Tuesday, March 10, 2020

முற்பகுதி வாழ்க்கையை வைத்துக் கொண்டு பிற்பகுதி வாழ்க்கையை முடிவு செய்து விட முடியாது

From s.raa's website
குறுங்கதை 28 மொசார்ட்டின் வயலின்

பனிப்பிரதேசமொன்றில் அந்த மேபிள் மரம் ஒற்றையாக நின்று கொண்டிருந்தது.

“எனக்கென யாருமில்லை. நான் யாருக்கும் பிரயோசனமாகவும் இல்லை. வாழ்வதே வீண்“ என்று அந்த மரம் சொல்லிக் கொண்டிருந்தது

காற்று அம் மரத்தைக் கடக்கும்போது சொன்னது

“அப்படி நினைக்காதே. உனக்கொரு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது“

இரவில் வான் நிறைந்த நட்சத்திரங்களைக் காணும் போது மேபிள் மரம் சொன்னது.

“இத்தனை அழகை நான் கண்ட போதும் அதைப் பகிர்ந்து கொள்ள ஒருவருமில்லை.“

அப்போதும் காற்றுச் சொன்னது.

“அப்படி நினைக்காதே. உன் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தமிருக்கிறது.“

பின்னொரு நாள் ஒரு மரம்வெட்டி பனிப்பிரதேசத்திற்கு வந்தான். அந்த மேபிள் மரத்தை வெட்டிச் சென்றான்.

“அவ்வளவு தான் நம்முடைய வாழ்க்கை , கணப்பு அடுப்பின் விறகாகப்போகிறோம்“ என வருந்தியது அம்மரம்

ஆனால் அந்த மரம் ஒரு இசைக்கருவி செய்பவன் வீட்டிற்குச் சென்றது. அவன் அதை வயலின் செய்வதற்குப் பயன்படுத்திக் கொண்டான்

“நான் ஒரு இசைக்கருவியானது மகிழ்ச்சியே. எவருக்கோ பயன்படப்போகிறேன்“ என்றது அம்மரம்

அவன் வயலினை லியோபோல்ட் என்ற இசை ஆசிரியருக்கு விற்பனை செய்தான். லியோபோல்ட் அந்த வயலினை தன் வீட்டிற்குக் கொண்டு சென்றார். அவரது ஐந்து வயது மகன் அந்த வயலினைக் கையில் எடுத்து வாசிக்க ஆரம்பித்தான்.  இன்னிசை பெருகியது

அந்தப் பையனின் பெயர் வுல்ப்காங் அமேடியஸ் மொசார்ட்.

இப்போது அது  இசைமேதை  மொசார்ட்டின் வயலின்

மொசார்ட் அந்த வயலினைக் கொண்டு எண்ணிக்கையற்ற இசைக்கோர்வைகளை உருவாக்கினான். அற்புதமான சங்கீதத்தை உலகிற்கு வழங்கினான்.

இதுநாள் வரை அனுபவித்து வந்த மரத்தின் தனிமையை, பனிக்காற்றின் ஈரத்தை, வானெங்கும் பூத்திருந்த நட்சத்திரங்களை, தூரத்து நதியின் சலசலப்பை, கடந்து சென்ற பறவைகளின் சிறகசைப்பை என மரத்தின் எல்லா நினைவுகளையும் அவன் இசையாக்கினான்.

மொசார்ட்டோடு அந்த வயலின் மாமன்னரின் அரண்மனைக்கும் இசை அரங்கிற்குமாகப் பயணித்துக் கொண்டேயிருந்தது.

