ஆ....ஆணி!!!
ஒருவன் மிகுந்த வலியோடு நொண்டியவாறு நடந்துகொண்டிருந்தவன்,
வலிதீர மருத்துவரை சந்தித்தான்.
மருத்துவரிடம் போனான்.
அவர் மரத்துப் போக செய்யும் மாத்திரைகள் தந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க சொன்னார்.
அதிலும் வலி நிற்காமல் போகவே,
இன்னொரு மருத்துவமனைக்குப்போக,
அவர்கள் அவனுக்கு சில பத்தியங்களை சொல்லி,
சில உடற்பயிற்சிகளும் செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள்.
சிலவாரங்கள் கழித்து,
இன்னொரு மருத்துவரிடம் போக வேண்டியிருந்தது.
வலிதான் நிற்கவே இல்லையே,
அவரோ அவனுடைய வலி நிற்கவேண்டுமானால்,
டான்சில்களை எடுத்துவிடவேண்டும் என்றார்.
அப்படியே அவற்றையும் எடுத்தாயிற்று.
வலி மட்டும் நீங்கிய பாடில்லை.
இன்னொரு மருத்துவர் அவனை பரிசோதித்தார்.
"உனக்கு குடல்வால் நீக்கம் செய்ய வேண்டும்.
குடல்வாலை நீக்கினால்,
இந்த வலி குறைந்துவிடும்.
ஆகவே இந்த...சிறப்பு மருத்துவமனைக்கு போ.
நான் சிபாரிசு செய்கிறேன்." என பரிந்துரைத்தார்.
அவனும் தன்னுடைய குடல்வாலை அறுவைசிகிச்சை செய்து நீக்கிக்கொண்டான்.
வலி மட்டும் நீங்கிய பாடில்லை.
இப்படி ஒருவருக்கு பின் ஒருவர் என்று பல மருத்துவர்களை பார்த்தாயிற்று.
அறுவை சிகிச்சைகள் ஒன்றுக்கு பின் இன்னொன்று என்று தொடர்ந்தன.
அவனுடைய உறுப்புகள் ஒவ்வொன்றாக காணாமல் போய்க் கொண்டிருந்தன.
ஆனால்,
பிரச்சனையோ தீர்ந்தபாடில்லை.
கடைசியாக,
கையில் இருந்த பணம் மட்டும் தீர்ந்தது மருத்துவர்கள் அவனை கைவிட்டுவிட்டனர்.
ஒரு நாள், யதேச்சையாக கடைத்தெருவில் அவனை சந்தித்த மருத்துவர்,
அவன் நொண்டாமல் சாதாரணமாக நடந்துசெல்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
"எப்படி இது சாத்தியம்"?
"நாங்கள் யாரும் நீக்கமுடியாத அந்த வலி எப்படி குணமானது"?
எந்த மருத்துவம், எந்த மருத்துவர் உன்னை குணமாக்கியது என ஆச்சரியத்துடன் வினவினார்.
அதற்கு அவன்,
"அய்யா சாமிகளா,...
எந்த மருத்துவமும் என்னை சரி பண்ணலை,
என் செருப்புல குத்தியிருந்த ஆணியை எடுத்தவுடனே என் வலியும் சரியாயிடுச்சு"!
என் நொண்டலும் சரியாகிடுச்சி" என்றான்.
நிபுணர்களிடம் போய்ப் பார்.
உனக்கே தெரிந்திராத பிரச்சனைகளை எல்லாம் உனக்கு இருப்பதாக சொல்வார்கள்.
அப்படித்தான் அவர்கள் சொல்லியாக வேண்டி இருக்கிறது.
உனக்கு எந்த அளவு பிரச்சனைகள் இருக்கிறதோ,
அதை சார்ந்தது தான் அவர்கள் நிபுணத்துவம்.
பார்க்கப்போனால் உன் பிரச்சனை எந்த அளவுக்கு பெரியதாக இருக்கிறதோ,
அந்த அளவுக்கு அவர்களுக்கு அதிக மகிழ்ச்சி.
அப்போதுதானே அவர் தன்னுடைய அறிவையும் திறமையையும் காட்டிக்கொள்ள முடியும்.
உண்மையில் பிரச்சனை வெகு சிறியதாக இருக்கலாம்.
வாஸ்தவத்தில் உண்மையான பிரச்சனைகள் எல்லாமே வெகுசிறிய பிரச்சனைகள்.
நோயின் ஆணிவேரை தேடிச்சென்றால்,
அவை எப்போதும் வெகு சிறிய காரணத்தில் இருந்து தான் தொடங்கி இருக்கிறது என்று அப்போதுதான் புரியும்!!!
#ஓஷோ
'தம்மபதம்