Friday, November 20, 2020

சாக்ரடீஸ்

#சிந்திக்கும்நாக்கு

படிப்பின் பயன் என்பது வேலை தேடுவது, சம்பாதிப்பது மட்டுமில்லை; சுயசிந்தனையுடன் தேடலுடன் உலகை புரிந்துகொள்வதாகும். சாக்ரடீஸ் எழுப்பிய கேள்விகள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் நம்மிடையே எதிரொலித்துக்கொண்டேதான் இருக்கின்றன. அது சிந்தனை யின் வலிமையைக் காட்டுகிறது. எது குறித்தும் கேள்வி கேட்டு, அதன் அடிப்படைகளைப் பற்றிய உண்மையை அறிந்துகொள்வதே சாக்ரடீஸின் பாணி.

ஏதென்ஸ் மக்கள் சாக்ரடீஸிடம் பேசினால் தங்களுக்குத் தெளிவு கிடைக்கும் என்று நம்பினார்கள். சாக்ரடீஸ் பிரச்சினைகளுக்கு எளிய தீர்வுகளைச் சொல்வது இல்லை. மாறாக, பிரச்சினைகளின் காரணத்தை கேள்வியின் மூலம் உணரச்செய்கிறார். அதைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளைப் பகுத்தறிவுகொண்டு சிந்திக்க வைக்கிறார்.

இதனால் பொது மக்கள் பிரச்சினைகள் எதனால் உருவா கிறது என்பதை நன்றாகப் புரிந்துகொண்டார்கள். அதைப் போக்குவதற்குக் குரலும் கொடுத்தார்கள். சாக்ரடீஸ் தனது காலத்திய சமூக பழக்க வழக்கங்களை ஆராய்ந்து கேள்விகள் எழுப்பியதுடன் அரசாங்கத்தை, அதிகாரத்தைக் கடுமையாக விமர்சனமும் செய்தார். அந்தத் துணிச்சல், நேர்மை, மன உறுதியே இன்றளவும் சிந்தனையாளர்களுக்கு வழிகாட்டுகிறது.

விஷம் குடித்து சாக வேண்டும் என சாக்ரடீஸ் தண்டிக்கப்பட்டார். அப்போதும் அவர் விஷத்தைக் கண்டு பயப்படவில்லை. கையில் வாங்கி விரும்பிக் குடித்தார். தான் தீர்க்க வேண்டிய கடன் பாக்கியை நினைவுபடுத்திவிட்டே அவர் மரணத்தை சந்தித்தார். சாக்ரடீஸின் மரணத்தைப் பற்றி குறிப்பிடும்போது ‘சாக்ரடீஸ் சிந்திப்பதை நிறுத்தி விட்டார்’ என்றே சீடர்கள் அறிவித்தார்கள். சிந்திப்பதே மனிதனின் சிறப்பியல்பு. ‘மனிதன் என்பவன் மதிப்பீடு களை உருவாக்கிக்கொண்டு வாழும் ஒரு விலங்கு.'

#எஸ்_ராமகிருஷ்ணன்

No comments:

Post a Comment