Showing posts with label எங்கள் ஊர் கண்ணந்தங்குடி. Show all posts
Showing posts with label எங்கள் ஊர் கண்ணந்தங்குடி. Show all posts

Sunday, October 22, 2023

எங்கள் ஊர்

உலகில் எங்கு சென்றாலும்
என் கரங்களை மட்டும் விடுவதே இல்லை கண்ணந்தங்குடி 

உன்னில் தான் பிறந்தேன் 
உன்னால் தான் வளர்ந்தேன் 
உன்னில் தான் மடியப் போகிறேன் 

எங்கு வேண்டுமானாலும் செல் 
எங்கு வேண்டுமானாலும் வாழ்
என்னை விட்டு நீங்காதே என்கிறது 
 கண்ணந்தங்குடி

எங்கு சென்றாலும் கண்ணை அயராமல் என்னை காக்கிறது கண்ணந்தங்குடி

எனக்கு வாழ கற்றுக் கொடுத்தது வாழ்வதற்கும் பிழைப்பதற்கும் வேறுபாட்டை கற்றுக் கொடுத்தது 
கண்ணந்தங்குடி

 கண்ணனுக்கு கண்ணாய்
உயிருக்கு உயிராய் 
என்னை காத்து நிற்கிறது கண்ணந்தங்குடி

 நான் ஒரு பொம்மலாட்டக் கலைஞன் என்னை கட்டுப்படுத்தும் கயிறு 
 கண்ணந்தங்குடி

 பழகுவதற்கும் 
பாசம் வைப்பதற்கு 
பற்றற்று இருப்பதற்கும் 
கற்றுக் கொடுத்தது  கண்ணந்தங்குடி

அது ஒரு கலாச்சார கடல்
அன்பின் பெருங்கூட்டம் 
அக்கறையில் தாய் 

மாமன் மச்சான் பங்காளி அத்தை அக்கா தங்கை அண்ணன் என ஒரு பாச பெருங்கடல்

 நாங்கள் வாழ்வதோ உலகெங்கும் ஆனால் எங்கள் உள்ளத்தில் என்றென்றும் உறங்குவது எங்கள் ஊர் 

ஊரை சுற்றி வந்தால் உலகை சுற்றிய திருப்தி 

அது பசுமை போர்த்திய நெற்குன்று
 நீரால் நிரம்பி வழியும் நீலக்கடல்

 தப்பு செய்த போது தட்டி வைத்தது சோகமாய் இருந்த போது தோள் கொடுத்தது 
சாதிக்க துணிகையில் நம்பிக்கை தந்தது
கையறு நிலையில் இருந்த போது கை கொடுத்தது

 கல்வியை எல்லோருக்கும் கண்ணாய் கொடுத்தது 
அதுதான் எங்களுக்கு உலகை சுற்றிவர கருவியாக அமைந்தது 

ஒற்றுமையாய் இருக்க மலையேறி அம்மனை கொடுத்தது
நாங்கள் ஒன்று கூட திருவிழாவை வைத்தது 

ஒருவர் கூட பசியோடு உறங்க விட்டதில்லை  கண்ணந்தங்குடி
எந்த வீட்டை தட்டினாலும் சோறும் நீரும் கிடைக்கும் 

மனிதன் மட்டுமல்ல எந்த உயிரும் பசியோடு உறங்க விட்டதில்லை எங்கள் ஊர் 

நான் கவலைப்படும்போதெல்லாம் என்னை நினைவுகளாலும் கனவுகளாலும் அணைத்துக் கொள்ளும் 
கண்ணந்தங்குடி

 என்னை எப்பொழுதும் தனி மரமாய் விட்டதில்லை எங்கள் ஊர்

 ஒவ்வொரு முறை செல்லும் போதும் என்னை பிடித்து வைத்துக் கொள்கிறது
 கண்ணந்தங்குடி
ஆனால் பிழைப்புத்தான் விடமாட்டேன்
என்கிறது.

பூமி.சாமி.