மேபிள் மரம் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

அது பெருமிதமாகச் சொன்னது

“முற்பகுதி வாழ்க்கையை வைத்துக் கொண்டு பிற்பகுதி வாழ்க்கையை முடிவு செய்து விட முடியாது. காற்றுச் சொன்னது சரியே. என் வாழ்க்கையின் அர்த்தம் இதுவே“

Sunday, March 8, 2020

மகளிர் தின வாழ்த்து

சுதந்திரம், சுயமரியாதை, அன்பு, அங்கீகாரம், அரவணைப்பு மற்றும்  உணர்வுகளை மதிப்பது இவைகளை மகளிருக்கு அளிப்பது தான் உண்மையான  மகளிர் தின வாழ்த்தாக அமையும். சாமியின் சிந்தனை

நம்பிக்கை

காலம் தன் ஜாலத்தால் வெற்றி பெறும் என்பது தெரிந்ததும், நம் உறவுகளிடம், நண்பர்களிடம், தெரிந்தவர்களிடம், ஏன் வாழ்க்கையிடம், 'நீண்ட  நாள் தொடர்பில் இருப்போம் ' என்று கூறுவது தான் மனிதனின் நம்பிக்கை. சாமியின் சிந்தனை.

Saturday, March 7, 2020

DONT OVERTHINK ABOUT YOUR PROBLEMS

ஆ....ஆணி!!!

ஒருவன் மிகுந்த வலியோடு நொண்டியவாறு நடந்துகொண்டிருந்தவன்,

வலிதீர மருத்துவரை சந்தித்தான்.

மருத்துவரிடம் போனான்.

அவர் மரத்துப் போக செய்யும் மாத்திரைகள் தந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க சொன்னார்.

அதிலும் வலி நிற்காமல் போகவே,

இன்னொரு மருத்துவமனைக்குப்போக,

அவர்கள் அவனுக்கு சில பத்தியங்களை சொல்லி,

சில உடற்பயிற்சிகளும் செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள்.

சிலவாரங்கள் கழித்து,

இன்னொரு மருத்துவரிடம் போக வேண்டியிருந்தது.

வலிதான் நிற்கவே இல்லையே,

அவரோ அவனுடைய வலி நிற்கவேண்டுமானால்,

டான்சில்களை எடுத்துவிடவேண்டும் என்றார்.

அப்படியே அவற்றையும் எடுத்தாயிற்று.

வலி மட்டும் நீங்கிய பாடில்லை.

இன்னொரு மருத்துவர் அவனை பரிசோதித்தார்.

"உனக்கு குடல்வால் நீக்கம் செய்ய வேண்டும்.

குடல்வாலை நீக்கினால்,

இந்த வலி குறைந்துவிடும்.

ஆகவே இந்த...சிறப்பு மருத்துவமனைக்கு போ.

நான் சிபாரிசு செய்கிறேன்." என பரிந்துரைத்தார்.

அவனும் தன்னுடைய குடல்வாலை அறுவைசிகிச்சை செய்து நீக்கிக்கொண்டான்.

வலி மட்டும் நீங்கிய பாடில்லை.

இப்படி ஒருவருக்கு பின் ஒருவர் என்று பல மருத்துவர்களை பார்த்தாயிற்று.

அறுவை சிகிச்சைகள் ஒன்றுக்கு பின் இன்னொன்று என்று தொடர்ந்தன.

அவனுடைய உறுப்புகள் ஒவ்வொன்றாக காணாமல் போய்க் கொண்டிருந்தன.

ஆனால்,

பிரச்சனையோ தீர்ந்தபாடில்லை.

கடைசியாக,

கையில் இருந்த பணம் மட்டும் தீர்ந்தது மருத்துவர்கள் அவனை கைவிட்டுவிட்டனர்.

ஒரு நாள், யதேச்சையாக கடைத்தெருவில் அவனை சந்தித்த மருத்துவர்,

அவன் நொண்டாமல் சாதாரணமாக நடந்துசெல்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

"எப்படி இது சாத்தியம்"?

"நாங்கள் யாரும் நீக்கமுடியாத அந்த வலி எப்படி குணமானது"?

எந்த மருத்துவம், எந்த மருத்துவர் உன்னை குணமாக்கியது என ஆச்சரியத்துடன் வினவினார்.

