*6.அடைசல்கள் அகற்றுங்கள்:*

அடைசல்கள், குப்பைகள், குவிந்துகிடக்கும் கோப்புகள் ஆகியவற்றில் பிரபஞ்ச சக்தி தேங்கிவிடுகிறது. அத்தகைய இடங்களில் செயலாற்றல் தூங்கிவிடுகிறது. போகி பண்டிகைவரை காத்திருக்காது *அவ்வப்போது அடைசல்களை நீக்குங்கள்.*

*7.மனிதர்களை நெருங்குங்கள்:*

இந்த உலகில் காரணத்துடனோ காரணம் இன்றியோ மனிதர்களை வெறுக்கும்போது, அந்த வெறுப்பு நமக்குள்ளே வேண்டாத சுரப்பிகளைத் தூண்டி பதட்டம் சுரக்க வைக்கிறது. மனிதர்களை நிறைகுறைகளுடன் ஏற்றுக்கொண்டு அவர்களை *நேசிக்கத் தொடங்குங்கள்.* எல்லோரையும் நேசிப்பது அவர்களுக்கு நல்லதோ இல்லையோ, உங்களுக்கு ரொம்ப நல்லது.

*8,அடுத்து என்ன? இதுவே மந்திரம்:*

வெற்றியோ தோல்வியோ, சாதனையோ சவாலோ, எது நேர்ந்தாலும் *அடுத்தது என்ன* என்று கேளுங்கள். அப்போதுதான் அடுத்த கட்டம் நோக்கி நகர முடியும். குழந்தை கண்ணாடியை உடைத்துவிட்டதா? அடுத்தது என்ன? அள்ளிப்போட வேண்டியதுதான். ```(WHAT NEXT?)``` இது வெற்றியின் மந்திரங்களில் முக்கியமானது.

*9.நம்பிக்கைத் தீர்மானம் நிறைவேற்றுங்கள்:*

ஒவ்வொருநாள் விடியலிலும் உங்கள் மீது நீங்களே நம்பிக்கைத் தீர்மானம் நிறைவேற்றுங்கள். “இதே உற்சாகத்துடன் வேலையில் இறங்கலாம். இன்றைய வேலைகளை சரியாக முடிக்கலாம்” என்று உங்கள் மீது நீங்களே *நம்பிக்கை வைத்து நாளைத் தொடங்குங்கள்.*

*11.பணத்துக்கு வேலை கொடுங்கள்:*

உங்கள் வருமானம் எவ்வளவாக இருந்தாலும் அந்தப் பணத்துக்கு வேலை கொடுங்கள். பணம், தன்னைத்தானே பலமடங்கு பெருக்கிக்கொள்கிற பேராற்றல் உடையது. ஈட்டிய பணத்தை *புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள்.* அது தானாகவே பெருகும்.

*12.கடிகாரத்தை மட்டுமல்ல நேரத்தையும் கையில் கட்டுங்கள்:*

உங்கள் நேரம் உங்கள் பொறுப்பிலும் கண்காணிப்பிலும் இருக்கட்டும். அரட்டை – அவதூறு – அனாவசியமான பேச்சு என்று *அடுத்தவர்கள் உங்கள் நேரத்தைக் கொள்ளையடிக்க இடம் கொடுக்காமல் விழிப்புடன் இருங்கள்.*

*13.நகைச்சுவை உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள்:*

இறுக்கமாய் இருப்பதால் நாம் எதையும் சாதிக்கப் போவதில்லை – மன இறுக்கத்தையும் மன அழுத்தத்தையும் வளர்த்துக் கொள்வதைத் தவிர!! வெற்றியாளர்களும் வரலாற்று புருஷர்களும் நகைச்சுவை உணர்வு நிறைந்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள். *நகைச்சுவை உணர்வு,* வாழ்வின் பூட்டப்பட்ட *பல கதவுகளைத் திறந்துவிடும்.*

