என் கரங்களை மட்டும் விடுவதே இல்லை கண்ணந்தங்குடி
உன்னில் தான் பிறந்தேன்
உன்னால் தான் வளர்ந்தேன்
உன்னில் தான் மடியப் போகிறேன்
எங்கு வேண்டுமானாலும் செல்
எங்கு வேண்டுமானாலும் வாழ்
என்னை விட்டு நீங்காதே என்கிறது
கண்ணந்தங்குடி
எங்கு சென்றாலும் கண்ணை அயராமல் என்னை காக்கிறது கண்ணந்தங்குடி
எனக்கு வாழ கற்றுக் கொடுத்தது வாழ்வதற்கும் பிழைப்பதற்கும் வேறுபாட்டை கற்றுக் கொடுத்தது
கண்ணந்தங்குடி
கண்ணனுக்கு கண்ணாய்
உயிருக்கு உயிராய்
என்னை காத்து நிற்கிறது கண்ணந்தங்குடி
நான் ஒரு பொம்மலாட்டக் கலைஞன் என்னை கட்டுப்படுத்தும் கயிறு
கண்ணந்தங்குடி
பழகுவதற்கும்
பாசம் வைப்பதற்கு
பற்றற்று இருப்பதற்கும்
கற்றுக் கொடுத்தது கண்ணந்தங்குடி
அது ஒரு கலாச்சார கடல்
அன்பின் பெருங்கூட்டம்
அக்கறையில் தாய்
மாமன் மச்சான் பங்காளி அத்தை அக்கா தங்கை அண்ணன் என ஒரு பாச பெருங்கடல்
நாங்கள் வாழ்வதோ உலகெங்கும் ஆனால் எங்கள் உள்ளத்தில் என்றென்றும் உறங்குவது எங்கள் ஊர்
ஊரை சுற்றி வந்தால் உலகை சுற்றிய திருப்தி
அது பசுமை போர்த்திய நெற்குன்று
நீரால் நிரம்பி வழியும் நீலக்கடல்
தப்பு செய்த போது தட்டி வைத்தது சோகமாய் இருந்த போது தோள் கொடுத்தது
சாதிக்க துணிகையில் நம்பிக்கை தந்தது
கையறு நிலையில் இருந்த போது கை கொடுத்தது
கல்வியை எல்லோருக்கும் கண்ணாய் கொடுத்தது
அதுதான் எங்களுக்கு உலகை சுற்றிவர கருவியாக அமைந்தது
ஒற்றுமையாய் இருக்க மலையேறி அம்மனை கொடுத்தது
நாங்கள் ஒன்று கூட திருவிழாவை வைத்தது
ஒருவர் கூட பசியோடு உறங்க விட்டதில்லை கண்ணந்தங்குடி
எந்த வீட்டை தட்டினாலும் சோறும் நீரும் கிடைக்கும்
மனிதன் மட்டுமல்ல எந்த உயிரும் பசியோடு உறங்க விட்டதில்லை எங்கள் ஊர்
நான் கவலைப்படும்போதெல்லாம் என்னை நினைவுகளாலும் கனவுகளாலும் அணைத்துக் கொள்ளும்
கண்ணந்தங்குடி
என்னை எப்பொழுதும் தனி மரமாய் விட்டதில்லை எங்கள் ஊர்
ஒவ்வொரு முறை செல்லும் போதும் என்னை பிடித்து வைத்துக் கொள்கிறது
கண்ணந்தங்குடி
ஆனால் பிழைப்புத்தான் விடமாட்டேன்
என்கிறது.
பூமி.சாமி.