அதற்கு அவன்,

"அய்யா சாமிகளா,...
எந்த மருத்துவமும் என்னை சரி பண்ணலை,

என் செருப்புல குத்தியிருந்த ஆணியை எடுத்தவுடனே என் வலியும் சரியாயிடுச்சு"!

என் நொண்டலும் சரியாகிடுச்சி" என்றான்.

நிபுணர்களிடம் போய்ப் பார்.

உனக்கே தெரிந்திராத பிரச்சனைகளை எல்லாம் உனக்கு இருப்பதாக சொல்வார்கள்.

அப்படித்தான் அவர்கள் சொல்லியாக வேண்டி இருக்கிறது.

உனக்கு எந்த அளவு பிரச்சனைகள் இருக்கிறதோ,

அதை சார்ந்தது தான் அவர்கள் நிபுணத்துவம்.

பார்க்கப்போனால் உன் பிரச்சனை எந்த அளவுக்கு பெரியதாக இருக்கிறதோ,

அந்த அளவுக்கு அவர்களுக்கு அதிக மகிழ்ச்சி.

அப்போதுதானே அவர் தன்னுடைய அறிவையும் திறமையையும் காட்டிக்கொள்ள முடியும்.

உண்மையில் பிரச்சனை வெகு சிறியதாக இருக்கலாம்.

வாஸ்தவத்தில் உண்மையான பிரச்சனைகள் எல்லாமே வெகுசிறிய பிரச்சனைகள்.

நோயின் ஆணிவேரை தேடிச்சென்றால்,

அவை எப்போதும் வெகு சிறிய காரணத்தில் இருந்து தான் தொடங்கி இருக்கிறது என்று அப்போதுதான் புரியும்!!!

#ஓஷோ
'தம்மபதம்

மனமார பாராட்டுங்கள்

ஒரு டீச்சர் தன் வகுப்பு மாணவர்களிடம் வெற்றுத் 
 தாள்களைக் கொடுத்து, ஒவ்வொருவரையும்,
வகுப்பில் உள்ள மற்ற மாணவர்கள் அனைவரின் பெயரையும் அதில் எழுதச் சொன்னார்.

ஒரு பெயருக்கும், அடுத்த பெயருக்கும் இடையே சிறிது 
 இடைவெளியுடன் !

மாணவர்கள் எழுதி முடித்தவுடன், டீச்சர் சொல்கிறார் -

“ஒவ்வொரு பெயருக்கும் எதிரே, அவர்களிடம் நீங்கள்
 காணும் – உங்களுக்கு பிடித்த நல்ல விஷயம் 
 ஒன்றைப்பற்றி எழுதுங்கள்.”

மாணவர்கள் ஒவ்வொருவரும், யோசித்து, தங்களுக்கு
 தோன்றியதை எல்லாம் எழுதிக் கொடுத்தனர்.

வாரக்கடைசி – டீச்சர் ஒவ்வொரு மாணவனின் பெயரிலும்
 ஒரு தாள் தயார் செய்து, அதில் மற்ற மாணவர்கள்

 அவனைப்பற்றி எழுதியிருந்த உயர்வான
 வார்த்தைகளை வரிசையாகத் தொகுத்து எழுதி 
 கீழே தன் கையெழுத்தையும் போட்டு, 

மாணவர்கள் ஒவ்வொருவராக அழைத்து 
 அவர்களின் பெயரிட்ட தாளைக் கொடுத்தார். 

மாணவர்கள் அவரவர் இடத்திற்கு சென்று 
 அமர்ந்து படிக்கிறார்கள்.

10 நிமிடங்கள் – வகுப்பறையே 
 சந்தோஷக்கடலில் மிதக்கிறது.

“நான் இவ்வளவு சிறப்பானவனா..?
என்னைப் பற்றி மற்றவர்கள் இவ்வளவு நல்ல
 அபிப்பிராயம் வைத்திருக்கிறார்களா ?” –

அத்தனை மாணவர்களும் ஆனந்தத்தில் திளைக்கிறார்கள் !