*14.மனிதத்தன்மையே கடவுள்தன்மையின் ஆரம்பம்:*

மற்றவர்களின் சிரமங்களைப் புரிந்துகொள்வதும், மனித நேயத்துடன் உதவுவதும், மற்றவர்களை மன்னிப்பதும், மனிதர்களின் பகுதிநேர வேலை. கடவுளுக்கோ, முழுநேர வேலை. முதலில் உங்களையும், பிறகு மற்றவர்களையும் முழுமனதோடு மன்னித்து, மலர்ச்சியாய் –
மகிழ்ச்சியாய் –
*வாழ்க்கை என்கிற கொண்டாட்டத்தில்* தீவிரமாகப் பங்கெடுங்கள்.🌺

*புதிய சிந்தனை அல்ல இது....*🌺

*புத்துணர்சியூட்டும் சிந்தனை.*🌺

Saturday, February 8, 2020

அம்மாவுக்கு என்ன பிடிக்கும் ?

*படித்ததில் பாதித்தது*

என்ன பிடிக்கும் ?

"அண்ணா, டாக்டர்ஸ் என்னதான் சொல்றாங்க?" ராதுவின் குரலில் பதட்டம்.



" அதேதான்மா. அப்பாவுக்கு ஹார்ட் பம்பிங் ரேட் ரொம்ப குறைச்சலா இருக்கு. ஏற்கெனெவே ரெண்டு சர்ஜரி ஆனதால இப்போ ஒண்ணும்  பண்ண முடியாது. முடிஞ்ச அளவு மருந்து கொடுத்தாச்சு.  இருக்கற வரைக்கும் அவரை சந்தோஷமா வச்சிக்குங்கன்னுதான் சொல்றாங்க".



" இப்போ அப்பா எப்படி இருக்கார்?"



"நார்மலா எப்பவும் போலதான் இருக்கார். இந்த நிமிஷம் வரை பைன்".



" அண்ணா, நான் ஒண்ணு  சொல்றேன் கேளு. நான் பசங்களை கூட்டிட்டு இன்னும் ரெண்டு நாள்ல வரேன். நீ ரகு அண்ணாவையும் எல்லோருடனும் வரச்சொல்லு. எல்லாருமா சேர்ந்து அப்பாவோட நாலு நாள் இருக்கலாம். "



" சரிடாம்மா .  நான் அவன்கிட்ட பேசறேன்."



" அம்மாவுக்குத்  தெரியுமா?"



" தெரியாது. ஹாஸ்பிடல் போனோம். சரியாகி வந்துட்டார்னுதான் நினைச்சிண்டு இருக்கா".



" அப்படியே இருக்கட்டும். அம்மாவை கவலைப்படுத்த வேண்டாம்".



" சரி, நீ டிக்கெட் புக் பண்ணிட்டு சொல்லு. நான் காரை எடுத்துண்டு ஸ்டேஷனுக்கு வரேன்".



சாப்பிடும்போது அம்மாவிடமும் அப்பாவிடமும்   ராதுவும் ரகுவும் வருவதைப் பற்றி சொன்னான் ரவி. அவ்வளவுதான், அம்மாவுக்கு இரண்டு இறக்கை முளைத்த மாதிரி ஆகி விட்டது. அப்பாவின் மலர்ந்த முகம்தான் அவருடைய சந்தோஷத்தின் அறிகுறி.



" எனக்கே ஒரு வாரமா அவா ரெண்டு பேரையும் குழந்தைகள் எல்லாரையும் பார்க்கணும்னு ஒரு நினைப்பு. நல்லதாய் போச்சு. கொஞ்சம் சாமான் எல்லாம் ரெடி பண்ணி வைக்கிறேன். நீ சித்த போய் மெஷின்ல அரைச்சுண்டு வந்துடு. குழந்தைகளுக்கு கொஞ்சம் பட்ஷணம், அப்புறம் கொஞ்சம் கஞ்சி மாவு, சாம்பார்  பொடி, புளிக்காய்ச்சல், சேவை மாவு.  ரகு பொண்டாட்டிக்கு என் கை முறுக்கு ரொம்ப பிடிக்கும் ..."



