Monday, November 27, 2023

படித்ததில் பிடித்த கவிதை

எல்லா வகுப்பறையிலும்
நான் நானென்று முந்திக் கொண்டு வரும் ஒரு குழந்தை இருக்கிறாள்.

அவளுடைய துருதுருப்பில்
ஒரு வண்டின் ரீங்காரம் இருக்கிறது.

கேட்டதை விட கூடுதலாக ஒரு சாக்பீஸ் எடுத்து வருகிறாள்.

வகுப்பறைக்குள் ஆசிரியர் நுழையும் போது வருகைப் பதிவேட்டைத் தவறாமல் ஒப்படைக்கிறாள்.

வேறு வேலையில் இருக்கும் ஆசிரியரிடம்
'இது உங்க பீரியட்' என்று நினைவூட்டுகிறாள்.

ஆசிரியரின் பீரோவில் 
எந்தப் பொருள் எங்கிருக்கும் என்பது 
அவளுக்கு அத்துபடி.

தேர்வு கால அட்டவணயை மற்றவர்கள் அழிக்காமல் பார்த்துக் கொள்கிறாள்.

ஆசிரியருக்குச் சாதகமாகவும்
சக மாணவர்களுக்குப் பாதகமில்லாமலும் நடக்கும் அவள் மீது 
எந்தப் புகாரும் இல்லை.

ஒருநாள் கூட
அவள் ஒற்றை ஜடையுடன் வந்ததில்லை.

அவள் வராத நாட்களில்
கரும்பலகையை யார் துடைப்பது என்ற கேள்வி எழுகிறது.

வீட்டிலிருந்தபடியே அவள் வகுப்பறையில் நடமாடிக் கொண்டிருக்கிறாள்.

அந்த சமயங்களில் அவளோடே திரியும்
அவள் வகுப்புத்தோழி
அவள் போல் 
நல்ல பெயரெடுக்க முயற்சிக்கிறாள்.

- மா. காளிதாஸ்

No comments:

Post a Comment