அந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள 
 குணாதிசயங்களை மேலும் மேலும்
 வளர்த்துக் கொள்ள முயற்சி செய்கிறார்கள்.

தன்னைப்பற்றி உயர்வாகச் சொன்னதற்காக, ஒவ்வொரு மாணவனுக்கும்,சக மாணவர்கள் மேல் அன்பு அதிகரிக்கிறது.
பல வருடங்கள் கழிகின்றன. 

அந்த வகுப்பில் படித்த
 மாணவன் ஒருவன் வளர்ந்த பிறகு ராணுவத்தில்
 சேர்கிறான். பிறகு போர் ஒன்றில் வீர சாகசம் புரிந்து, 
மரணம் அடைகிறான். 

அவன் உடல் ராணுவ மரியாதையுடன்
 சொந்த ஊர் கொண்டு வரப்படுகிறது. 

இறுதிச் சடங்கில்,

கலந்து கொள்ள அந்த டீச்சரும் செல்கிறார்.

மிடுக்கான ராணுவ உடையில் -
நாட்டின் தேசியக்கொடி
போர்த்தப்பட்டு,
சவப்பெட்டியிலும் கம்பீரத்துடன் காணப்பட்ட அந்த 
 மாணவனைக் கண்டு பெருமிதத்துடன் கண் கலங்குகிறார்.

ஒவ்வொருவராக வரிசையில் வந்து இறுதி மரியாதை
 செலுத்துகின்றனர். டீச்சர் கடைசியாகச் செல்கிறார்.
பின்னர், பக்கத்திலேயே நிற்கிறார்.

உடலைத் தாங்கி வந்த, ராணுவ சக வீரர்கள்
 அருகிலேயே நின்றிருந்தனர்.

ஒரு வீரர் கேட்கிறார் -”நீங்கள் சரவணனின் 10ஆம் வகுப்பு 
 டீச்சரா ?” என்று. டீச்சர் ஆம் என்று தலையசைக்கிறார்.

பின்னர் அந்த ராணுவ வீரன் சொல்கிறான் “டீச்சர் -
எனக்கு உங்களைத் தெரியும். சரவணன் உங்களைப்பற்றி
 எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்பான்”

சடங்குகள் முடிந்த பின்னர், சரவணனின் பழைய வகுப்புத்
 தோழர்கள் அங்கு டீச்சருடன் ஒன்றாக நின்றிருந்தனர். 

அங்கு சரவணனின் தாயும் தந்தையும் வருகின்றனர்.

அந்த சோகத்திலும் தந்தை டீச்சரிடம் கூறுகிறார் -

“டீச்சர் நான் உங்களுக்கு ஒன்றைக் காட்ட வேண்டும்.
இது சரவணன் போரில் கொல்லப்பட்டபோது, அவனது 
 பாக்கெட்டிலிருந்து இறுதியாக கண்டெடுக்கப்பட்டது”.

அவர் காட்டியது, பெரிய பர்ஸ் ஒன்றில் பத்திரமாக -
பல முறை மடிக்கப்பட்டு, மடிப்புகள் எல்லாம் டேப் போட்டு ஒட்டப்பட்டு பத்திரமாக பாதுகாக்கப்பட்ட ஒரு தாள். 

ஆமாம் – பல வருடங்களுக்கு
 முன்னர் அந்த டீச்சர் சரவணனைப் பற்றிய நல்ல 
 குணங்களை வரிசைப்படுத்தி தொகுத்து எழுதிக் கொடுத்திருந்த அதே காகிதம் தான் !

கண்ணீர்ப் பெருக்குடன் சரவணனின் தாய் கூறுகிறார் -

“ரொம்ப நன்றி டீச்சர் – உங்கள் கடிதத்தை அவன்
 உயிரையும்விட மேலாக விரும்பினான்.

இத்தனை வருடங்களும்
 அதை அவ்வளவு பத்திரமாக பாதுகாத்து வந்தான்.

அவனுக்கு வாழ்க்கையில் மிகுந்த தன்னம்பிக்கையும், 
பிடிப்பும் ஏற்பட இந்த காகிதம் தான் உதவியது.”