" அம்மா,அம்மா... நிறுத்து கொஞ்சம் மூச்சு விடு..எல்லாம் பண்ணலாம். எங்க எல்லாருக்கும் என்ன பிடிக்கும்னு  சொல்றியே, அப்பாவுக்கு  என்னல்லாம் பிடிக்கும் சொல்லு".



உங்கப்பாக்கு நான் என்ன பண்ணி குடுத்தாலும் பிடிக்கும்தான்". கீற்றாய் மின்னி மறைந்த நாணம் கலந்த பெருமை அவள் வைரத்தோடை மங்கச்  செய்தது.



" சரி, அப்பாக்கு பிடிச்சதா ரெண்டு ஐட்டம் சொல்லு பார்ப்போம்."



" நான் தினமும் அவர் இலைல எஸ்ட்ராவா என்ன போடறேன்னு பார்த்து தெரிஞ்சுக்கோடா". அம்மா சிரித்தபடி எழுந்து சென்றாள்.



ரவிக்கு ஒரு கணம் அம்மாவை நினைத்து கவலையாக இருந்தது. எப்படி தாங்குவாள்?



ராதுவும்  ரகுவும் வந்தவுடன் வீடு களை கட்டி விட்டது. அம்மா சமையலறையோடு ஐக்கியம் ஆகி விட்டாள். அப்பாவை சாக்கு வைத்து எல்லோருக்கும் பிடித்தது  எல்லாம் அம்மா செய்து தள்ளிக்கொண்டிருந்தாள்.   அப்பா எல்லோருடனும்  சிரித்துப் பேசி மிக மகிழ்ச்சியாக இருந்தார். அப்பாவுக்குப்  பிடித்த பழைய பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தன. ஆளாளுக்கு  ஆசையாக அப்பாவுக்கும் அம்மாவுக்கும் புது ஷர்ட்டும் புடவையும் வாங்கினார்கள். வீடு  வெகு நாட்கள் கழித்து கூச்சலும் கேலியும் விளையாட்டும் அமர்க்களமுமாய்  ஆரவாரப்பட்டது. அப்பாவின் உடல்நிலையைப் பற்றிய கவலை கூட சற்று மறந்து விட்டது. சனிக்கிழமை அன்று வெளியில் போவதாகத் திட்டம் போட்டார்கள்.



"எனக்கு எல்லாருடனும் பீச் போகணும்னு ஆசை. அப்படியே வெளியில சாப்பிட்டுட்டு வரலாம். அம்மாவுக்கு ஒரு வேளை ரெஸ்ட்டா இருக்கட்டும்." அப்பா சொன்னார்.



அன்றைய பொழுது மிக இனிமையாக  கழிந்தது. மகிழ்ச்சித் தருணங்கள் எல்லாம் டிஜிட்டல் உதவியுடன் அமரத்துவம் பெற்றன. ஹோட்டலுக்கு சாப்பிடச் சென்றார்கள்.  " அப்பா, என்ன சாப்பிடறேள்?"

அப்பாவுக்கு பிடித்தது  எல்லாம் பார்த்து பார்த்து ஆர்டர் செய்தார்கள்.



" அம்மா, உனக்கு என்ன வேணும்?"

" எனக்கு சாம்பார் இட்லி வேண்டாம்,காரமா இருக்கு." ஒரு வாண்டு கத்தியது.

" இதே வேலை..எதையாவது ஆர்டர் பண்ண வேண்டியது, ஒரு வாய் சாப்பிட்டுட்டு வேண்டாங்க வேண்டியது. " ராது குழந்தையிடம் சிடுசிடுத்தாள்.

" குழந்தையை வையாதே. நான் அதை எடுத்துக்கறேன். அவனுக்கு வேணுங்கிறதை வாங்கிக்கொடேன்" அம்மா .

" உனக்கு வேணும்ங்கிறதை சொல்லும்மா. இவனை விடு".

" பரவாயில்லை, எனக்கு இட்லி போதும், அவன் கேட்கிறதை ஆர்டர் பண்ணு ".

குழந்தைகள் மிச்சம் மீதி வைத்ததை அம்மாவும் ராதுவும் பகிர்ந்து கொள்ள ஒரு வழியாக டின்னர் முடிந்தது.