டீச்சரும் மற்ற மாணவர்களும் சரவணனை நினைத்து
 கதறி அழுகின்றனர்..,

ஆம்,என் இனிய நண்பர்களே.,

இந்த வாழ்க்கைப் பாதை கரடு முரடானது.

எங்கே துவங்கும் – எப்படி இருக்கும் -எப்போது, 
எப்படி முடியும் ? யாருக்கும் தெரியாது.

இருக்கின்ற காலத்தில் – நம்முடன் இருப்பவர்களை
 அவர்களின் நல்ல இயல்புகளுக்காக நேசிப்போம்.

நல்லதும் கெட்டதும் கலந்தது தான் மனித குணம்.

ஒருவர் விரும்பத்தகாத குணத்தைக் கொண்டிருந்தால்,
நாம் அதை விரும்பவில்லை என்பதை எரிச்சல் காரணமாக,
அநேகமாக உடனேயே வெளிப்படுத்தி விடுகிறோம்.

ஆனால், ஒருவரிடம் உள்ள நற்பண்புகளை, குணங்களை -
அநேகமாக – நாம் வெளிப்படையாக பாராட்டத்
 தவறி விடுகிறோம்.

கூடாது என்றல்ல. அதன் அவசியம் நமக்குத் 
 தெரிவதில்லை.

சாம்பாரில் சற்று உப்பு அதிகமாக இருந்தால் கூட உடனடியாக
 மனைவியிடம் அதைக்கூறும் கணவர்கள், அந்த சமையல்
 நன்றாக இருக்கும்போது – பாராட்டுவது இல்லை !

பாராட்ட வேண்டும் என்று தோன்றுவதில்லை !

இந்த உலகில் அனைத்து உயிர்களுமே,
பாராட்டுதலை எதிர்பார்க்கிறது.

கிடைத்தால் சந்தோஷப்படுகிறது !

நீங்களோ, நானோ -
யாருமே அதற்கு விதிவிலக்கல்ல.

வெளிப்படையான பாராட்டுதல் -
அவர்களிடையே தன்னம்பிக்கையை கொடுக்கும்.

நல்ல குணங்கள் மேலும் மேம்பட உதவும்.

தோழமை உணர்வு அதிகப்பட உதவும்.

மனிதர்களை மேலும் நல்லவர்களாக 
மாற்றும்.

Friday, March 6, 2020

சுதந்திரம்-நிம்மதி

பெரியவனனால் சுதந்திரம் கிடைக்கும் என்று சிறு வயதில் நினைக்கிறோம், பெரியவனாய் ஆனப்பிறகு சிறு குழந்தையாகவே இருந்திருந்தால் நிம்மதியாக இருந்திருக்கலாம் என நினைக்கிறோம், ஆக பெரியவனாக ஆனப்பின்னும் குழந்தை மனதுடன் இருந்து பாருங்கள் இரண்டும் கிடைக்கிறதா என்று பார்ப்போம். சாமியின் சிந்தனை.

Sunday, March 1, 2020

நான் உலகிலேயே அதிக துயரமுடையவனாக இருக்கிறேன்

"ஒரு  மனிதன்  கடவுளிடம்  பிரார்த்தனை  செய்தான்!!!

       "நான்  உலகிலேயே அதிக துயரமுடையவனாக இருக்கிறேன்.

  என் வாழ்நாள் முழுவதும்  பிரார்த்திக்கிறேன். 

எனக்கு  அதிகமாக ஒன்றும்  வேண்டாம்."என் துயரங்களை  நீங்கள்  யாரிடமாவது மாற்றிக் கொடுத்து அவருடையதை நான் பெற்றுக் கொள்ள வேண்டும்.  

ஏனெனில்  மற்ற  அனைவரும்  மகிழ்வுடன்  உள்ளனர். 

நீங்கள்  தேர்ந்தெடுத்துக்  கொடுங்கள். "

       அன்றிரவு அவன்  ஒரு  கனவு கண்டான். 

வானிலிருந்து  இடி போன்ற  குரல் ஒலித்தது 

        "அனைவரும்  அவரவர் துயரங்களை  ஒரு பையில்  எடுத்துக்  கொண்டு கோவிலை நோக்கி  விரைந்து  வாருங்கள் ".

         தன் பிரார்த்தனைக்குக் கடவுள்  காது கொடுத்துவிட்டார் என்று  அவன் நினைத்தான். 

        உடனே அவன் தன் துயரங்களை ஒரு  பையில் நிறைத்துக்கொண்டு  சாலையில் வந்தான்.

       சாலையில். ......
       அவன் கையில் இருந்த பைதான் சிறியதாக இருந்தது. 

பலர்  பெரிய பெரிய  பைகளைத் தூக்கிச் சென்றனர். 

சிலர்  பணியாட்களின் தலைகளில் சுமைகளாக வைத்துச் சுமந்து சென்றனர். 

        அவனுக்கு  வியப்பாக இருந்தது. 

 'இறைவா! இவர்கள்தான்  இந்த  அழகிய மனிதர்கள். 

இறைவன் ஏன்  எனது பிரார்த்தனைக்கு செவி சாய்க்கவில்லை  என்பது  இப்போதுதான்  புரிகிறது.  

நான்  என்  சிறிய பையுடன்  வீடு திரும்பி விட்டால் இறைவனுக்கு  நன்றி  கூறுவேன் ' என்று  நினைத்தான். 

       கோவிலில் மறுபடியும்  அந்தக்  குரல் ஒலித்தது 

       "எல்லோரும்  அவரவர் பைகளை சுவரில் தொங்கவிடுங்கள். 

பிறகு  விளக்குகள்  அணைக்கப்பட்டு மணி அடிக்கப்படும். 

அதுவே  அடையாளம்.  

இருளில் உங்களுக்கு  வேண்டிய பையை நீங்கள்  தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். 

 வெளிச்சம் உள்ளபோதே உங்களுக்குத் தேவையான பையருகே நின்று  கொண்டால் இருட்டில் தவறவிட மாட்டீர்கள் ".

         பிரார்த்தனை புரிந்தவன் தனது பையை பிடித்திருந்தான். 

மற்றவர்களும்  அவ்வாறே நின்றிருந்தனர். 

         அவன் ஆச்சரியமடைந்தான். 

 பக்கத்தில் நின்றவர்களிடம் கேட்டான்.  

         "இவர்கள் ஏன் பைகளை கைகளில் வைத்துக்  கொண்டிருக்கிறார்கள்?"

        அவர்கள்  சொன்னார்கள்:
        "நீ ஏன்  வைத்துக்  கொண்டிருக்கிறாயோ அதே காரணத்திற்காகத்தான். 

 இப்போது நம் கவலைகளைப் பற்றி  நமக்கு ஓரளவாவது தெரியும்.  

ஆனால்  மற்றவர்களது துயரங்கள்  நமக்கு பரிச்சயம் இல்லாததும் அறியாததும் அல்லவா! 

இந்த  வயதில்  ஏன் ஒன்றுமில்லாததிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்?  

நம் பழைய நண்பர்களுடன்  வாழ்வதே மேல்! "

          விளக்கு அணைந்தது. 

அவரவரும் தங்கள்  பைகளுடன் கோவிலைவிட்டு மிகவும்  ஆனந்தமுடன் ஓடினர். 

          "கடவுள் மிகவும்  கருணையுள்ளவர்.

 என்னை சகதியிலிருந்து காப்பாற்றியுள்ளார். 

 மக்கள் எவ்வாறு  துயரங்களை மறைத்துள்ளனர். 

பெரிய  பைகளைச் சுமந்தவர்களை மகிழ்ச்சி  மிக்கவர்கள் என நினைத்தேனே!"

 என்று  அவன் நன்றியுடன்  பிரார்த்தித்தான். 

        

#ஓஷோ