திரும்ப வரும்போது அப்பா மிக நெகிழ்ச்சியாக இருந்தது தெரிந்தது.

இரவு தூங்குமுன் அம்மாவிடம் சொன்னார்.

" ரொம்ப நாள் கழிச்சு குழந்தைகள் எல்லோரோடும் இருக்கறது ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஒவ்வொண்ணும் பார்த்து பார்த்து செய்யறதுகள். எத்தனை பேருக்கு இது வாய்க்கும்?"

" நீங்க சொல்றது சரிதான்". அம்மா ஆமோதித்தாள்.

" ஆனா எனக்கு ஒரு சந்தேகம். எப்பவும் அப்பா, இதை சாப்பிடக்கூடாது, அதை சாப்பிடக்கூடாது, உடம்புக்கு ஆகாதுன்னு சொல்ற பசங்க இப்ப என்ன  ஒரு ரெஸ்ட்ரிக்க்ஷனும் இல்லாம ஓவர் உபசாரம் பண்றதுகளேன்னுதான்."

" ஒரு ரெண்டு நாள் எல்லாரும் சேர்ந்து இருக்கறதுனாலதான் இதெல்லாம். அப்புறம் நானே உங்க ரெகுலர்  டயட்டுக்கு  மாத்திடுவேன்". அம்மா சிரித்தாள்.

"அதானே பார்த்தேன், சரி , தூங்கலாம். டயர்டா இருக்கு, நாளை  காலம்பற மெல்ல எழுந்துக்கோ. லீவு நாள்தானே".

" பார்க்கலாம். அதுவாவே  சீக்கிரம் எப்பவும் போல முழிப்பு வந்துடும்."

ஆனால் மறுநாள் காலை அம்மாவுக்கு சீக்கிரம் முழிப்பு வரவில்லை. எல்லோரும் எழுப்பியும் அவள் முழித்துக் கொள்ளவே இல்லை.

வீடு உறைந்து போனது.  யாருக்கும்  அம்மாவின் இழப்பை ஜீரணிக்க முடியவில்லை. அப்பா அப்பான்னு  அம்மாவை கவனிக்காம விட்டிட்டோமோ,  ஒரு நாள் கூட ஒரு வலின்னு கூட சொன்னது இல்லையே என்று புலம்பி மருகினார்கள். அதிர்ச்சியிலும்,துக்கத்திலும் பத்து நாட்கள் போனது தெரியவில்லை.

" அம்மாவுக்கு என்ன பிடிக்கும்னு சொன்னால் சமையல்ல சேர்த்துடலாம்".சமையல் மாமி  ராதுவிடம் கேட்டார்.

"அம்மாவுக்கு என்ன பிடிக்கும்?...ரகு  அண்ணா நீ சொல்லேன், அம்மாவுக்கு என்ன பிடிக்கும்? நான் இங்கே வரும்போதெல்லாம் அம்மா எனக்கு பிடிச்சதை செய்வா. அவளுக்கு என்ன பிடிக்கும்னு இப்போ ஒன்னும் தோணலியே.."

" அம்மாவுக்கு என்ன பிடிக்கும் ? ஒவ்வொருத்தருக்கும் என்ன பிடிக்கும்னு பார்த்து பார்த்து செய்வாளே தவிர, அவளுக்குப் பிடிச்சதை கவனிக்கலையே, ரவி, நீ சொல்லு, அம்மாக்கு என்னல்லாம் பிடிக்கும் ?"

" ம்ம்..எப்பவும் எல்லாருக்கும் போட்டுட்டு அம்மா தனியாத்தான் சாப்பிடுவா..எனக்கு இது பிடிக்கும்னு எதுவும் அவ பண்ணினதா தெரியலையே..கடவுளே, என்ன இது..அம்மாக்கு என்ன பிடிக்கும் ..."

" அப்பா, அம்மாவுக்கு என்ன பிடிக்கும்?"

" அம்மாவுக்கு... அம்மாவுக்கு என்ன பிடிக்கும்"?